Monday, March 31, 2008

அழகு படுத்தும் பாடு !

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. நான் பல முறை யோசித்தது உண்டு - அது இரங்குமா இல்லை கிறங்குமா என்று!

சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து தான் பிரிட்டனே மயங்கி போய் இருக்கிறது. அனைத்து பத்திரிகையிலும் இவரைப் பற்றி தான் செய்தி.

யார் என்கிறீர்களா? அவர் தான் பிரெஞ்சு அதிபர் மனைவி - கார்லா ப்ரூனி . நீங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காக கீழே படம் ஒன்று.



சற்று நாட்களுக்கு முன் நம் குடியரசு விழாவுக்கு பிரெஞ்சு அதிபருடன் இவரும் வருவதாக இருந்தது. அப்போது இவர் காதலி மட்டுமே. கைரோவில் கட்டிப் புரள்வது, பிரமிட் முன் பின்னிக் கொள்வது என்று அமர்களபட்டுக் கொண்டிருந்தது இவர்கள் காதல் வாழ்க்கை. நம்மவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம். .கேர்ள் பிரெண்டை வரவேற்பது பற்றி Protocol எந்த புத்தகத்திலும் இல்லையாம்.சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ப்ரூனி வரவே இல்லை.(ஹும்! நாம் குடுத்து வைத்தது அவ்வளவு தான் !)

சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் தன் மனைவியுடன் இரண்டு நாள் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டார். இவர்கள் வருவதற்கு சற்று முன்பிருந்தே பத்திரிகைகளில் 'ப்ரூனா’யணம் தான்!

ப்ரூனி பிறந்ததிலிருந்து பருவம் எய்தியது வரை, பள்ளிப் படிப்பிலிருந்து பள்ளியறை தோழர்கள் வரை என சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் பெரிது படுத்தி எழுத பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பணி புரிந்தனர் பத்திரிகை நிருபர்கள்.

அவரின் பழைய காதலர்கள் எண்ணிக்கை அதிகமா? மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் எண்ணிக்கை அதிகமா? என்று பட்டிமன்றம் வைக்க சாலமன் பாப்பையாவை கூப்பிடலாமாம். (ரிஷி மூலம் ,நதி மூலம் ,கார்லா ப்ரூனி மூலம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று ஐம்பதில் ஆசை வந்த பிரெஞ்சு அதிபர் கூறுகிறார்)

ப்ரூனி ஒரு மாடல் அழகி ஆக இருந்தவர். பதினைந்து வருடம் முன்பு மாடலிங் உலகில் பிறந்த மேனியாய் திகம்பர சாமியார் ரேஞ்சில் இவர் அருள் பாலித்துக் கொண்டிருந்த காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இவர்கள் வரும் சமயம் பார்த்து வெளியிட்டது ஏல நிறுவனம் ஒன்று. கேட்க வேண்டுமா; வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது. "எப்படி இருந்த இவர் இப்போ இப்படி ஆயிட்டார் " என்று அந்த படத்தை போடாத பத்திரிகைகளே இல்லை.

இவர் என்ன ஆடை அணிவார்? (முதலில் ஏதேனும் ஆடை அணிவாரா?), எங்கெல்லாம் செல்வார், ராணி முன் எவ்வாறு நடந்து கொள்வார் என ஒரே பரபரப்பாய் பத்திரிகைகள் பேசிக் கொண்டன.

நடந்தது என்ன தெரியுமா? ப்ரூனி வந்து இறங்கியது தான் தாமதம்.

தோள் கண்டார் தோளே கண்டார் - அவர்
தொப்பி கண்டார் தொப்பியே கண்டார்!!

(பிரெஞ்சு அதிபரை எவர் கண்டார்? ஒருவரும் இல்லை.)

அவர் நடை அழகை சொல்வதா, உடை அழகை சொல்வதா? உச்சந்தலை தொப்பியை சொல்லவா (அந்த தொப்பி இப்போது பிரபலம். கீழே படத்தில் பார்க்கவும்), உள்ளங்கால் செருப்பை சொல்லவா ? என மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து தள்ளின இந்த பத்திரிகைகள்!

நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும் இன்னும் இளவரசராகவே இருக்கும் பிரின்ஸ் சார்ல்ஸ் அம்மணி விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே ஓடிப் போய் கையை பிடித்து முத்தமிட்டு விட்டார். இவராவது பரவாயில்லை. முதல் மந்திரி கார்டன் பிரவுன் வரும் போதே வாயை முத்தமிடுவது போல் போல் குவித்துக் கொண்டு வந்தார். நடுவில் பிரெஞ்சு அதிபர் வந்து விட - நல்ல வேளை - அவர் சற்று குள்ளமாய் இருப்பதால் களேபரம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் கூட பிரெஞ்சு அதிபர் பேச்சை விட ப்ரூனியின் காலழகை காண்பதில் தான் அனைவருக்கும் கவனமாம்! என்ன சொல்வது போங்கள்!

தமிழ் பேசும் நல்லுலக நண்பர்களுக்காக நான் பொருக்கி எடுத்த புகைப்படங்கள்:

இப்பொழுதெல்லாம் தேவதைகள் தம் சிறகு உதிர்த்து கிறிஸ்டியன் டீயர் (Christian Dior) காஸ்ட்யூமில் வந்திறங்குகின்றனவாம்!!




உருகி வழிவது மெழுகுவர்த்தி மட்டும் அல்ல!




கார்லா ப்ரூனி அருகில் நிற்கும் பாட்டி யார் ? யாரோ இங்கிலாந்து ராணியாம்: (தலைப்பு கொடுத்தது இங்கிலாந்து பத்திரிகைகள்!)




தாத்தா பிலிப் (ராணியின் கணவர்) ராணியை கழற்றி விட்டு ப்ரூனி அருகில் அமர்ந்து விட்டார். ஆசை யாரை விட்டது!



இனியவை நாற்பது: அம்மணியின் வயதை சொல்கிறேன்:



பிரெஞ்சு அதிபருக்கு அரசியலில் ஏன் நாட்டமில்லை என்பது இப்போது புரிகிறது!




கடைசியாய் ஒரு கவர்ச்சிப் படம் - கடற்கன்னிகளில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?




இதை கணினியில் தட்டிக் கொண்டு இருக்கும் போதே "hibernate" மோடில் இருந்து விழித்துக் கொண்டது மனசாட்சி. ஐடியல் உலகை விடுத்து பிராக்டிகலாக விஷயத்தை அணுகத் தெரியாது அதற்கு. அதனால் தான் அதை "hibernate" மோடில் அதிகம் வைத்து விடுகிறேன்!

பிரிட்டன் பத்திரிகைகளுக்குத் தான் பித்து என்றால் உனக்கு எங்கு போயிற்று புத்தி ? எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறதே! திபெத்திய போராட்டமும் சீன அடக்குமுறையும் , இராக்கிய தீவிரவாதமும் திணறும் அமெரிக்க படைகளும்...

போர் வெறும் 'போர்' ஐயா! (நான் மனதை ஐயா என்று விளிப்பது தான் வழக்கம். பா.ம.க. என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்). இஸ்ரேல் - பாலஸ்தீனம் பாரும் ; அங்கு பலருக்கு குண்டு வைப்பது தான் குலத் தொழிலாம். இலங்கை - விடுதலைப் புலிகள் பாரும் . நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பிராண்டிக் கொண்டு இருக்கிறார்கள்; தினத்தந்தியில் வரும் கன்னித் தீவு கதை தான் எல்லாம் - மனிதன் அடித்துக் கொள்வதற்கு முடிவுண்டா ?

சரி ! பெண்ணைப் பற்றியே எழுது - ஆனால் இந்திரா நூயியை பற்றியோ மீரா நாயரைப் பற்றியோ லீனா மணிமேகலையை பற்றியோ எழுதலாம் இல்லையா? இவர்கள் அல்லவா சாதனைப் பெண்கள்?

எழுதலாம்; அதற்காக அழகானவர்கள் எழுத லாயக்கில்லாதவர்கள் என்று இல்லையே! அழகு ஒன்றே போதுமே! ஆஸ்கர் ஒயிலடின் “picture of Dorian gray- வில் வரும் லார்ட் ஹென்றி சொல்வார் – “Beauty is a form of genius--is higher, indeed, than genius, as it needs no explanation... மேலும் இந்த அம்மணி vogue, elle பத்திரிகைகள் நடுவே தாஸ்தாவெஸ்கி புத்தகம் வைத்து படிப்பாராம். நீர் படித்து இருக்கிறீரா?

டால்ஸ்டாயின் அன்னா கரீனினா படித்தில்லயோ? இத்தனை காதலர்கள்?

அவர் சொந்த வாழ்க்கையை விடுமையா! இந்த அம்மணி பெரிய பாடகர். இரண்டு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று இருக்கின்றன இவர் ஆல்பங்கள். இதைக் கேட்டுப் பாரும். புரியும். எவ்வளவு அருமையாக இருக்கிறது;

வெறும் காத்து தான் வருது! கவர்ச்சிப் படம் பார்க்க விடும் கட்டுக்கதை இதெல்லாம். உனக்கே தெரியும்!

இந்த உலகில் இரண்டு வகையான மனம் உண்டு. ஆதரித்து பேசி நம்பிக்கை ஊட்டும் மனம். எதிர்த்து பேசி குழப்பி விடும் மனம். அதில் நீர் எந்த வகை என்று நீரே முடிவு செய்துக் கொள்ளும்!

குழப்பம் என்பது தான் சிந்தனையின் அறிகுறி; மற்றொன்றையும் நினைவு கொள்; பெண் புத்தி பின் புத்தி - எப்பொழுதும் பெண்ணையே நினைக்கும் புத்தி மற்றதில் பின் தங்கி விடும். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கிறது! ரோஜாவில் தானே முள் இருக்கிறது !

உளுத்து போன உபதேசம் ஐயா அதெல்லாம் ! "முள்ளிலும் ரோஜா மலர்கிறதே" இது தான் புது மொழி. கூனி அழகாகவா இருந்தாள்? அவளிடம் கூடத் தான் ஆபத்து இருந்தது! இது அழகியல் ஆராய்ச்சி ஐயா! சொல்லிய ஆசார வித்து எட்டில் இதைப் பட்டியலிட மறந்திருப்பார்கள்! அழகை ரசிப்பதில் குற்றமில்லை!

உலகத்தில் இருக்கிற எல்லா ஜொள்ளர்களும் தவறாமல் சொல்லும் சப்பைக் கட்டு! சபல புத்திக்கு மறு பெயர் !!

இடுப்பளவிலிருந்து கட்டை விரல் நீளம் வரை சொல்லும் சாமுத்ரிகா லட்சணம் எழுதியவர்களும் சபல புத்திக்காரர்களா? இதெல்லாம் ஆபத்தில்லாத ரசனைகள்!!

ஆரம்பத்தில் எல்லாம் ஆபத்தில்லாமல் தான் ....

போதும் ஐயா !! நம் சம்பாஷணையில் சுவாரசியமில்லை; இந்த பதிவில் பார்க்கத் தகுந்தது கார்லா ப்ரூனி படங்களே என்று நண்பன் தீர்ப்பெழுதி விட்டான் ; ஆக நீர் உறங்கச் செல்லும்!!

மனசாட்சியை 'hibernate' மோடில் தட்டி விட்டேன்.

இந்த மனசாட்சியுடன் ஒரே தொல்லை.

சரி அது கிடக்கிறது விடுங்கள் - யாரோ ஜெஸ்ஸிக்கா ஆல்பாவாம்; கொள்ளை அழகாம்! தெரியுமா உங்களுக்கு?

2 comments:

Kumaresan said...

ஆஹா ..அருமையான கட்டுரை & அழகான புகைப்படங்கள் ..பின்ன பூவோடு சேர்ந்த நாறும் மணக்காதா.

பின் பாதி தான் கொஞ்சம் போர். சரி விட்டது தொலையும். ஜெச்சிக்கவை பற்றி ஜொள்ளும் போதாவது உம் மனசாட்சியை கூப்பிடாதீர்

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருகைக்கு நன்றி குமரேசன். கவலைபடாதீங்க! அடுத்த முறை ஜொள்ளும் போது மனசாட்சிக்கு மயக்க ஊசி போட்டுடறேன்! :)