Thursday, March 13, 2008

ஏனிந்த அசட்டுத்தனம்?

நம் ஊர் போலீஸ்கார மாமாவின் தொப்பை போல் அமெரிக்க வரைபடத்தில் மேற்கே சற்று உப்பிக் கிடக்கும் இடம் கலிபோர்னியா. இந்த தொப்பையில் தொப்புள் போல் இருப்பது அழகிய சான் பிரான்சிஸ்கோ நகரம். (தொப்பைக்கு மட்டும் தான் போலீஸ்கார மாமா. தொப்புளுக்கு சிம்ரனை நினைத்துக் கொள்ளுங்கள்!).

இந்த நகரத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது கோல்டன் கேட் தொங்கு பாலம். பின்னுள்ள மலைகளுக்கு இது ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல எனக்கு தோன்றும். என் அலுவலகத்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் இந்த சிவப்பு வண்ண பாலம் (இந்த கலருக்கு "international orange" என்று பெயர்) சற்று தொலைவில் தெரியும். மதியம் சாப்பிட்டு விட்டு மந்தமாக இருக்கும் நேரங்களில் இப்படி காலாற நடந்து சுற்றி வேடிக்கை பார்த்து விட்டு வருவோம். கூட வரும் நண்பர்கள் வாயில் 'ஹோமம்' வளர்த்துக் கொண்டு வருவார்கள்.

சரி, இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த கோல்டன் கேட் பாலத்திலிருந்து பசிபிக் பெருங்கடலில் யாரவது ஒருத்தர் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.
அமாவாசை, பௌர்ணமி என்று வந்து விட்டால் இங்கு யாருக்காவது பித்தம் தலைக்கு ஏறி விடுகிறதோ என்னமோ! இது தவறாமல் நடப்பதால் இங்குள்ள சுறாமீன்கள் கூட "இன்று மனித உணவு" என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு் காத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

காசியில் சென்று உயிர் விட வேண்டும் என்று நம்மூர் தாத்தா பாட்டிகள் நினைப்பது போல இது ஏதாவது புண்ணிய ஸ்தலமா தெரியவில்லை. அடுத்த முறை யாரவது குதிக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன். (என்னை முதலில் தள்ளி விட்டு விடுவார் என்று உள்ளுணர்வு சொல்கிறது.)

தண்டவாளத்தில் தலை வைத்தால் ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இங்கு அப்படி இல்லை. எகிறி குதித்த நான்கைந்து வினாடிகளில் மோட்சம் உறுதி. அந்த உயரத்தில் இருந்து எழுப்பதைந்து கிலோமீட்டர் வேகத்தில் சென்று மோதும் போது அது கடலாக இருந்தால் என்ன, கரையாக இருந்தால் என்ன - முடிவு ஒன்று தான். இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இது கூட காரணமாக இருக்கலாம்.

நம்மூரில் ' வாத்தியார் அடித்ததால் பன்னிரண்டு வயது பையன் தூக்கு மாட்டிக் கொண்டான்' என்று செய்தி படிக்கும் போது எனக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. எனக்கு அந்த வயதில் ஒழுங்காக முடிச்சு கூட போட தெரியாது. (இப்போது கூட தெரியாது. எப்பொழுதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் என்றால், அந்த தாம்புக் கயிறு முடிச்சு கூட என் அம்மா தான் போட்டு தருவாள். அவ்வளவு அசமஞ்சம் நான்! இந்த லட்சணத்தில் நான் 'boy scout-ஆக வேறு இருந்திருக்கிறேன்.)

சின்ன வயதில் இருந்து கூட்டாஞ் சோறு, கோலி சோடா, கடலை மிட்டாய் என்று விதம் விதமாய் தீனி போட்டு வளர்த்த உடம்பு; கஷ்டப்பட்டு கணக்கு, வரலாறு, சமூக அறிவியல் என்று வருடா வருடம் படித்து வளர்த்த மூளை. எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்து கொண்டு விடுகிறார்கள். என்ன அபத்தம்! இதை எல்லாம் நினைத்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அவர்கள் அசாத்திய - ஆனால் - அசட்டு துணிச்சல்காரர்களோ என்று தோன்றுகிறது. தற்கொலைக்கு "துணிந்தான்" என்று தானே சொல்கிறோம். இந்த துணிவை எது கொடுக்கிறது? அப்படி மக்களை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுவது தான் என்ன? யாரும் கொலை செய்வதைப் போல் பிளான் போட்டு இதை செய்வதில்லையே? சட்டென்று மூளை மக்கர் கிக்கர் செய்து விடுகிறதா?

ஜப்பானில் அணுகுண்டு போட்ட போது அந்த கதிரியக்க வீச்சில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கண்ணிழந்து, கை இழந்து - உயிரைத் தவிர வேறு என்னவெல்லாம் இழக்க முடியுமோ அவை எல்லாம் இழந்து - வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் இருந்த நிலையில் சொன்னார்கள். "Our fear is not of dying; but of living". அப்படிப்பட்ட சோகமா வந்து விட்டது இவர்களுக்கெல்லாம்?

கடன் தொல்லையால் சில ; காதல் தோல்வியால் சில; காரணமே இல்லாமல் சில. அதீத மன உழற்சிக்கு ஆட்பட்டு அந்த impulse-ல் எடுக்கப்படும் முடிவுகள் தானே இதில் பல. (வறுமையால் பூச்சி மருந்து தின்று இறந்து போகும் ஏழை விவசாயிகளைப் பற்றி ஒரு தனி பதிவு தான் போட வேண்டும்.)

இந்த தோல்விகளையும், பின்னடைவுகளையும் எதிர் கொள்ளும் மனமும் அறிவும் இல்லாமல் போவது ஏன்? உடலை பேணுவது போல் மனதை பேணுவதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதெல்லாம் தான் சான்று.

2 comments:

பாச மலர் / Paasa Malar said...

உண்மையிலேயே தற்கொலைக்கு அசாத்திய தைரியம் வேண்டும்தான்..அது கோழைத்தனமான முடிவு..ஆனால் தைரியமான செயல்தான்...

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருகைக்கு நன்றி பாச மலர்!

நாமெல்லாம் சாவைக் கண்டு பயப்படுவதால் தான் இந்த கண்மூடித்தனமான தற்கொலை முடிவுகள் ஒரு துணிச்சலான (ஆனால் அபத்தமான) ஒன்றாக தெரிகிறதோ என்னமோ?