Wednesday, December 31, 2008

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி!

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் சாயல்:



கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் சாயல்:



ஒரு நாட்டின் ராணி:



சரி யாரிவர்? எந்த நாட்டு ராணி?



ராஜாக்கள் ராணிகள் மேல் நமக்கு என்றும் ஒரு தனி அபிமானம் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளாகட்டும், அம்புலிமாமாவின் கதைகளாகட்டும் - "ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்" என்று தானே கேட்டும் படித்தும் வளர்ந்திருக்கிறோம். கல்கி சாண்டில்யனின் சரித்திர கதைகளின் வெற்றி , வளர்ந்த பின்பும் நமக்கு ராஜா ராணி கதைகளில் இருக்கும் மோகம் கொஞ்சமும் குறையவில்லை என்று தானே பறை சாற்றுகின்றன.(ஒரு வேளை, வளர்ந்த பின்பு நம் மோகம் எல்லாம் சாண்டில்யனின் இளவரசிகளில் மேல் மாறி விடுகிறதோ?!). இப்பொழுது ராணி என்றால் நமக்கு எலிசபெத் பாட்டி மட்டும் தான் நினைவிற்கு வருகிறார். ஹிந்தி படம் பார்பவர்களுக்கு ராணி முகர்ஜி நினைவிற்கு வரலாம்.

ஆனால் நான் சொல்லப் போகும் ராணி ஐ-டெக்ஸ் விளம்பரம் சொல்லும் 'இன்றைய மங்கை'.

இவரைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் கீழ் கண்டவாறு விடை அளிக்கலாம். (அவ்வாறு யாரும் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்களே உங்களை கேட்டுக் கொண்டு மேலெந்த தர்க்கமும் செய்யாமல் கீழுள்ள கதையை படியுங்கள்!)

பால காண்டம் முதல் வேலை காண்டம் வரை.

பிறந்தது குவைத். பெற்றோர்கள் பாலஸ்தீனியர்கள். கற்றது மேலைநாட்டுக் கல்வி. கைரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பிசினஸ் டிகிரி. வளைகுடா போரின் போது அம்மான் நகரம். சிறிது காலம் சிடி பேங்க், மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை.

காதல் காண்டம் முதல் குழந்தை காண்டம் வரை:

இளவரசர் நடத்தும் ஒரு விருந்துக்கு இவருக்கும் அதிர்ஷ்டவசமாக அழைப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தது என்ன என்று புத்திசாலி வாசகர்கள் நீங்கள் யூகிக்க மாட்டீர்களா? ஒரு 'கப்புச்சினோ காபி'யின் போது 'கண்ணும் கண்ணும் நோக்கியா'. அதன் விளைவாய் இப்பொழுது நான்கு 'குவா குவா'.

இதற்கு நடுவில் என்ன ஆயிற்று தெரியுமா?

தனக்கு பிறகு அரியணை தன் தம்பிக்கு தான் என்று சொல்லி வைத்திருந்த அந்த நாட்டு மஹாராஜா மரணப் படுக்கையில் மனம் மாற்றிக் கொண்டார். யாரும் எதிர் பார்க்காத விதமாய் அரியணை தன் மகனுக்குத் தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த புண்ணியவான்.

இளவரசர் ராஜாவானார். இளவரசி ராணியானார். மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

எல்லாம் சுபம் சுபம் சுபம்.

இதில் பங்கேற்றவர்கள்:

காலம் சென்ற ராஜா - ஹுசைன்
ராஜாவான இளவரசர் - அப்துல்லா
ராணியான இளவரசி - நம் காவியத் தலைவி - இந்த கட்டுரையின் நாயகி - தலைநகரமான அம்மானில் இருந்து ஆட்சி செய்யும் பெண் மான் - ரானியா!

சரி எந்த நாடு என்று கண்டு பிடித்தீர்களா? ஜோர்டான் என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்!

சரி இவரைப் பற்றி பேச காரணம் என்ன? இவருக்கு சமீபத்தில் "youtube visionary award" கொடுத்தார்கள்.

எதற்கு?

ஜோர்டான் அரபு நாடுகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த அரபு நாடுகள் பற்றிய நம் அபிப்பிராயம் என்ன?

அரபு நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். ஆண்கள் எல்லாம் வெள்ளை அங்கி அணிந்து குல்லா போட்டு தாடி வைத்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் கண்கள் கூட வெளியே தெரியாதபடி பர்தா அணிந்திருப்பார்கள். இதில் பெரும்பானோர் பணக்கார ஷேக்குகள். எண்ணைக் கிணறு வைத்திருப்பார்கள். வேண்டுமளவு பணம், வேண்டுமளவு மனைவிகள். கல்யாணத்திற்கு முன் 'கச முசா' என்றால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். பெண்கள் கலவிக்கு மட்டுமே ; கல்விக்கு இல்லை என்பது தான் இல்லையா ?

(ஒரு வேலை நீங்கள் சவுதியிலோ, ஐக்கிய அரபு நாடுகளிலோ பணி புரிந்திருந்தால் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அரபு நாடுகள் அனைத்தும் ஒரு போலவே அல்ல. )

ஓரளவுக்கு உலகம் பற்றி அறிந்த நாமே இவ்வாறு தான் கருத்து வைத்திருப்போம் என்றால் அமெரிக்கா தான் உலகம் என்று நினைத்திருக்கும் அமெரிக்கர்கள் என்ன நினைத்திருப்பர்கள்? சி.என்.என்னிலும் fox நியூசிலும் காட்டும் அரைகுறை செய்தியை பார்த்து ஒரு லூசுத்தனமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இத்தகைய தப்பான எண்ணங்களை களைவதற்கு இவர் ஒரு "youtube channel" ஆரம்பித்தார். அனைவரையும் இஸ்லாத்தை பற்றியும், அரபு நாடுகள் பற்றியும் அங்கு பெண்களின் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கச் செய்து விளக்கம் அளித்துள்ளார்.

பெண்கள் பள்ளிக்கு செல்வார்களா இல்லை பள்ளிவாசல் மட்டும் தான் செல்வார்களா, ஆண்கள் எத்தனை பேருக்கு குண்டு வைப்பது குலத்தொழில் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர் மக்கள்.

அதெல்லாம் நீங்கள் இங்கு காணலாம்.

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு "லேட் ஷோ வித் லெட்டர்மேன்" தெரியாமல் இருக்காது. அந்த பாணியில் இவர் செய்த ஒரு நக்கல் முகப்பிலேயே இருக்கிறது. அதற்கு போவதற்கு முன் நீங்கள் இங்கேயும் சென்று பார்க்க வேண்டும். கூகுளின் Zeitgeist(2008) என்ற கருத்தரங்கில் இவர் பேசியதையும் கேளுங்கள். ஆரம்பமே அபாரம்.

" ஜோர்டான் என்று கூகிள் செய்தால் 184 மில்லியன் ஹிட்ஸ். UK என்று செய்தால் 358 மில்லியன் ஹிட்ஸ். US என்று செய்தால் 795 மில்லியன் ஹிட்ஸ். ஆனால் கூகிள் என்றே கூகிள் செய்தால் 1.9 பில்லியன் ஹிட்ஸ். இப்பொழுது தெரிகிறது உலகை யார் ஆளுகிறார்கள் என்று! "

(இதை நான் இப்பொழுது செய்து பார்த்தேன். எல்லாம் வேறு வேறாக வருகிறது என்பது தனி செய்தி!)

இவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (கூடவே இவர் கண்களும்). இவர் பெண் உரிமை பற்றி பேசியது, உலக பொருளாதார கருத்தரங்கில் பேசியது, எவ்வாறு ஜோர்டனை ஆட்சி செய்கிறார் என்பது பற்றி எல்லாம் வலையில் விஷயங்கள் விரவி கிடக்கிறது. கூடவே இவர் மூக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா, நாக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா என்பது போன்ற சுவையான தகவல்களும் கிடைக்கலாம். ஆக இதையெல்லாம் பொறுமையாக மொழிமாற்றம் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் போரடிக்கிறது. இந்த கட்டுரை ஒரு அறிமுகமும், சிறு குறிப்பும் மட்டும் தான். இவர் பேசியது பிடித்திருந்தால் நீங்களே கொஞ்சம் தேடிப் படிக்க மாட்டீர்கள்? அதற்கு ஒரு ஆரம்பமாக இதோ இவரின் வலைத்தளம் இங்கே.

Wednesday, December 3, 2008

மணிநூபுரதாரீ

ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும். ஜி டிவியின் 'சரிகமப'வில் அமானத் அலி பாடி இருக்கும் "அலுபேலா சஜனு ஆயோரி" கேட்டு இருக்கிறீர்களா ? சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா? அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் "இசையில் தொடங்குதம்மா" பாட்டு? சும்மா பிரித்து மேய்ந்து இருப்பார்கள்.

இப்படி எல்லாம் பாட்டு கேட்டால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கீதக் குயில் (காகம், கழுதை எல்லாம் கூட) விழித்துக் கொண்டு விடும். உடனே குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் பாடினால் தான் என் இசைத் தாகம் அடங்கும். அதற்கு குளியலறை ஏன் ? மற்றவர்களுக்கு நம் இசைக் கடாட்சத்தை அருள வேண்டாம் என்பது ஒன்று. இன்னொன்று கமல் ஒரு முறை சொன்னது போல குளியலறையில் பாடும் பொழுது அந்த ஈரபதத்திற்கும், நம் குரல் அந்த நெருங்கிய சுவர்களில் எதிரொலித்து கேட்பதற்கும், மிக நன்றாக பாடுவதாக தோன்றும். அந்த தோற்ற மயக்கமே கொடுக்கும் ஒரு சந்தோஷ மயக்கம். ஆக இப்படியாக சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு நான் பாத்ரூம் சிங்கர் ஆகிவிடுவேன்.

என் சரீரம் குச்சி என்றாலும் சாரீரம் கட்டை தான் . அதை வைத்துக் கொண்டு தான் சங்கீத சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுப்பது எல்லாம். சங்கீத சாகரம் - நான் பாடினால் சங்கீதம் நாங்கள் சாகிறோம் என்று தான் சொல்லுமோ என்னவோ.

இப்படித் தான் ஒரு முறை, இளையராஜா முதன் முறையாக மேடைக் கச்சேரி போட்டார், தெரியும் தானே? அவர் "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு? குளியலறைக்கு தான். சுமார் ஒரு மணி நேரம் அங்கு சாதகம். அதுவும் என் தேவீஈஈ இ இ இ இ இ ஈ ஈ என்று வரும் நடுவில். இந்த தேவியை மட்டும் ரசித்து ருசித்து ஆலாபனை செய்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் வந்து கதவை தட்டினான்.

"நண்பா, நானும் ஒரு அரை மணி நேரமா பாக்கறேன். அந்த தேவியை இப்படி போட்டு இழுத்தீனா மூதேவி கூட கிட்ட வர மாட்டா என்றான். சரி வெளிய வா, பாத்ரூம எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு நான் பண்ணனும்". ( அது அட்டச்டு பாத்ரூம் என்றும் சொல்ல வேண்டுமா ? )

"ஹும், நானும் பாடி இளகிய மனச கரச்சு அழுகை வர வெக்கணும்னு பாக்கறேன்.. இதை கேட்டு ஒனக்கும் வருதே...சரி சரி..போ போ..."

ஆனால் இதற்காக எல்லாம் நான் மனம் சோர்ந்து விடுவதில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாய் இன்னமும் இந்த சங்கீத வேதாளத்தை பிடிக்க ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன் - குளியலறைக்கு.

நான் பிறந்தது என்னமோ இத்தனைக்கும் திருவையாற்றில். "இங்கா" சொல்லும் குழந்தையாய் தியாகராஜர் சமாதியின் முன் தான் விளையாடி இருக்கிறேன். இருந்தும் எந்த பாட்டு ஞானமும் வந்ததாய் தெரியவில்லை.

ஆரம்பத்தில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கினாள் என் அம்மா.

"எங்க என் பின்னாடியே பாடு பாக்கலாம்."

"மணி நூ புரதாரி......ராஜ கோபால..."

"அம்மா என்னமா நீ, சித்தப்பா பேர எல்லாம் சொல்ற...".

"மணிகோ மேதக லோஹித க நீல
மரகத ஜால வாயூஜ ஜாலா....."

அம்மா , நீ அப்பா பேரு சொல்ல மாட்ட தான...ஆனா " ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ".. அப்படீன்னு சுலோகம் சொல்றா மாதிரி அப்பா பேரையும் சொல்லிடுவ தான? தாத்தா பேரையும் இந்த மாதிரி எங்கயாவது நைசா சொல்லிடுவியாம்மா ?

இதென்னடா வம்பு என்று "சரி, நீ பாட்டு கத்துண்டது போறும். ஏந்து போ" என்றாள்.

அப்பாடா நிம்மதி என்று நானும் ஓடி போய் விட்டேன்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு சென்ற பொது அவர் பெண் பாட்டு வகுப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நானும் வருகிறேன் என்றேன். பாட்டு தெரியுமா என்றாள்.

ஓ! என்று சொல்லி, 'ஸ்ரீ கன நாத சிந்துரா வர்ண' என்று ஒரு ஆரம்ப வகுப்பின் அரிச்சுவடி பாட்டை ஆரம்பித்து 'லம்போதர லகு மிக ரா' என்று சொல்லும் போதே, நல்ல வேளையாய்,

" சரி , நீயும் என்னோட ரா" என்று அழைத்துக் கொண்டு போனாள். ( அந்த வரிக்கு அடுத்து வரி என்ன என்று எனக்கு தெரியாது! )

"மாமி, அத்தை பையன்."..

"வாடா கொழந்தை, உக்காரு. பேரு என்ன?"

சொன்னேன்.

"நான் பாட பாட இதோ இவாளோட சேர்ந்து நீயும் பாடணும் சரியா?"

தலையை நன்றாக ஆட்டிவிட்டு போய் அமர்ந்தேன்.

"காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தனிலே
வானளாவ கோவில் கொண்ட அரங்கனே!"

எல்லாரோடு நானும் பாட, என் சத்தத்தில் அனைவரின் குரலும் அடங்கி விட்டது.

"கொழந்தை, அவ்ளோ சத்தமா எல்லாம் அரங்கனை அழைக்க வேண்டாம். மெதுவா பாடு. சரியா?"

வாயைத் திறந்தாலே "பே" என்று தான் வரும். நமக்கு சுருதி பேதமும் தெரியாது, சத்த பேதமும் தெரியாது.

"சரி கொழந்த, இன்னிக்கு நீ இவா எல்லாம் எப்படி பாடறானு கவனி போறும்."

அடுத்த நாளில் இருந்து அரங்கனை வீட்டில் இருந்தே கூப்பிடுவதாய் முடிவு செய்து விட்டேன்.

இப்படியாக போய் விட்டது என் பாட்டு படிப்பு.

கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல; கேட்பதற்கு கூட பிரம்ம பிரயத்தனம் பட வேண்டும். எதோ இம்போசிஷன் கொடுத்து போல ஒவ்வொரு வரியையும் நூறு முறை பாடுவார்கள். அதை கொஞ்சமேனும் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு கேட்பதே பனிஷ்மென்ட் போல தான். டெஸ்ட் மாட்ச் கிரிகெட் கூட பார்த்து விடலாம். இதற்கு அதையெல்லாம் தாண்டிய அசாத்திய பொறுமை வேண்டும். நமக்கு தான் அது கிஞ்சித்தும் இல்லையே!

கர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது என்றால் தியாகராஜ ஆராதனையின் போது அனைவரும் சேர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடுவார்கள் பாருங்கள் அது தான். சும்மா விறு விறு வென போகும்! அதிலும் கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு' வந்து விட்டால் இதில் ஏபிசிடி தெரியாதவர்கள் கூட தலையை ஆட்டி தொடையில் தட்டி பாட ஆரம்பித்து விடுவார்கள். படு ஜோராக இருக்கும்.

இப்பொழுது அதை எல்லாம் தாண்டி அனைவரையும் போல அமெரிக்கா வந்தாகி விட்டது. இங்கு பிரிட்னி , பியான்சே, ஷகிரா தான் சங்கீத மும்மூர்த்திகள். இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் உலக இசையாக்கும் - விவால்டி, ரஷ்யன் ஹிப் ஹாப், பிரஞ்சு மெலடி, ஆஸ்திரேலியன் ராக், ஆப்ரிகன் மியூசிக் இப்படியாக பல! ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான்!)

ஆனால் தமிழிலும் மற்றதிலும் எத்தனையோ பாடல்கள் பிடித்தாலும் பாட்டு முடிந்த மாத்திரத்தில் என்னை இன்றும் குளியலறைக்கு ஓட வைக்கும் திறன் பெரும்பாலும் இளையராஜாவின் இசைக்கு தான் உண்டு.

தியாகராஜரோ திருவையாறு பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் சங்கீதம் அறியாத பல கோடானு கோடி சாமான்யர்களுக்கும் இசைஞானி தான் குரு ; அவர் இசை தான் தோழன்!

Sunday, November 23, 2008

வாரணம் ஆயிரம் - பட விமர்சனம்



நடிகர்களை விடவும் இயக்குனர்களுக்காக படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கில்லி, சுள்ளி, பில்லா, குல்லா எல்லாம் பார்த்தது இல்லை. இது கௌதம் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இணையத்தில் ஒரு நல்ல ப்ரிண்டாக தேடிப் பார்த்தேன். (நான் ப்ளோரிடாவில் இருக்கும் இந்த ஊரில் தமிழ் படங்கள் வெளியாகும் வாய்ப்பே இல்லை. என்ன செய்வது? தியேட்டரில் பார்க்கும் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் மோசம் இல்லை.)

வாரணம் ஆயிரம் - ஆயிரம் யானைகள். பெயர் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு ஏன் இந்த பெயர் என்று தான் புரியவில்லை. பெயர் பிடித்திருக்கிறது என்று நான் வந்தியதேவன் என்று வைத்துக் கொண்டது போல கெளதம் வைத்திருக்க வேண்டும். பட இறுதியில் பெயர் விளக்கம் சொல்வெதெல்லாம் சப்பைக்கட்டு தான்!

சரி படத்திற்கு வருவோம். ஒரு வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு - மகன் பார்வையில்.
தந்தையாகவும் மகனாகவும் சூர்யா. எப்படி இந்தியன் படத்தில் தாத்தா கமல் தான் ஹீரோவோ அது போல இதில் தந்தை சூர்யா தான் உண்மையான ஹீரோ. எல்லா காலங்களிலும் மகனுக்கு உற்சாகம், ஆதரவு, வழி காட்டுதல் தந்து தந்தை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று நம்மை சொல்ல வைக்கிறார். பாச போராட்டங்களோ, மிகை உணர்ச்சி காட்சிகளோ இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது சற்று பணக்கார மற்றும் உயர் மத்திய தர குடும்பங்களுக்கு உரித்தான விஷயம் என்றாலும், இதில் சிம்ரனும், சூர்யாவும் பேசுவது அவ்வளவாக உறுத்தலாக இல்லை. ரசிக்கும்படியாகத் தான் இருக்கிறது. french beard அருமையாக பொருந்துகிறது. Respectability கொண்டு வருகிறது. நடிப்பும், பாடி லாங்வேஜும் சூப்பர். விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.

மகன் சூர்யா - ஒல்லி ஸ்டுடென்ட் சூர்யா, தாடிக்கார சூர்யா, பாடி பில்டர் சூர்யா (கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பு பல இடங்களில் நடித்திருக்கிறது) - எல்லாவற்றுக்கும் மெனக்கட்டு இருக்கிறார் - அதற்காக சபாஷ் சொல்லலாம். நடனத்திலும் நல்ல தேர்ச்சி. காதலிப்பதில் ஆரம்பத்தில் ஒரே வழிசல். போக போக தேறி விடுகிறார். அங்கங்கே மெல்லிய நகைச்சுவை நம்மிடம் புன்னகையை வரவழைக்கிறது. (Woods are lovely, dark and deep! அப்படியா மச்சான்?) (நான் எம் எஸ் படிக்க போறேன். - இந்த அமெரிக்காவுல ரெண்டு வருஷம் சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா?). கிடார் மீட்டிக் கொண்டு வரும் இடங்களில் தானே பாடி இருப்பார் போல. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்திருக்கலாமோ?

சிம்ரன் - தந்தை சூர்யாவின் ஜோடி - அடக்கமான நடிப்பில் மிளிர்கிறார். கல்லூரி கால சிம்ரனின் மேக்-அப் - உடை, சிகை, நகை - எல்லாம் அச்சு அசல் ஓம் சாந்தி ஓம் தீபிகா படுகோனை ஞாபகப்படுத்துகிறது. - (உப செய்தி : தீபிகா தான் இதில் நடிப்பதாக இருந்தார் - ஓம் சாந்தி ஓம்-இல் நடிப்பதற்காக விலகிக் கொண்டார்). வழக்கமான தமிழ் சினிமா அம்மாக்களை போல் அழுகை, அலட்டல், புலம்பல் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு குறை. இந்த அம்மாக்களுக்கு ஏன் கொஞ்சம் மேக்-அப் போடக் கூடாது? கதா நாயகிகளை விட அழகாக தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகவா? கதாநாயகிகள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தை தங்கையை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வருவார்களே, அது போலவா? ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக எங்கள் உறக்கத்தில் உலா வந்த தங்கத் தலைவியை கொஞ்சம் அழகான அம்மாவாக காட்டி இருக்கக் கூடாதா?

சமீரா ரெட்டி - நமக்கு பிடித்த கொழுக் மொழுக் வகை. இவரின் சிறப்பம்சம் கண்களா, கன்னமா, உதடுகளா என்று குமுதம் கேள்வி- பதிலுக்கு எழுதிக் கேட்கலாம். சிரிக்கும் போதெல்லாம் "அழகோ அள்ளுதே" என்று சூர்யா போல் பாட வைக்கிறார். ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவருக்கு இதில் படு பாந்தமான ரோல். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் அழகாக இவரைக் காட்டி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மேக்-அப்பில் நம்மவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டுமோ? இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். கௌதமின் கதாநாயகிகள் கொஞ்சம் நிதானமான வகை என்பது தெரிந்தது தான். இருந்தாலும் இவரை கொஞ்சம் 'துரு துரு' பெண்ணாக காண்பித்து இருக்கலாமோ? பின்னணிக் குரலும் பெரிதாக ஒத்துப் போவதாக தெரியவில்லை. இவராவது பரவாயில்லை. அடுத்த கதாநாயகி ஒரே கரகர பிரியா!

திரைக்கதை:

இதை தான் ஒரு வரியில் முன்பே சொல்லி ஆகி விட்டதே. தந்தை சூர்யா, சிம்ரன் என்று மெச்சூர்டான இரண்டு கதாபாத்திரங்களை படைத்ததற்கு கௌதமை பாராட்டலாம். மகன் சூர்யா, முன் பாதியில் வீடு கட்ட வேண்டும், துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்கு வைத்திருந்தார். பின் பாதியில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ, இப்படி வாரணம் ஆயிரம் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போல. இரண்டு கதாநாயகிகள் என்பதால் முதல் காதல் கை கூடவில்லை என்று ஊகிப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. அதற்கு பிறகு போதை, கஞ்சா, கன்றாவி என்று ஒரே இழுவை. அது தான் முடிந்தது என்றால் குழந்தை கடத்தல், ஹிந்திக்கார வில்லன், போரடிக்கும் சண்டைகள் - வேண்டாத 'தம்'மை அடிக்கவும், வராத சிறுநீரை கழிக்கவும் பலர் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்பது நான் பார்த்த திருட்டு வீடியோவில் நன்றாகவே தெரிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மூக்கில் பஞ்சடைத்த பிணமும், திவச காட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? யதார்த்தம் என்றாலும் அருவருப்பு தான்!

படம் நெடுகிலும் பல நல்ல வசனங்கள் உள்ளன.

"ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்".
"கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்."
"உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்."


துணுக்கு:
இந்த படத்தில் யாரும் " I love you" என்று சொல்வதில்லை. "I am in love with you" என்று தான் சொல்கிறார்கள். அப்படி சொல்ல வைப்பதில் என்ன அலாதி பிரியமோ கௌதமிற்கு.

இசை:

ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள். சொல்ல வேண்டுமா? முன் தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே - இவை எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நம்மை முணுமுணுக்க வைக்கும். நித்யஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ-ஐ தொடர்ந்து சுதா ரகுநாதனும் வந்தாகி விட்டது - "அனல் மேலே பனித்துளி" நம்மை மயிலிறகால் வருடுகிறது.

பாடல் வரிகள்:

தாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும். நேரம், அளவு கருதி இரண்டு பாடல்களின் பல்லவி மட்டும் இங்கு !

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை!!
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை!!

அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித் தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி?


படத்திற்கு பலம் சூர்யாவும் பாடல்களும். பலவீனம் திரைக்கதை. இடைவேளை வரை ராஜ நடை போட்ட வாரணங்கள் , பிறகு வாரிக் கொண்டு விழுகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ? என் நண்பர்கள் பலருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று முயன்று பாருங்கள். ஒன்றும் தப்பில்லை!

Monday, October 13, 2008

ஈமெயில் forwards - ஒரு பார்வை

நாள்தோறும் நமது இன்பாக்ஸ் திறந்தால் பல Forwards குவிந்திருக்கும். நம் வெட்டிப் பொழுதைக் கழிக்க பெரிதும் உதவுபவை இவை. இவற்றில் பல ரகம் இருக்கிறது.


"so cute" forwards:

குழந்தைகளில் ஆரம்பித்து நாய்க்குட்டி, பூனைக்குட்டி. பன்றிக்குட்டி, கோழிக்குஞ்சு என எல்லாம் "So cute" சப்ஜெக்டுடன் வரும். இவை எல்லாம் தொண்ணூறு சதவிகிதம் பெண்களால் forward செய்யப்படுபவை.

ஆண்களுக்கு "so cute" forwards: நயந்தாரா, ஷ்ரேயா, இலியானா, த்ரிஷா, அசின் படங்களுடன் வரும் forwards தான்! மலையாள மயில்கள், தெலுங்கு தேச கிளிகள், மும்பை இறக்குமதிகள் என இதற்கு 'எல்லைகளே' இல்லை.

காதல், நட்பு, பாசம் Forwards:

நீ மழையில் நனைந்தால் நான் குடையாய் வருவேன் ; உனக்கு சளி பிடித்தால் நான் விக்ஸாக வருவேன் என வரும் காதல் கவிதைகள். இவை வித விதமான 'ரசிகர்'களால் எழுதப்படும். (நானும் பல முயன்றிருக்கிறேன்)

காதலித்து பார்! கரும்பு கசக்கும்; வேப்பங்காய் இனிக்கும்; உப்பு புளிக்கும்; புளி உவர்க்கும் என்பது போல் பல Forwards பொன்மொழிகளுடன் வரும்.

இதை எல்லாம் படித்து விட்டு அடுத்த சீட்டு அம்பிகாவிற்கு உடனே அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து impress பண்ணலாமா என்று தோன்றும். (அவளிடன் ஏற்கனவே இரண்டு மூன்று அல்வா பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து விட்டு மனம் சோர்ந்து விடும். எல்லா இடங்களிலும் competition!!)

சில மக்கள் தங்கள் கல்லூரி, ஐடி-அலுவலக காதல் கதைகள் எல்லாம் எழுதுவார்கள் - எவ்வாறு இருவரும் நண்பர்களாய் இருந்தார்கள். வாடா போடா என்று செல்லமாய் பேசிக் கொண்டார்கள். காதலை சொல்லாமல் மனதிலேயே வைத்து துடித்தார்கள். புத்தகம், ஜோக், திரைப்படம், பிறந்தநாள் கேக் , சுற்றுலா என தாங்கள் அன்னியோன்யமாய் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து கடைசியில் "பட்சி பறந்தது" என்று சோக கீதம் வாசிப்பார்கள். (அல்டர்நேட் எண்டிங்: பறக்க போகும் சமயத்தில் காதலை சொல்லி பிறகு சுபம் சுபம்!)

அடுத்த வகை நட்பு வகையறா - கஞ்சி குடித்த நாட்களில் இருந்து சரக்கு அடித்த நாட்கள் வரை, கடலை கொறித்த நாட்களில் இருந்து கடலை வறுத்த நாட்கள் வரை , நாயர் கடையில் சாயா குடித்தோமே, ஆயா வீட்டில் பாயா குடித்தோமே, பிட்டு அடித்தோமே, பன் தின்னோமே, சைட் அடித்தோமே, பலான படம் பார்த்தோமே இன்று நீ எங்கேயோ, நான் எங்கேயோ என நெஞ்சை நக்கும் வரிகளுடம் வரும் கவிதை, கட்டுரைகள் .

நண்பன் என்பவன் அழுதால் அரவணைப்பான்; விழுந்தால் தூக்கி விடுவான் ; தூங்கினா எழுப்பி விடுவான் என இலக்கணம் சொல்லி இதை உங்களின் நண்பர்கள் பத்து பேருக்கு forward செய்யுங்கள் என்று வரும்.

அடுத்து தாய்ப்பாசம் வகையறா - பத்து மாதம் சுமந்து பெற்றவள் தாய் ; பிறந்தவுடன் பால் கொடுத்தவள் தாய் ; பசித்தால் சோறு போடுபவள் தாய் என நாம் இதுவரை கேள்வியே பட்டிராத பல புது தகவல்களுடன் பாசத்தை பிழியும் வகைகள். பீம் சிங், லிங்குசாமி படங்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இவற்றை உருவாக்கி இருக்கலாம் என்பது என் ஊகம்.


இவை போக திடுக்கிடும் தகவல்களுடன் மக்களுக்கு "விழிப்புணர்ச்சி" அளிக்கும் Forwards:

தியேட்டரில் எய்ட்ஸ் ஊசி வைப்பார்கள்;
மருத்துவமனை டாய்லெட்டில் கருஞ் சிலந்தி கடித்து கொடிய நோய் வரும்

திவ்யா சிங்-இன் கணவர் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார் அவருக்கு உதவுங்கள் (இந்த ஈமெயில் மட்டும் பத்து வருடங்களாக உலா வருகிறது. அவர் கணவருக்கு புற்று நோய் இல்லை என்பது தான் உண்மை. யாரோ செய்த விஷமம் இது.)

இத்தகைய மெயில்களை forward செய்வதற்கு முன்பு இவை உண்மையா பொய்யா என்று கண்டு பிடிக்க கூகிளில் ஒரு முறை தேடினாலே போதும்; தெரிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள் நம் மக்கள்!!

ஒழுங்காக அறிந்து கொள்ளாமல் செய்யும் தவறான பிரச்சார forwards:

ஜன கன மன கிங் ஜார்ஜை புகழ்ந்து எழுதியது
தாஜ் மகால் உண்மையில் "தேஜோ மகாலயா" என்ற சிவன் கோயில்

(இவை ஏன் தவறான பிரச்சாரம் என்பது விக்கிபீடியா , கூகிளில் பார்த்தால் தெரிந்து விடும்.)

பல Forwards அருமையான இருக்கும். management lessons, உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் என்று. ஆனால் சில forward-களில் விஷயமே எங்கிருக்கிறதென்று தெரியாது. ஈமெயில் செயின் அவ்வளவு பெரிதாக இருக்கும். ஐம்பது பக்கங்கள் scroll பண்ண வேண்டி இருக்கும்.

ஈமெயில் எட்டிகெட்(email etiquette) பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதோ எனக்குத் தெரிந்த சில: (இவை forward சம்மந்தப்பட்டவை மட்டுமே)

1. பல வகை நட்பு வட்டங்களுக்கு ஒரே மெயிலில் forward செய்வதாக இருந்தால் அவர்கள் மெயில் ID-ஐ BCC-ல் போட வேண்டும். (தங்கள் மெயில் ஐடி தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒருவருக்கு தெரிவதில் பலருக்கு சம்மதம் இல்லை.)

2. சப்ஜெக்டில் ஆயிரம் தரம் "fwd:" இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்

3. வேறு ஒருவர் நமக்கு forward செய்ததை நாம் மற்றவருக்கு அனுப்பும் முன் அந்த ஈமெயில் செயின்-ஐ நீக்கி விட்டு விஷயத்தை மட்டும் வைக்க வேண்டும்.

4. தவறான பிரச்சாரங்களை "Forward" செய்யக் கூடாது.

5. "Hoax mails" எனப்படும் புரளி வகையறாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கூகிளில் தேடி உண்மை என்று அறிந்த பிறகே forward செய்ய வேண்டும்.

உங்களுக்கு மேலும் தெரிந்தால் தெரிவியுங்களேன்!

Friday, April 25, 2008

முருகன் கொடுக்காத இரண்டு! (வ.வா.ச. போட்டிக்கு )

"பரத், ரெடியா, பிராக்டீஸ் போலாமா?" விக்னேஷ் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

"அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு...டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன் !"

சுற்றி பார்த்தான் விக்னேஷ். மேசைக்கு அடியில் இருந்த ஆல்பம் புக் ஒன்று கண்ணில் பட்டது. எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். டபுள்யு. ஜி.கிரேஸில் இருந்து ஆரம்பித்து ரஞ்சித் சிங்க்ஜி, ப்ராட்மன், லென் ஹட்டன் , கேரி சோபர்ஸ், கவாஸ்கர் என வரிசையாக படங்கள். இவற்றுக்கு நடுவில் சட்டென்று கண்ணில் பட்டது அந்த தினமணி நாளிதழ் துண்டு. ஏதோ ரஞ்சி இறுதி விளையாட்டை பற்றி எழுதி இருந்தது.

பரத் வந்ததும் கேட்டான்.. " இது என்ன? அப்பா விளையாடினதுனு எடுத்து வெச்சுருக்கியா?"

" அது மட்டும் காரணம் இல்லை... இதுக்கு பின்னாடி ஒரு பெரிய்ய கதை இருக்கு...கேட்டா நீயே நம்ப மாட்ட....."

பரத் சொல்ல ஆரம்பித்தான்.....
----------------x-------------------x ---------------X-----------------X--------X----

1972 - ரஞ்சிக் கோப்பையின் இறுதி போட்டி - பாம்பே அணிக்கும் தமிழகத்திற்கும் இடையே.

பாம்பேயின் இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.

தமிழக அணியின் ரஞ்சி காப்டன் சுந்தரம் தன் டீம் மேட்களை கூப்பிட்டான்.

"வாமனா, நீயும் கல்யாணும எப்படி முதல் பதினைந்து ஓவர் எப்படி போட போறீங்க அப்படீங்கரதுல தான் நம்ப வெற்றியே அடங்கி இருக்கு. ஷர்மா,

வடேகர், மங்கட் மூணு பேரும் நேஷனல் லெவல் ப்ளேயர்ஸ். யாரையும் செட்டில் ஆக விடக் கூடாது. இவங்களை எடுத்துட்டா வெங்கி மீதி பேரை காலி பண்ணிடுவான்.

"பெல்லியப்பா, விக்கெட் கீபிங் பண்ற நீ! கோல் கீபிங் இல்ல. பந்தை தடுத்தா போதாது. கேச் பிடிக்கணும். கோட்டை விட்டு நிக்காத...! பர்ஸ்ட் இன்னிங்க்ஸ்ல் ஏற்கனவே நாம்ப பத்து ரன் கம்மி. "

"க்ளோஸ் பீல்டிங்க் எல்லாம் டைட்டா இருக்கணும். சும்மா முன்னாடி நின்னு தூங்கி வழியாதீங்க. புரிஞ்சுதா?

"கமான் பாய்ஸ் , பக்கில் அப் ....!!"

போட்டிக்கு முன்பிருந்தே ஒரேயடியாக தலை கனம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் பாம்பேகாரர்கள்..."தோற்பது என்றால் என்ன என்பது மறந்து விட்டது" என்றார்கள். "தமிழக அணி ஒரு பொருட்டே அல்ல" என்றார்கள். அதுவும் வடேகரும், ஷிவல்கரும் பேசும் அராஜகம் இருக்கிறதே! அதற்காகவே அவர்கள் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தான் சுந்தரம்.

முருகன் படம் முன்பு நின்று வேண்டிக் கொண்டான். இந்த திமிர் பிடித்த பாம்பே அணியை வென்று இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும்.....அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும்....பழனி வந்து மொட்டை போடுகிறேன் முருகா!!"

ஆட்டம் ஆரம்பித்தது.

முதல் ஐந்து ஓவர்கள் - விக்கெட் எதுவும் விழவில்லை. ஆறாவது ஓவர் - வாமனன் போட்ட முதல் பந்து ஒரு அற்புதம் - டாப் ஸ்பின்னர் போட்ட டாப் ஸ்பின்னர் அது! லெக் ஸ்பின்னுக்காக ஷர்மா விளையாட. பந்து உள்ளே புகுந்து கில்லி எகிறியது.

அடுத்த வந்த வடேகருக்கு வாத்து முட்டை! மீண்டும் வாமன வித்தை!

"நீ வாமனன் இல்லை...திருவிக்கிரமன்".....சுந்தரம் மகிழ்ச்சியில் வாமனனை கட்டிக் கொண்டான்.

இரண்டாம் செஷன் ஆரம்பத்தில் பந்தை வெங்கியிடம் வீசினான் சுந்தரம். இந்த்ரஜாலம் மந்திர ஜாலம் எல்லாம் என்ன என்று அப்போது காட்டினான் வெங்கி. அடுத்த முப்பது ரன்னில் மூன்று விக்கெட் காலி! எல்லாம் வெங்கிக்கே!

எழுவதுக்கு ஏழு!

இன்னும் மங்கட் மட்டும் தேவி தேவி ஆடிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த மொக்கை நாயக்குடன் சேர்ந்து நூற்றி இருபது வரை கொண்டு போய் விட்டான். இதற்குள் தமிழகத்தின் விக்கட் வேட்டை அலுவலகங்கள் எல்லாம் பரவி பாதி நாள் மட்டம் போட்டு விட்டு சோற்று மூட்டையுடன் சேப்பாக்கம் ஓடி வந்த விட்டார்கள் பலர்.

கடைசி மூன்று விக்கட்டை முகுந்தன் முடித்தான். அந்த நாள் இறுதியில் பாம்பே நூற்றி நாற்பதுக்கு ஆல் அவுட்! அந்த தலைவலி மங்கட் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நாற்பத்தைந்து எடுத்திருந்தான்.

சுந்தரத்திற்கு ஒரே குதூகலம். இரவெல்லாம் தூக்கமில்லை ! நூற்றி ஐம்பத்தி ஒன்று எடுத்தாலே வெற்றி! நன்றி முருகா!

அடுத்த நாள் - வெள்ளிக்கிழமை விடிந்தது. எட்டு மணிக்கே சேப்பாக்கம் நிறைந்தது!

தமிழக வீரர்கள் அதிர்ஷ்டம் போய் விடும் என்று அதற்கு முந்தின நாள் போட்ட ஆடையை கூட கழற்றவில்லை பந்தின் சுழற்சி அதிகம் இருப்பது நேற்று வெங்கி போடும் போதே தெரிந்திருந்தது. " ஜப்பார், ராமு - பாத்து விளையாடுங்க...பால் ரொம்ப டுர்ன் ஆகுது.
அன் ஈவேன் பௌன்ஸ் வேற.." எச்சரித்து அனுப்பினான் சுந்தரம்.

முப்பது ரன் வரை அருமையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிர் பாராமல் ரன் எடுப்பதில் குழப்பம். விளைவு ஜப்பார் - ரன் அவுட் !

சுந்தரத்திற்கு எரிச்சல் வந்தது. 'வா' வராதே' எதாவது கம்யூனிகேஷேன் உண்டா? வாயில் என்ன கொழுக்கட்டையா?

அடுத்த பந்தில் ராமமூர்த்தியும் அவுட் ஆகி போனான் .

மீண்டும் உதவிக்கு வந்தது வாமனன் தான். சுந்தரமும் வாமனனும் சேர்ந்து ஐம்பது ரன்கள் எடுத்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில்....வில்லன் சோல்கர் பந்தில் வாமனன் - போல்ட்!

நூறுக்கு மூன்று!

அடுத்து வந்தவர்கள் 'ஒன்றுக்கு' போகும் நேரம் கூட கிரீசில் தங்கவில்லை. ஷிவால்கரும் சோல்கரும் மாறி மாறி விக்கெட் எடுத்தார்கள். ஒரு வெங்கிக்கு இரண்டு வெங்கியாய் இருந்தார்கள்.!!

நூற்றி இருபத்தி ஏழுக்கு ஏழு!

நூற்றி முப்பதைந்துக்கு எட்டு!

சுந்தரம் மட்டும் ஒரு முனையில் தன் டாலரில் உள்ள முருகனை பார்த்து தலை ஆட்டினான்....

நூற்றி நாற்பதைந்துக்கு ஒன்பது!!

வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும்.

இனி இருப்பது வெங்கி மட்டும் தான். மட்டையை எந்த பக்கம் பிடிப்பது என்பது கூட தெரியாதவன் போல ஆடுவான். இவனை வைத்து என்ன செய்வது ? இன்னொரு முறை தோல்வியா?..வேண்டாம் முருகா!

வெங்கி வந்தவுடன் சுந்தரம் சொன்னான் "வெங்கி - நான் கூப்பிட்ட உடனே வரதுக்கு ரெடியா இரு...வேற எதுவும் பண்ண வேண்டாம்"

பந்தை சோல்கரிடம் கொடுத்தான் வடேகர்.

சுந்தரத்திற்கு இருதய வேகம் எகிறிக் கொண்டிருந்தது.

முதல் பந்து - டீபென்ஸ்...

இரண்டாம் பந்து...லெக் ஸ்டம்ப் வெளியே குத்தி அடித்து தொடையில்....சோல்கர் அரை மனதாக அவுட் கேட்டான்... - இல்லை, நாட் அவுட்!

மூன்றாவது பந்து...துரத்தி அடித்தான் சுந்தரம்! பறந்தது பந்து ஸ்கொயர் லெக்-ல்! நான்கு ரன்கள்!! அரங்கமே ஆரவாரித்தது! சத்தம் திருவல்லிக்கேணியை தாண்டி கேட்டிருக்கும். வடேகர் முகத்தில் ஈயாடவில்லை.

இன்னும் இரண்டே ரன்கள் வெற்றிக்கு!

சீட்டில் ஒருவர் கூட அமர்திருக்கவில்லை. கை நகங்களை எல்லாம் வேகமாக கடித்து துப்பிக் கொண்டிருந்தார்கள்...இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார்கள்.....

சுந்தரத்திற்கு வியர்த்து. மட்டை வேறு கையை விட்டு நழுவியது..

இதோ மீண்டும் சோல்கர்.

"காக்க காக்க கனகவேல் காக்க"
நோக்க நோக்க......."

பந்து பிச்சில் பட்டு எழுந்தது. மட்டையில் படாமல் - படாமல் தானா? - விக்கெட் கீபர் கையில் தஞ்சம் அடைந்தது.

சொல்கர் குட்டிகரணம் போட்டு அப்பீல் கேட்டான்! மட்டையை சுற்றி இருந்த ஐவரும் கையைத் தூக்கினர் ஒரு சேர!!

ஆனால் யாருக்கும் தெரியவில்லை பட்டதா இல்லையா என்று - சுந்தரத்தை தவிர. அம்பயர் பட்டச்சர்யா "benefit of doubt goes to batsman" என்று கையை தூக்காமல் இருந்தார்.

அப்பொழுது சுந்தரம் எதிர்பாராமல் ஒன்று செய்தான். யாரும் செய்யத் துணியாத காரியம்!!

மட்டையை மடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெங்கி சுந்தரத்தை நோக்கி ஓடினான். சேப்பாக்கமே ஸ்தம்பித்தது. அம்பயர் அவுட் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இது? அரங்கம் நிசப்தமானது. பாம்பே வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கத்தினார்கள்.

உடைந்த கனவுடன் முருகன் டாலரை பார்த்துக் கொண்டே சுந்தரம் .... துக்கம் தொண்டையை அடைத்தது!!

----------------x-------------------x ---------------X-------------------X---------

இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சொன்னான்.

"பரத், நான் ஒன்னு சொல்லவா.? எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் அளவுக்கு அதிகமா நேர்மையா இருந்துட்டார்னு தான் நான் சொல்லுவேன். எத்தனையோ தரம் தப்பா அவுட் ஆகி போயிருக்கார். இன்னும் ரெண்டு ரன் ல....."

"ஜெயிக்கறது முக்கியம் இல்லை விக்னேஷ் ...எப்படி ஜெயிக்கறோம் அப்படீங்கறது தான் முக்கியம். ஏமாத்தி ஜெயிக்கறது தோக்கறதுக்கு சமம் தான்! அவர் அவுட்னு அவரை தவிர யாருக்கும் தெரியாதுன்னு போகாம இருந்துருக்கலாம். மீதி பேரு பாக்கறாங்க அப்படீங்கறதுக்காக ஒழுங்கா நடந்துக்கறது பேரு நேர்மையா? ...யாரும் பாக்காம இருக்கும் போதும் சரியா நடந்துக்கறது தானே நேர்மை?

எப்பவும் அப்பா அவுட் ஆனா அம்பயருக்காக வெயிட் பண்ண மாட்டார். இப்போ நின்னுருந்தா ஜெயித்திருக்கலாம், ஜெயிக்காம போயிருக்கலாம். ஆனா சூழ்நிலை குற்றவாளியாய் ஆகாம கடைசியில் ஒரு நல்ல மனிதனாய் ஜெயித்தது அப்பா தானே! இந்த நாளிதழ் துண்டு எனக்கு எப்பவும் நினைவு படுத்தறது இது தான். எந்த நிலைமையிலும் நேர்மை தவறக் கூடாது - என் அப்பா போல!"

அது வரை பக்கத்து அறையில் படுத்து கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்தின் கண்ணில் நீர் துளித்தது. இருபத்தைந்து வருடம் முன்னர் ஜெயித்தால் பழனி சென்று மொட்டை போடுவதாய் செய்த வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.

மேலே படத்தில் இருந்த முருகன் அழகாய் அவரை பார்த்து சிரித்தான்!


பி.கு. - உண்மையில் 1972-ல் பாம்பேக்கும் தமிழகத்திற்கும் ரஞ்சி இறுதி போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது உண்மை. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Thursday, April 3, 2008

கல்வி என்பது ...

கஞ்சி குடிப்பதற்கும் இலார் - அதன்
காரணம் இவை எனும் அறிவும் இலார்

என்று சொன்னான் பாரதி.

வறுமை மட்டும் அல்ல, அனைத்து சமூக அவலங்களுக்கும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் காரணம் ; இந்த விழிப்புணர்வைக் கொண்டு வரக் கூடியது கல்வியறிவு மட்டுமே என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் படித்தவர்கள் அதிகம் நிறைந்த நகர்புறத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் இந்த நம்பிக்கை பொய்யோ என்று ஐயம் எழுகிறது. கூடவே பெரிய சோகமும் எழுகிறது. நான் கற்ற கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தாத கல்வியோ? அறிவை அன்றி போட்டியை மட்டுமே பெருக்கும் கல்வியோ?

Education is what is passed on from the notes of the professor to the notes of the students without passing into the minds of either.

என்றான் ஒரு அறிஞன்.

இது வெறும் கேலி மட்டும் இல்லை. பல இடங்களில் உண்மையும் கூட.

நானும் சேலம், ஆரணி, சென்னை, வேலூர் என அந்தந்த ஊர்களில் நன்றாக அறியப்பட்ட பள்ளி கல்லூரிகளில் தான் படித்தேன்.

எனக்குத் தெரிந்து பாடம் என்பதை ஒழுங்காக நடத்தியவர்கள் வெகு சிலரே. அதில் சுவையாக நடத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

"அம்மா சுட்ட தோசையை ஒண்ணு மேல ஒண்ணா வெச்சு பாருங்க..அது தான் Congruency" என்ற கணக்கு வாத்தியார் இன்னும் நினைவில் இருக்கிறார். "A good teacher teaches; An excellent teacher inspires" என்று பல அருமையான புதிர்களை கொடுத்து பந்தயம் கட்டி ஊக்குவித்த அல்காரிதம் வாத்தியார் நினைவில் இருக்கிறார்.

மற்றவர்களும் சுவாரசியமானவர்கள் தான் - வேறு வகையில் .

சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடம் நடத்துவதை விட்டு விட்டு தன் சொந்த கதை, சோக கதை எல்லாம் சொல்வார்கள். என் வரலாறு ஆசிரியர் இப்படி தான். கலிங்க படையெடுப்பு நடத்துவதாக சொல்லி விட்டு , அவர் படவேடு போய் வந்த கதையை சொல்லிக் கொண்டு இருப்பார். இதில் பெருமை வேறு அவருக்கு! 'இந்த மாதிரி வேற எந்த வாத்தியாராவது உங்களுக்கு சொல்வாங்களா?..பாடத்த நீங்க வீட்டுல கூட போய் படிச்சுக்கலாம்'...'ஐயா, இதே மாதிரி தன் போன வகுப்புல தமிழ் வாத்தியும், அதுக்கு முன்னாடி இங்க்லீஷ் சாரும் சொன்னாங்க!' - நிலைமை இப்படி ஆயி போச்சே! - மனதில் மட்டுமே நினைத்துக் கொள்வோம்!

ஆசிரியைகள் நேர் எதிர். மிக கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். இவர்கள் கடமை உணர்ச்சி அசாத்தியமானது. ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டார்கள். என் கெமிஸ்ட்ரி ஆசிர்யை அப்படி தான். வகுப்புக்குள் நுழையும் போதே சோடியம் , மெர்குரி, க்ரோமியம், பாஸ்பரஸ் என எதோ பீரியாடிக் டேபிள் போல் ஒப்பித்துக் கொண்டே வருவார். மணி அடித்து வெளியில் போகும் வரை அந்த பாராயணம் - மக்னீசியம், க்ளோரின், கார்பன்,நைட்ரோஜன். இப்படி இடைவிடாது இவர் மூளைக்கு கொடுத்த அதிர்ச்சியில் மாணவர்கள் கிறுகிறுத்து போய் அடுத்த இரண்டு வகுப்புக்கு அந்த பக்கமே தலை வைக்க மாட்டார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் சாக்பீசே தொடாமல் நடத்துவார்கள். differential calculus, integral calculus-ஐ யே என் கணித ஆசிரியை அப்படி தான் நடத்தினார்! லிமிட் எக்ஸ் டர்ன்ஸ் டு ஜீரோ, டி எக்ஸ் பை டி ஒய் .... என எதோ வாய்பாடு போல சொல்லி கடைசியில் L.H.S. equals R.H.S என்பார். 'மச்சான்..இப்போ என்ன சொன்னாங்க?' என்பான் என் அப்பாவி நண்பன். பாவம் அவன் கண்ணம்மாபேட்டையில் இருந்து வருவான். நான் என்ன சொல்ல? 'ஒண்ணும் பெருசா இல்ல மச்சான், சோத்தாங் கையும், பீச்சாங்கையும் ஒண்ணு னு சொல்றாங்க!'

சிலர் போர்டு பக்கம் திரும்பி விட்டால் , மணி அடிக்கும் போது மட்டும் தான் மாணவர்கள் பக்கம் திரும்புவார்கள். கையில் பிட்டு பேப்பர் வைத்துக் கொண்டு, போர்டுடன் மட்டும் பேசிக் கொண்டு அதன் மேல் எதையோ எழுதி எழுதி அழித்துக் கொண்டு இருப்பார்கள். அவர் என்ன பாடத்திற்கு ஆசிரியர் என்று கண்டு பிடித்தாலே அது பெரிய விஷயம்.

இப்படி ஆசிரியரில் வகை இருப்பது போல மாணவர்களிலும் உண்டு. கல்லூரியில் இது நன்றாகத் தெரியும்.

தேர்வுக்கு அன்றி அறிவுக்கும் ஆசைக்கும் படிக்கும் மாணவர்கள் - இவர்கள் சொற்பம் தான். இவர்களை வகுப்பில் காண்பது அபூர்வம். பேப்பர் பரசன்டேஷன், செமினார், சிம்போசியம் என்று ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கு தெரிந்து பெரும்பாலும் இவர்கள் துரோணாசாரியார் கிடைக்கப் பெறாத ஏகலவ்யர்கள் தான்.

முதல் பெஞ்சில் இருக்கும் "சாம்பு மவன்கள்" - இவர்கள் வாத்தியார் வாயிலிருந்து வருவது எல்லாமே வேத வாக்காய் எண்ணி அவர் சொல்லும் ஜோக் முதற்கொண்டு எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொள்வார்கள். வாத்தியார் தும்முவதை கூட "அச்சூ" என்று எழுதிக் கொண்டாலும் ஒன்றும் ஆச்சர்யப்டுவதற்கில்லை!

அடுத்து நடு பெஞ்சு நாயகர்கள் - இங்கு பல ரோமியோக்கள் தங்களின் ஜூலியெட்களுக்கு எல்லாம் (அடுத்த சந்திப்புக்கான) செய்தி அனுப்புவதிலேயே மும்முரமாய் இருப்பார்கள்! நான் படித்தது காதல் சரித்திரத்தில் எஸ்.எம்.எஸ் காலத்திற்கு முந்தைய காலமாய் அறியப்பட்ட துண்டு சீட்டு காலம்! 'டேய் நவீன்...இத சாந்தி கிட்ட குடுத்து ரம்யாக்கு பாஸ் பண்ண சொல்லு !!' இந்த ராமர்களுக்கும் சீதைகளுக்கும் நடுவே உள்ள அனைவர்களும் அனுமார்கள் தான். இப்போது சீதைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகி "லவ குசா" பெற்று விட்டார்கள். ராமர்கள் இங்கே செல்வராகவன் படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். (அனுமார்கள்?? இன்னமும் அனுமார்கள் தான்!)

கடைசி பெஞ்சு காளைகள் - இதில் சிலர் பார்ப்பதற்கு இரண்டு குழந்தைக்கு தகப்பன் போல் இருப்பார்கள். கவனம் முழுக்க வகுப்புக்கு வெளியே தான். மச்சான் அதோ பாருடா மஞ்சக் காட்டு மைனா! இங்க பாருடா கும்மு பிகுரு!
என ஆச்சர்யக்குறி வாக்கியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஆக இப்படியாய் போயிற்று மாணவப் பருவம். இதில் (நான்) கற்றது இரண்டு சிட்டிகை கூட இருக்குமா தெரியவில்லை. (இதில் நான் எந்த ரகம்? அது ரகசியம்!)

எப்படியோ தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் எல்லோருக்கும் எதோ கம்பெனியில் வேலை கிடைத்து கீபோர்ட் தட்டிக் கொண்டு இருக்கிறோம்.

'கல்வி என்பது கசடற கற்றல்
பண்பு என்பது பாடறிந்து ஒழுகல்'

என்று பள்ளிக் கூட மதில்களில் பார்க்கும் பொழுது எல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தான் எனக்கு புரியவில்லை.

Monday, March 31, 2008

அழகு படுத்தும் பாடு !

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. நான் பல முறை யோசித்தது உண்டு - அது இரங்குமா இல்லை கிறங்குமா என்று!

சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து தான் பிரிட்டனே மயங்கி போய் இருக்கிறது. அனைத்து பத்திரிகையிலும் இவரைப் பற்றி தான் செய்தி.

யார் என்கிறீர்களா? அவர் தான் பிரெஞ்சு அதிபர் மனைவி - கார்லா ப்ரூனி . நீங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காக கீழே படம் ஒன்று.



சற்று நாட்களுக்கு முன் நம் குடியரசு விழாவுக்கு பிரெஞ்சு அதிபருடன் இவரும் வருவதாக இருந்தது. அப்போது இவர் காதலி மட்டுமே. கைரோவில் கட்டிப் புரள்வது, பிரமிட் முன் பின்னிக் கொள்வது என்று அமர்களபட்டுக் கொண்டிருந்தது இவர்கள் காதல் வாழ்க்கை. நம்மவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம். .கேர்ள் பிரெண்டை வரவேற்பது பற்றி Protocol எந்த புத்தகத்திலும் இல்லையாம்.சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ப்ரூனி வரவே இல்லை.(ஹும்! நாம் குடுத்து வைத்தது அவ்வளவு தான் !)

சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் தன் மனைவியுடன் இரண்டு நாள் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டார். இவர்கள் வருவதற்கு சற்று முன்பிருந்தே பத்திரிகைகளில் 'ப்ரூனா’யணம் தான்!

ப்ரூனி பிறந்ததிலிருந்து பருவம் எய்தியது வரை, பள்ளிப் படிப்பிலிருந்து பள்ளியறை தோழர்கள் வரை என சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் பெரிது படுத்தி எழுத பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பணி புரிந்தனர் பத்திரிகை நிருபர்கள்.

அவரின் பழைய காதலர்கள் எண்ணிக்கை அதிகமா? மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் எண்ணிக்கை அதிகமா? என்று பட்டிமன்றம் வைக்க சாலமன் பாப்பையாவை கூப்பிடலாமாம். (ரிஷி மூலம் ,நதி மூலம் ,கார்லா ப்ரூனி மூலம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று ஐம்பதில் ஆசை வந்த பிரெஞ்சு அதிபர் கூறுகிறார்)

ப்ரூனி ஒரு மாடல் அழகி ஆக இருந்தவர். பதினைந்து வருடம் முன்பு மாடலிங் உலகில் பிறந்த மேனியாய் திகம்பர சாமியார் ரேஞ்சில் இவர் அருள் பாலித்துக் கொண்டிருந்த காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இவர்கள் வரும் சமயம் பார்த்து வெளியிட்டது ஏல நிறுவனம் ஒன்று. கேட்க வேண்டுமா; வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது. "எப்படி இருந்த இவர் இப்போ இப்படி ஆயிட்டார் " என்று அந்த படத்தை போடாத பத்திரிகைகளே இல்லை.

இவர் என்ன ஆடை அணிவார்? (முதலில் ஏதேனும் ஆடை அணிவாரா?), எங்கெல்லாம் செல்வார், ராணி முன் எவ்வாறு நடந்து கொள்வார் என ஒரே பரபரப்பாய் பத்திரிகைகள் பேசிக் கொண்டன.

நடந்தது என்ன தெரியுமா? ப்ரூனி வந்து இறங்கியது தான் தாமதம்.

தோள் கண்டார் தோளே கண்டார் - அவர்
தொப்பி கண்டார் தொப்பியே கண்டார்!!

(பிரெஞ்சு அதிபரை எவர் கண்டார்? ஒருவரும் இல்லை.)

அவர் நடை அழகை சொல்வதா, உடை அழகை சொல்வதா? உச்சந்தலை தொப்பியை சொல்லவா (அந்த தொப்பி இப்போது பிரபலம். கீழே படத்தில் பார்க்கவும்), உள்ளங்கால் செருப்பை சொல்லவா ? என மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து தள்ளின இந்த பத்திரிகைகள்!

நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும் இன்னும் இளவரசராகவே இருக்கும் பிரின்ஸ் சார்ல்ஸ் அம்மணி விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே ஓடிப் போய் கையை பிடித்து முத்தமிட்டு விட்டார். இவராவது பரவாயில்லை. முதல் மந்திரி கார்டன் பிரவுன் வரும் போதே வாயை முத்தமிடுவது போல் போல் குவித்துக் கொண்டு வந்தார். நடுவில் பிரெஞ்சு அதிபர் வந்து விட - நல்ல வேளை - அவர் சற்று குள்ளமாய் இருப்பதால் களேபரம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் கூட பிரெஞ்சு அதிபர் பேச்சை விட ப்ரூனியின் காலழகை காண்பதில் தான் அனைவருக்கும் கவனமாம்! என்ன சொல்வது போங்கள்!

தமிழ் பேசும் நல்லுலக நண்பர்களுக்காக நான் பொருக்கி எடுத்த புகைப்படங்கள்:

இப்பொழுதெல்லாம் தேவதைகள் தம் சிறகு உதிர்த்து கிறிஸ்டியன் டீயர் (Christian Dior) காஸ்ட்யூமில் வந்திறங்குகின்றனவாம்!!




உருகி வழிவது மெழுகுவர்த்தி மட்டும் அல்ல!




கார்லா ப்ரூனி அருகில் நிற்கும் பாட்டி யார் ? யாரோ இங்கிலாந்து ராணியாம்: (தலைப்பு கொடுத்தது இங்கிலாந்து பத்திரிகைகள்!)




தாத்தா பிலிப் (ராணியின் கணவர்) ராணியை கழற்றி விட்டு ப்ரூனி அருகில் அமர்ந்து விட்டார். ஆசை யாரை விட்டது!



இனியவை நாற்பது: அம்மணியின் வயதை சொல்கிறேன்:



பிரெஞ்சு அதிபருக்கு அரசியலில் ஏன் நாட்டமில்லை என்பது இப்போது புரிகிறது!




கடைசியாய் ஒரு கவர்ச்சிப் படம் - கடற்கன்னிகளில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?




இதை கணினியில் தட்டிக் கொண்டு இருக்கும் போதே "hibernate" மோடில் இருந்து விழித்துக் கொண்டது மனசாட்சி. ஐடியல் உலகை விடுத்து பிராக்டிகலாக விஷயத்தை அணுகத் தெரியாது அதற்கு. அதனால் தான் அதை "hibernate" மோடில் அதிகம் வைத்து விடுகிறேன்!

பிரிட்டன் பத்திரிகைகளுக்குத் தான் பித்து என்றால் உனக்கு எங்கு போயிற்று புத்தி ? எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறதே! திபெத்திய போராட்டமும் சீன அடக்குமுறையும் , இராக்கிய தீவிரவாதமும் திணறும் அமெரிக்க படைகளும்...

போர் வெறும் 'போர்' ஐயா! (நான் மனதை ஐயா என்று விளிப்பது தான் வழக்கம். பா.ம.க. என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்). இஸ்ரேல் - பாலஸ்தீனம் பாரும் ; அங்கு பலருக்கு குண்டு வைப்பது தான் குலத் தொழிலாம். இலங்கை - விடுதலைப் புலிகள் பாரும் . நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பிராண்டிக் கொண்டு இருக்கிறார்கள்; தினத்தந்தியில் வரும் கன்னித் தீவு கதை தான் எல்லாம் - மனிதன் அடித்துக் கொள்வதற்கு முடிவுண்டா ?

சரி ! பெண்ணைப் பற்றியே எழுது - ஆனால் இந்திரா நூயியை பற்றியோ மீரா நாயரைப் பற்றியோ லீனா மணிமேகலையை பற்றியோ எழுதலாம் இல்லையா? இவர்கள் அல்லவா சாதனைப் பெண்கள்?

எழுதலாம்; அதற்காக அழகானவர்கள் எழுத லாயக்கில்லாதவர்கள் என்று இல்லையே! அழகு ஒன்றே போதுமே! ஆஸ்கர் ஒயிலடின் “picture of Dorian gray- வில் வரும் லார்ட் ஹென்றி சொல்வார் – “Beauty is a form of genius--is higher, indeed, than genius, as it needs no explanation... மேலும் இந்த அம்மணி vogue, elle பத்திரிகைகள் நடுவே தாஸ்தாவெஸ்கி புத்தகம் வைத்து படிப்பாராம். நீர் படித்து இருக்கிறீரா?

டால்ஸ்டாயின் அன்னா கரீனினா படித்தில்லயோ? இத்தனை காதலர்கள்?

அவர் சொந்த வாழ்க்கையை விடுமையா! இந்த அம்மணி பெரிய பாடகர். இரண்டு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று இருக்கின்றன இவர் ஆல்பங்கள். இதைக் கேட்டுப் பாரும். புரியும். எவ்வளவு அருமையாக இருக்கிறது;

வெறும் காத்து தான் வருது! கவர்ச்சிப் படம் பார்க்க விடும் கட்டுக்கதை இதெல்லாம். உனக்கே தெரியும்!

இந்த உலகில் இரண்டு வகையான மனம் உண்டு. ஆதரித்து பேசி நம்பிக்கை ஊட்டும் மனம். எதிர்த்து பேசி குழப்பி விடும் மனம். அதில் நீர் எந்த வகை என்று நீரே முடிவு செய்துக் கொள்ளும்!

குழப்பம் என்பது தான் சிந்தனையின் அறிகுறி; மற்றொன்றையும் நினைவு கொள்; பெண் புத்தி பின் புத்தி - எப்பொழுதும் பெண்ணையே நினைக்கும் புத்தி மற்றதில் பின் தங்கி விடும். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கிறது! ரோஜாவில் தானே முள் இருக்கிறது !

உளுத்து போன உபதேசம் ஐயா அதெல்லாம் ! "முள்ளிலும் ரோஜா மலர்கிறதே" இது தான் புது மொழி. கூனி அழகாகவா இருந்தாள்? அவளிடம் கூடத் தான் ஆபத்து இருந்தது! இது அழகியல் ஆராய்ச்சி ஐயா! சொல்லிய ஆசார வித்து எட்டில் இதைப் பட்டியலிட மறந்திருப்பார்கள்! அழகை ரசிப்பதில் குற்றமில்லை!

உலகத்தில் இருக்கிற எல்லா ஜொள்ளர்களும் தவறாமல் சொல்லும் சப்பைக் கட்டு! சபல புத்திக்கு மறு பெயர் !!

இடுப்பளவிலிருந்து கட்டை விரல் நீளம் வரை சொல்லும் சாமுத்ரிகா லட்சணம் எழுதியவர்களும் சபல புத்திக்காரர்களா? இதெல்லாம் ஆபத்தில்லாத ரசனைகள்!!

ஆரம்பத்தில் எல்லாம் ஆபத்தில்லாமல் தான் ....

போதும் ஐயா !! நம் சம்பாஷணையில் சுவாரசியமில்லை; இந்த பதிவில் பார்க்கத் தகுந்தது கார்லா ப்ரூனி படங்களே என்று நண்பன் தீர்ப்பெழுதி விட்டான் ; ஆக நீர் உறங்கச் செல்லும்!!

மனசாட்சியை 'hibernate' மோடில் தட்டி விட்டேன்.

இந்த மனசாட்சியுடன் ஒரே தொல்லை.

சரி அது கிடக்கிறது விடுங்கள் - யாரோ ஜெஸ்ஸிக்கா ஆல்பாவாம்; கொள்ளை அழகாம்! தெரியுமா உங்களுக்கு?

Thursday, March 13, 2008

ஏனிந்த அசட்டுத்தனம்?

நம் ஊர் போலீஸ்கார மாமாவின் தொப்பை போல் அமெரிக்க வரைபடத்தில் மேற்கே சற்று உப்பிக் கிடக்கும் இடம் கலிபோர்னியா. இந்த தொப்பையில் தொப்புள் போல் இருப்பது அழகிய சான் பிரான்சிஸ்கோ நகரம். (தொப்பைக்கு மட்டும் தான் போலீஸ்கார மாமா. தொப்புளுக்கு சிம்ரனை நினைத்துக் கொள்ளுங்கள்!).

இந்த நகரத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது கோல்டன் கேட் தொங்கு பாலம். பின்னுள்ள மலைகளுக்கு இது ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல எனக்கு தோன்றும். என் அலுவலகத்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் இந்த சிவப்பு வண்ண பாலம் (இந்த கலருக்கு "international orange" என்று பெயர்) சற்று தொலைவில் தெரியும். மதியம் சாப்பிட்டு விட்டு மந்தமாக இருக்கும் நேரங்களில் இப்படி காலாற நடந்து சுற்றி வேடிக்கை பார்த்து விட்டு வருவோம். கூட வரும் நண்பர்கள் வாயில் 'ஹோமம்' வளர்த்துக் கொண்டு வருவார்கள்.

சரி, இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த கோல்டன் கேட் பாலத்திலிருந்து பசிபிக் பெருங்கடலில் யாரவது ஒருத்தர் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.
அமாவாசை, பௌர்ணமி என்று வந்து விட்டால் இங்கு யாருக்காவது பித்தம் தலைக்கு ஏறி விடுகிறதோ என்னமோ! இது தவறாமல் நடப்பதால் இங்குள்ள சுறாமீன்கள் கூட "இன்று மனித உணவு" என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு் காத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

காசியில் சென்று உயிர் விட வேண்டும் என்று நம்மூர் தாத்தா பாட்டிகள் நினைப்பது போல இது ஏதாவது புண்ணிய ஸ்தலமா தெரியவில்லை. அடுத்த முறை யாரவது குதிக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன். (என்னை முதலில் தள்ளி விட்டு விடுவார் என்று உள்ளுணர்வு சொல்கிறது.)

தண்டவாளத்தில் தலை வைத்தால் ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இங்கு அப்படி இல்லை. எகிறி குதித்த நான்கைந்து வினாடிகளில் மோட்சம் உறுதி. அந்த உயரத்தில் இருந்து எழுப்பதைந்து கிலோமீட்டர் வேகத்தில் சென்று மோதும் போது அது கடலாக இருந்தால் என்ன, கரையாக இருந்தால் என்ன - முடிவு ஒன்று தான். இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இது கூட காரணமாக இருக்கலாம்.

நம்மூரில் ' வாத்தியார் அடித்ததால் பன்னிரண்டு வயது பையன் தூக்கு மாட்டிக் கொண்டான்' என்று செய்தி படிக்கும் போது எனக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. எனக்கு அந்த வயதில் ஒழுங்காக முடிச்சு கூட போட தெரியாது. (இப்போது கூட தெரியாது. எப்பொழுதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் என்றால், அந்த தாம்புக் கயிறு முடிச்சு கூட என் அம்மா தான் போட்டு தருவாள். அவ்வளவு அசமஞ்சம் நான்! இந்த லட்சணத்தில் நான் 'boy scout-ஆக வேறு இருந்திருக்கிறேன்.)

சின்ன வயதில் இருந்து கூட்டாஞ் சோறு, கோலி சோடா, கடலை மிட்டாய் என்று விதம் விதமாய் தீனி போட்டு வளர்த்த உடம்பு; கஷ்டப்பட்டு கணக்கு, வரலாறு, சமூக அறிவியல் என்று வருடா வருடம் படித்து வளர்த்த மூளை. எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்து கொண்டு விடுகிறார்கள். என்ன அபத்தம்! இதை எல்லாம் நினைத்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அவர்கள் அசாத்திய - ஆனால் - அசட்டு துணிச்சல்காரர்களோ என்று தோன்றுகிறது. தற்கொலைக்கு "துணிந்தான்" என்று தானே சொல்கிறோம். இந்த துணிவை எது கொடுக்கிறது? அப்படி மக்களை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுவது தான் என்ன? யாரும் கொலை செய்வதைப் போல் பிளான் போட்டு இதை செய்வதில்லையே? சட்டென்று மூளை மக்கர் கிக்கர் செய்து விடுகிறதா?

ஜப்பானில் அணுகுண்டு போட்ட போது அந்த கதிரியக்க வீச்சில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கண்ணிழந்து, கை இழந்து - உயிரைத் தவிர வேறு என்னவெல்லாம் இழக்க முடியுமோ அவை எல்லாம் இழந்து - வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் இருந்த நிலையில் சொன்னார்கள். "Our fear is not of dying; but of living". அப்படிப்பட்ட சோகமா வந்து விட்டது இவர்களுக்கெல்லாம்?

கடன் தொல்லையால் சில ; காதல் தோல்வியால் சில; காரணமே இல்லாமல் சில. அதீத மன உழற்சிக்கு ஆட்பட்டு அந்த impulse-ல் எடுக்கப்படும் முடிவுகள் தானே இதில் பல. (வறுமையால் பூச்சி மருந்து தின்று இறந்து போகும் ஏழை விவசாயிகளைப் பற்றி ஒரு தனி பதிவு தான் போட வேண்டும்.)

இந்த தோல்விகளையும், பின்னடைவுகளையும் எதிர் கொள்ளும் மனமும் அறிவும் இல்லாமல் போவது ஏன்? உடலை பேணுவது போல் மனதை பேணுவதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதெல்லாம் தான் சான்று.

Wednesday, March 12, 2008

ஒரு சதுரங்கச் சக்கரவர்த்தியும் ஒரு சமூக சேவகரும்:

சதுரங்கச் சக்கரவர்த்தி - பாபி பிஷர்

சமூக சேவகர் - பாபா ஆம்தே.

இருவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தாங்கள் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இறப்பால் இணைக்கப்பட்ட இருதரப்பட்ட மனிதர்கள். இந்த வருடத்தின் ஜனவரி மாதம் பிஷரையும் பிப்ரவரி பாபாவையும் கொண்டு சென்று விட்டன.

இவர்களுக்கு என் அஞ்சலி.

பாபி பிஷர்:


சதுரங்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஏக போக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த சோவியத் வீரர்களை தனி மனிதனாக வென்று காட்டியவர் பிஷர். பிஷரை பற்றி அறிய இந்த மூன்று வரிகள் போதும்.

"Don't even mention losing to me. I can't stand to think of it." -- Bobby Fischer

Being a friend of Fischer obviously is no undivided pleasure, though being Fischer seems sadder." -- Hans Ree

My God, it is a miracle! Bobby is so kind, so friendly. He is normal!" -- Boris Spassky (on their first meeting before the '92 rematch)

சதுரங்கத்தில் அதிகம் நாட்டம் கொண்டு காஸ்பரோவையும், ஆனந்தையும், க்ராம்நிக்கையும் பற்றி நான் பேசிக் கொண்டு இருக்கும் போது என் அம்மா பாபி பிஷரையும் , ஸ்பாஸ்கியையும், பெட்ரோஷியானையும் பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்படி தான் எனக்கு பிஷர் முதலில் அறிமுகம். பிறகு ஒரு புத்தகத்தில் எவ்வாறு பதிமூன்று வயது பிஷர் , பைர்னை தோற்கடித்தார் என்று போட்டு இருந்தார்கள். அசந்து விட்டேன். தன் ராணியை தியாகம் செய்து எதிராளிக்கு தண்ணி காட்டி விட்டார். இதை "Game of the century" என்றே சொல்லி விட்டார்கள். நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு க்ளிக்கிப் பார்க்கவும்.

1972 - "match of the century" என்று கருதப்பட்ட போரிஸ் ஸ்பாஸ்கி உடனான உலக சாம்பியன் ஷிப். பிஷர் ஒரு விதத்தில் ஏகலவ்யன் போல் சுயமாக விளையாடி முன்னுக்கு வந்த ஒரு அமெரிக்க ஜீனியஸ். ஸ்பாஸ்கி சோவியத் சாம்பியன். போட்வின்னிக், கோர்ச்னோய், பெட்ரோஷியன், டால் என்ற ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான். சோவியத் அரசாங்கமே அவர் பின்னால்.

பனிப்போர் உச்சமாக இருந்த நேரம் அது. சோவியத் இதை ஒரு மானப் பிரச்சனையாகவே பார்த்தது. இந்த போட்டிக்கு முன்னாலும், அது நடக்கும் போதும் நிகழ்ந்த விஷயங்களை பார்த்தால் உளவுப் படங்களும், கதைகளும் தோற்று விடும். அப்படிப்பட்ட சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்தன. உதாரணத்துக்கு பாருங்கள் - பிஷர் தன் காயை நகர்த்திவிட்டு எழுந்து சென்று விடுவார். மீண்டும் தன் முறை வரும் போது தான் நாற்காலியில் வந்தமர்வார். அவர் எழுந்து செல்லும் போது நாற்காலிக்கடியில் எதோ ஒரு பட்டனை அமுக்கி விட்டு போய் விடுகிறார். அதன் அடியில் இருந்து எதோ கதிரியக்கம் வந்து ஸ்பாஸ்கி மூளையை தாக்கி அவரை யோசிக்க விடாமல் செய்கிறது என்று சோவியத் யூனியன் குற்றச்சாட்டு வைத்தது. விளையாடும் அறையை பரிசோதித்து கே.ஜி.பி.. ஒரு செத்த ஈயைத் தவிர வேறு எதுவும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிஷர் வென்று சாம்பியன் ஆனார்.

இதைப் பற்றி ஒரு அருமையான டாகுமெண்டரி யு ட்யுபில் இருக்கிறது - இங்கு க்ளிக்கிப் பாருங்கள்.

உலக அளவில் இது தான் அவர் கடைசியாய் விளையாடிய ஆட்டம். அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சோகம். தான் பயணம் செய்யும் விமானத்தில் கே.ஜி.பி. குண்டு வைத்து விடுமோ, சோற்றில் விஷம் கலக்குமோ என்றெல்லாம் பல வகையில் பயந்து மன உளைச்சல்களுக்கு ஆளாகி பல நாடுகளில் வசித்து பின்னர் கடைசியாக அவருக்கு முடி சூட்டிய நாடான ஐஸ்லாண்டில் தன் கடைசி காலத்தை கழித்தார்.

செஸ் விளையாட்டில் இவர் காட்டிய புதுமைகளும், செய்த புரட்சிகளும் ஏராளம். சதுரங்க சரித்திரத்தில் இந்த சக்கரவர்த்திக்கு என்றும் தனி இடம் உண்டு.


பாபா ஆம்தே:

ஏஞ்சலினா ஏன் இளைத்து விட்டார், பிரிட்னிக்கு ஏன் பித்து பிடித்து விட்டது என்ற செய்திகள் எல்லாம் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்த போது நடுவில் ஒரு இந்தியரை பற்றி செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

அமெரிக்க பத்திரிகையில் யார் இந்த இந்தியர் என்று படித்த போது தான் தெரிந்தது எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று. இவரைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போனதே என்று குற்ற உணர்ச்சி வேறு தொற்றிக் கொண்டது. (மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசங்களை வெள்ளித் திரையில் பார்த்து பழகியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் அதிகம் சுவாரஸ்யமாய் தெரிவதில்லையோ என்னமோ? )

குஷ்ட ரோகிகளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கும், ஒதுக்கும் சமுதாயத்தில் அவர்களுக்காக ஆனந்த வனம் கட்டியவர். கதராடை அணிந்து காந்தியக் கொள்கைப் படி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் தான் பாபா ஆம்தே.

நாற்பதுகளின் இறுதியில் ஒரு நாள் - மழையில் நடந்து போய்க் கொண்டிருந்த பாபா ரோட்டோரமாய் ஒரு மனிதன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். அந்த மனிதனுக்கு கையில் விரல்கள் இல்லை. புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை தின்றுக் கொண்டிருந்தன. (படிக்கும் போதே ஒரு அதிர்ச்சியாக இல்லை?!). முதலில் பயந்து ஓடியவர் மீண்டும் அந்த துளசிராமிடம் திரும்பி வந்தார். அவனுக்கு உணவும்,மழையில் நனையாமல் இருக்க ஒரு மூங்கில் பந்தலும் அமைத்துக் கொடுத்தார். அவனை அவர் இறுதி வரை மறக்கவில்லை. அன்று ஆரம்பித்தது தான் இவரின் வாழ்நாள் பயணம்.

ஜூன் 1951 - மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், ஒரு நொண்டி மாடு, ஒரு நாய், பதினான்கு ரூபாய் மற்றும் சில நோயாளிகள் - இவர்களை வைத்துக் கொண்டு தேளும் பாம்பும் நிறைந்த ஒரு கரடு முரடான நிலத்தை பச்சை பசுமையான ஆனந்தவனமாக மாற்றிக் காட்டி இருக்கிறார் இந்த பாபா - வித்தையால் அல்ல; வியர்வையால் !! பாவத்தின் சம்பளம் தான் குஷ்டம் என்று மக்கள் கருதி வரும் காலத்தில் அவர்களும் சுய மரியாதையுடன் வாழ வகை செய்திருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்,கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், நிகோல் கிட்மன் என்று என் கனவுக் கன்னிகள் பட்டியல் நீள்கிறது. (ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட்டுக்கு தனியாகவும், கோலிவுட்டுக்கு தனியாகவும் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன்)அது போல இவரும் க்ரீடா கார்போ, நார்மா ஷியரெர் என்று வைத்திருந்தாராம். ஆனால் ஒரு துளசிராம் அவரை மாற்றி விட்டான்.

சொத்து, சுகம் துறந்து (தன் அப்பா பெரிய ஜமீந்தாராக இருந்தும் அவரிடம் இருந்து ஒரு சல்லிக் காசு பெறவில்லை), வேலை துறந்து,(காசு கொழிக்கும் வக்கீல் வேலை)கெளரவம் பார்க்காமல் (தலை மீது மனிதக் கழிவுகளை சுமந்து சென்று இருக்கிறார்)மற்றவர்களின் சேவைக்காக தன் வாழக்கையை அர்ப்பணித்து இருக்கிறார்.

இந்த மகானுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இவர் செய்தவற்றில் கால்வாசி செய்தால் கூட இந்த உலகமே ஆனந்தவனமாக ஆகி விடாது?

Friday, January 25, 2008

ஹாரி பாட்டரும் வாண்டு மாமாவும்

எனக்கு வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு மணி நேரம் ரயில் பிரயாணம் செய்தாக வேண்டும். அது எனக்கு பிடித்தமானதும் கூட. ஏறி அமர்ந்ததும் தூக்கம் கண்களை தொற்றிக் கொள்ளும். அந்த நித்ரானுபவம் இருக்கிறதே...ஆஹா!!

ஆனால் சுற்றி அமர்ந்து வரும் சக பிரயாணிகள் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருப்பார்கள். அப்படி விழுந்து விழுந்து என்ன தான் படிக்கிறார்கள் என்று பார்த்தால் அதிகம் தென்பட்டது இந்த ஹாரி பாட்டர் புத்தகம் தான். அதை எழுதிய அம்மணி கஞ்சிக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது இங்கிலாந்து ராணியை விட அதிகம் சொத்து வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

நானும் அந்த படம் எல்லாம் பார்த்தேன். சுமார் ரகம் தான். (புத்தகம் தான் அருமை என்கிறார்கள் பாட்டர் விசிறிகள்). நான் சிறிய வயதில் படித்து வளர்ந்ததெல்லாம் வாண்டு மாமா, பூவண்ணன், அகிலன் போன்றோர் புத்தகங்கள் தான். அதிலும் வாண்டு மாமாவை மிஞ்ச ஆள் கிடையாது.

திருவையாற்றில் தாத்தா வீட்டில் ஒரு பெரிய மர அலமாரி நிறைய புத்தகங்கள் இருக்கும். கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மற்றும் இன்ன பிற தடி தடியான வரலாற்று புதினங்களிடையே நம் வாண்டு மாமாவும் இருப்பார். மூன்று மந்திரவாதிகள், கரடி கோட்டை போன்ற படக்கதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை. எப்பொழுது போனாலும் அதை படித்து முடித்து விட்டு தான் மற்ற புத்தகங்கள் எல்லாம். அவை அளித்த மகிழ்ச்சி பொன்னியின் செல்வனோ, யவன ராணியோ கொடுத்ததா என்பது சந்தேகமே! வாண்டு மாமாவிற்கு எப்படி சிறுவர்களின் நாடி பிடித்து எழுத தெரிந்தது என்று வியந்தது உண்டு.

மூன்று மந்திரவாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டையன், குட்டையன், நெட்டையன் என்று மூன்று பேர். கட்டையன் கண்ணை திறந்தாலே பார்ப்பதெல்லாம் எரித்து விடுவான். குட்டையன் வாயால் ஊதியே ஒரு புயல் காற்று உருவாக்கி விடுவான். நெட்டையன் ஒரு அடி எடுத்து வைத்தாலே சென்னையிலிருந்து செங்கல்பட்டு போய் விடுவான். இந்த மூன்று பேரை வைத்துக் கொண்டு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருக்கும் அழகான இளவரசியை மீட்க கிளம்பும் இளவரசன் கதை தான் மூன்று மந்திரவாதிகள். இதை படங்களுடன் யோசித்து பாருங்கள். யாருக்கு தான் பிடிக்காது?

இப்பொழுதும் கூட இந்த மாதிரி "Damsel in distress" ஐ காப்பாத்தும் "Knight in the shining armor" கதைகள் எல்லாம் சட்டென்று பிடித்து விடுகிறது. நம்மை இளவரசர் ரோலில் பொருத்திக் கொண்டு நாமே இளவரசியை காப்பாத்துவது போன்ற கற்பனைக் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் ஓடுவதால் தானோ என்னமோ! பின்னாளில் நண்பன் ஒருவன் "tales of the amber sea" என்று எஸ்டோனியா, லிதுவேனியா, மற்றும் லேட்வியா நாடுகளில் புழங்கிய fairy tales தொகுப்பிலிருந்து ஒரு கதை சொன்னான். மூன்று மந்திரவாதிகள் கதை வாண்டு மாமா இங்கிருந்து சுட்டு கொஞ்சம் மசாலா சேர்த்திருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தேகம்.

ஆரணி பொது நூலகத்தில் காசி என்ற ஒரு தாத்தா தான் நூலகர். அவருக்கு அடிக்கடி பீடி பிடித்தாக வேண்டும். அப்போதெல்லாம் "தம்பி, கொஞ்சம் பாத்துக்க" என்று என்னிடம் சொல்லி விட்டு லுங்கியை மடித்துக் கொண்டு டீக்கடை போய் விடுவார். அப்போது கிடைக்கும் தற்காலிக நூலகர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, வரும் புத்தகங்களில் வாண்டு மாமா புத்தகங்களை எல்லாம் ஆங்கில புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்து விடுவேன். (அந்த ஊரில் ஆங்கில புத்தகப் பக்கம் ஓரிருவர் தான் போவார்கள்). அப்படி எல்லாம் செய்து படித்த புத்தகங்கள் தான் புலி வளர்த்த பிள்ளையும், கண்ணாடி மனிதனும் , பலே பாலுவும் பறக்கும் டிராயரும், பலே பாலுவும் பாட்டில் பூதமும் போன்றவை.

பூந்தளிர்,ரத்னபாலா போன்ற புத்தகங்களில் வரும் அவர் தொடர் கதைகளும், படக்கதைகளும் அத்தனை தரம் வாய்ந்தவை. விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்து உருமாறும் விதியண்ணல் இன்றும் வியக்க வைப்பார் (இன்னும் நினைவு இருக்கிறது - அமைதியாய் ஒருவனை கொன்று விட்டு ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் - "இதுக்கு தான் நோக்காடு இல்லாத சாக்காடுனு பேர்).

இப்பொழுது வரும் சிறுவர் இலக்கியம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் வாண்டு மாமா போல் இன்னொருவர் வருவது கடினமே. எத்தனை எனிட் ப்ளைடன்களும், ஹார்டி பாய்சும்,நான்சி கிரேசும் , ஹாரி பாட்டர்களும் வந்தாலும் வாண்டு மாமா காட்டிய விந்தை உலகங்களுக்கு ஈடாகுமா?