Wednesday, March 12, 2008

ஒரு சதுரங்கச் சக்கரவர்த்தியும் ஒரு சமூக சேவகரும்:

சதுரங்கச் சக்கரவர்த்தி - பாபி பிஷர்

சமூக சேவகர் - பாபா ஆம்தே.

இருவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தாங்கள் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இறப்பால் இணைக்கப்பட்ட இருதரப்பட்ட மனிதர்கள். இந்த வருடத்தின் ஜனவரி மாதம் பிஷரையும் பிப்ரவரி பாபாவையும் கொண்டு சென்று விட்டன.

இவர்களுக்கு என் அஞ்சலி.

பாபி பிஷர்:


சதுரங்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஏக போக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த சோவியத் வீரர்களை தனி மனிதனாக வென்று காட்டியவர் பிஷர். பிஷரை பற்றி அறிய இந்த மூன்று வரிகள் போதும்.

"Don't even mention losing to me. I can't stand to think of it." -- Bobby Fischer

Being a friend of Fischer obviously is no undivided pleasure, though being Fischer seems sadder." -- Hans Ree

My God, it is a miracle! Bobby is so kind, so friendly. He is normal!" -- Boris Spassky (on their first meeting before the '92 rematch)

சதுரங்கத்தில் அதிகம் நாட்டம் கொண்டு காஸ்பரோவையும், ஆனந்தையும், க்ராம்நிக்கையும் பற்றி நான் பேசிக் கொண்டு இருக்கும் போது என் அம்மா பாபி பிஷரையும் , ஸ்பாஸ்கியையும், பெட்ரோஷியானையும் பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்படி தான் எனக்கு பிஷர் முதலில் அறிமுகம். பிறகு ஒரு புத்தகத்தில் எவ்வாறு பதிமூன்று வயது பிஷர் , பைர்னை தோற்கடித்தார் என்று போட்டு இருந்தார்கள். அசந்து விட்டேன். தன் ராணியை தியாகம் செய்து எதிராளிக்கு தண்ணி காட்டி விட்டார். இதை "Game of the century" என்றே சொல்லி விட்டார்கள். நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு க்ளிக்கிப் பார்க்கவும்.

1972 - "match of the century" என்று கருதப்பட்ட போரிஸ் ஸ்பாஸ்கி உடனான உலக சாம்பியன் ஷிப். பிஷர் ஒரு விதத்தில் ஏகலவ்யன் போல் சுயமாக விளையாடி முன்னுக்கு வந்த ஒரு அமெரிக்க ஜீனியஸ். ஸ்பாஸ்கி சோவியத் சாம்பியன். போட்வின்னிக், கோர்ச்னோய், பெட்ரோஷியன், டால் என்ற ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான். சோவியத் அரசாங்கமே அவர் பின்னால்.

பனிப்போர் உச்சமாக இருந்த நேரம் அது. சோவியத் இதை ஒரு மானப் பிரச்சனையாகவே பார்த்தது. இந்த போட்டிக்கு முன்னாலும், அது நடக்கும் போதும் நிகழ்ந்த விஷயங்களை பார்த்தால் உளவுப் படங்களும், கதைகளும் தோற்று விடும். அப்படிப்பட்ட சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்தன. உதாரணத்துக்கு பாருங்கள் - பிஷர் தன் காயை நகர்த்திவிட்டு எழுந்து சென்று விடுவார். மீண்டும் தன் முறை வரும் போது தான் நாற்காலியில் வந்தமர்வார். அவர் எழுந்து செல்லும் போது நாற்காலிக்கடியில் எதோ ஒரு பட்டனை அமுக்கி விட்டு போய் விடுகிறார். அதன் அடியில் இருந்து எதோ கதிரியக்கம் வந்து ஸ்பாஸ்கி மூளையை தாக்கி அவரை யோசிக்க விடாமல் செய்கிறது என்று சோவியத் யூனியன் குற்றச்சாட்டு வைத்தது. விளையாடும் அறையை பரிசோதித்து கே.ஜி.பி.. ஒரு செத்த ஈயைத் தவிர வேறு எதுவும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிஷர் வென்று சாம்பியன் ஆனார்.

இதைப் பற்றி ஒரு அருமையான டாகுமெண்டரி யு ட்யுபில் இருக்கிறது - இங்கு க்ளிக்கிப் பாருங்கள்.

உலக அளவில் இது தான் அவர் கடைசியாய் விளையாடிய ஆட்டம். அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சோகம். தான் பயணம் செய்யும் விமானத்தில் கே.ஜி.பி. குண்டு வைத்து விடுமோ, சோற்றில் விஷம் கலக்குமோ என்றெல்லாம் பல வகையில் பயந்து மன உளைச்சல்களுக்கு ஆளாகி பல நாடுகளில் வசித்து பின்னர் கடைசியாக அவருக்கு முடி சூட்டிய நாடான ஐஸ்லாண்டில் தன் கடைசி காலத்தை கழித்தார்.

செஸ் விளையாட்டில் இவர் காட்டிய புதுமைகளும், செய்த புரட்சிகளும் ஏராளம். சதுரங்க சரித்திரத்தில் இந்த சக்கரவர்த்திக்கு என்றும் தனி இடம் உண்டு.


பாபா ஆம்தே:

ஏஞ்சலினா ஏன் இளைத்து விட்டார், பிரிட்னிக்கு ஏன் பித்து பிடித்து விட்டது என்ற செய்திகள் எல்லாம் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்த போது நடுவில் ஒரு இந்தியரை பற்றி செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

அமெரிக்க பத்திரிகையில் யார் இந்த இந்தியர் என்று படித்த போது தான் தெரிந்தது எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று. இவரைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போனதே என்று குற்ற உணர்ச்சி வேறு தொற்றிக் கொண்டது. (மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசங்களை வெள்ளித் திரையில் பார்த்து பழகியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் அதிகம் சுவாரஸ்யமாய் தெரிவதில்லையோ என்னமோ? )

குஷ்ட ரோகிகளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கும், ஒதுக்கும் சமுதாயத்தில் அவர்களுக்காக ஆனந்த வனம் கட்டியவர். கதராடை அணிந்து காந்தியக் கொள்கைப் படி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் தான் பாபா ஆம்தே.

நாற்பதுகளின் இறுதியில் ஒரு நாள் - மழையில் நடந்து போய்க் கொண்டிருந்த பாபா ரோட்டோரமாய் ஒரு மனிதன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். அந்த மனிதனுக்கு கையில் விரல்கள் இல்லை. புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை தின்றுக் கொண்டிருந்தன. (படிக்கும் போதே ஒரு அதிர்ச்சியாக இல்லை?!). முதலில் பயந்து ஓடியவர் மீண்டும் அந்த துளசிராமிடம் திரும்பி வந்தார். அவனுக்கு உணவும்,மழையில் நனையாமல் இருக்க ஒரு மூங்கில் பந்தலும் அமைத்துக் கொடுத்தார். அவனை அவர் இறுதி வரை மறக்கவில்லை. அன்று ஆரம்பித்தது தான் இவரின் வாழ்நாள் பயணம்.

ஜூன் 1951 - மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், ஒரு நொண்டி மாடு, ஒரு நாய், பதினான்கு ரூபாய் மற்றும் சில நோயாளிகள் - இவர்களை வைத்துக் கொண்டு தேளும் பாம்பும் நிறைந்த ஒரு கரடு முரடான நிலத்தை பச்சை பசுமையான ஆனந்தவனமாக மாற்றிக் காட்டி இருக்கிறார் இந்த பாபா - வித்தையால் அல்ல; வியர்வையால் !! பாவத்தின் சம்பளம் தான் குஷ்டம் என்று மக்கள் கருதி வரும் காலத்தில் அவர்களும் சுய மரியாதையுடன் வாழ வகை செய்திருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்,கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், நிகோல் கிட்மன் என்று என் கனவுக் கன்னிகள் பட்டியல் நீள்கிறது. (ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட்டுக்கு தனியாகவும், கோலிவுட்டுக்கு தனியாகவும் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன்)அது போல இவரும் க்ரீடா கார்போ, நார்மா ஷியரெர் என்று வைத்திருந்தாராம். ஆனால் ஒரு துளசிராம் அவரை மாற்றி விட்டான்.

சொத்து, சுகம் துறந்து (தன் அப்பா பெரிய ஜமீந்தாராக இருந்தும் அவரிடம் இருந்து ஒரு சல்லிக் காசு பெறவில்லை), வேலை துறந்து,(காசு கொழிக்கும் வக்கீல் வேலை)கெளரவம் பார்க்காமல் (தலை மீது மனிதக் கழிவுகளை சுமந்து சென்று இருக்கிறார்)மற்றவர்களின் சேவைக்காக தன் வாழக்கையை அர்ப்பணித்து இருக்கிறார்.

இந்த மகானுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இவர் செய்தவற்றில் கால்வாசி செய்தால் கூட இந்த உலகமே ஆனந்தவனமாக ஆகி விடாது?

2 comments:

SP.VR. SUBBIAH said...

அந்தப் போட்டி நடைபெறுகையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அடுத்த நாள் வரும் நாளிதழில் - அவரின் Step by step ஆட்டத்தை வெட்டி வைத்து அதை தங்கள் வீட்டுச் செஸ் போர்டில் ஆடிப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

அவர்களுள் அடியேனும் ஒருவன்!

அவரைப்போன்ற ஆட்டக்காரர் இனிமேல் பிறக்கப் போவதில்லை!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வாங்க சுப்பையா சார்,
அந்த சமயத்துல பத்திரிகைல எல்லாம் 'ஆஹா' 'ஓஹோ' னு புகழ்ந்து தள்ளி இருப்பாங்களே! நீங்க சொன்னது போல சதுரங்கதுல அவர் செஞ்சது போன்ற புரட்சியை வேற யாரும் செய்ய முடியுமா தெரியல!