Monday, September 17, 2007

குவாட்டர் மகிமை

போன பதிப்பில் போட்ட கவிதையை படித்து விட்டு நண்பன் சொன்னான். மச்சான் தப்பா நெனச்சுக்காத "ஒண்ணும் ஃப்ரெஷ் அப்ரோச் இல்ல"

வேற என்ன மச்சான் எழுத சொல்ற? சங்ககாலத்துலேர்ந்து பெண்ணை மானுக்கும்,மீனுக்கும்,நிலவுக்கும் மலருக்கும் தானே ஒப்பிடறாங்க!

நீ வித்தியாசமா யோசி மச்சான். நல்லா யோசிச்சு எழுது.

இப்போ மட்டும் என்ன தூக்கத்துலயா கிறுக்கறோம் என்று எண்ணிக் கொண்டேன்.

என் கைக்குள் அடங்கும் மௌஸ் குட்டியே!
எனக்கு வண்ணம் காட்டும் காதோட் ரே ட்யூபே! னு சொல்லவா?(அது கூட எல்.சி.டி ஸ்கிரீனுக்கு மாறிட்டேனே! )

வித்தியாசமாய் யோசிப்பது எப்படினு ஒரே யோசனையாய் இருந்தேன்.

"என்ன லே...ஒரு மணி நேரமா விட்டத்த் வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்க.பல்லி எப்படி மேட்டர் பண்ணுதுனு ஆராய்ச்சி பண்ணுறியா லே? எதனாச்சும் புளுக்க போட்டுரப் போவுது லே ஒன் வாய்ல!"

பாசக்கார பாண்டி அண்ணன். எப்பவும் என் கவலையைத் தான் அவரும் படுவார்.

ஆஸ்கர் ஓயில்ட் சொல்லி இருப்பாரே - My own business always bores me to death; I prefer other people's. பாண்டி அண்ணன் மாதிரி யாரையாவது பார்த்து விட்டுத் தான் அவர் எழுதி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பாண்டி அண்ணன் உண்மையில் நல்லவர். ஓரளவு படித்தவர்.வெகுளியாய் பேசுகிறாரா கேலி செய்கிறாரா என்று எனக்கு பாதி நேரம் தெரியாது.

அண்ணே!கவிதைக்கு ஃப்ரெஷ் அப்ரோச் வேணும்ணே!

என்னது களுதைக்கா?

ஆமா. கழுதைக்கு தான் ப்ரேஷ் அப்ரோச் வேணும்னு சொல்வாங்களா? கவி - கவி - கவிதை!

சரி சரி ரொம்ப விக்காத லே ! கவிதையா? என்னா லே ஏதாவது பொண்ணு மடக்கணுமா?

அதெல்லாம் இல்லீங்கண்ணே! நாட்டுல நாலு பேரு எழுதறத பாத்து நமக்கும் ஆசை.

அவன் அவன் இப்போ இப்படி தான லே அலையறீங்க. அன்னிக்கு என்னடானா அந்த கிறுக்கு பய கோபி மாடு வாலை தூக்கறத பாத்துட்டு "கவிதை கவிதை னான்.."

நானும் நம்ப சோடாபுட்டி வாத்தி பொண்ணு கவிதா தான் வருதுனு நெனச்சு எங்கடானு கேட்டேன்.

"வில் வளைத்தான் ராமன் - பிறந்தது ராமாயணம்
வால் வளைத்தது மாடு - பிறந்தது கோமியம்"

அப்படீங்கறான்.என்னடா இதுனா அது தான் கவிதைனு சொல்றான்.

ஒனக்கும் அந்த மாதிரி கவிதை வேணும்னா சொல்லு. நம்ம கோவாலு கிட்ட சொல்லி மாட்டு கொட்டா கிட்ட கூட்டி போவச் சோல்றேன்.

எல்லாரும் மாடு சாணி போட்றத பத்தியே எழுதிட்டா "ப்ரேஷ் அப்ரோச்" எங்கண்ணே?

அப்போ குதர லாயம் கூட்டி போவ சொல்லவா?

அண்ணே வெளையாடாதீங்க.

இந்தா லே குவாட்டர் அடி! காதல் கவிதைனா குப்புறப்படு
சோக கவிதைக்கு மல்லாக்க படு லே...

ஆஹா! புது விஷயமா இருக்கே!

அண்ணே குவாட்டர் அடிச்சுட்டு படுத்தா தூக்கம் வந்துடாதாண்ணே?

எலே மொதல்ல வாந்தி வரும் லே. அதுனால ஒடம்புக்குள்ள இருக்கற கெட்டதெல்லாம்
வெளியில போயிடும். அப்புறம் அடி மனசுலேர்ந்து சுத்தமான கருத்தெல்லாம் கவிதையா வரும் லே!அப்புறம் தான் லே தூக்கம் எல்லாம்!

தன்னிலை மறந்த நிலையில் ஆழ்மன எண்ணங்கள் வருவது தான் இதுவா? இதை வித்யாசமாய் சொன்னால் அது மீமெய்மியல்(ஸர்ரியலிஸம்)இல்லயா? ஆஹா!மனசுலே எது ஆழம்,எது மேலனு தெரியாத ஆள் நான்!

அண்ணே! அப்போ நான் எப்படி அந்த கருத்தெல்லாம் எழுதறது? கை நடுங்கிச்சின்னா ஒத்த கொம்பு ரெட்ட கொம்பெல்லாம் கூட ஒழுங்கா போட முடியாதுண்ணே!

நான் எதுக்கு லே இருக்கேன்!பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் கூட எழுதறத்துக்கு ஆள் வெச்சுருக்காங்களாம்.எதுக்குன்னு நினைக்கற?

அண்ணே! நான் குவாட்டர் அடிக்கறத்துக்கு என் மூத்தரத்த குடிச்சுட்டு படுப்பேன்ணே.ரெண்டும் ஒரே வாசனை தான் அடிக்குது.

கவிதை வேணும்னா இது. இல்லை எனக்கு மூத்திரம் தான் வேணும்னா பாத்ரூம் போ. மூத்திரம் குடிச்சசவன் எல்லாம் மொராஜி தேசாய் ஆவ முடியாது.அதையும் தெரிஞ்சுக்கோ!

தண்ணி அடிச்சவன் எல்லாம் கண்ணதாசன் ஆயிட முடியுமாண்ணே?

எலெ..வர வர வாய் அதிகமா போச்சு லே ஒனக்கு. இருட்டு கட வாசல்ல பாதி வாழ்க்கை சுருட்டு குடிச்சசவன் லே நானு. எனக்கேவா லே?

அண்ணே! இது தாண்ணே...
சொல்லணும் ஆனா சொல்லக் கூடாது...புதுக்கவிதை!

ஆங்?

அண்ணே "திருநெல்வேலிகாரனுக்கே அல்வாவா அப்படீங்கறத சொல்லாமலே சொன்னீங்க இல்ல?

அல்வானு சொல்லாம அல்வா குடுக்கறது தான் புது கவிதையா?" என்ன லே கொழப்பற?

"சொல்லணும் ஆனா சொல்லக்கூடாது
புரியணும் ஆனா புரியக்கூடாது
இது தானே புதுக்கவிதை"

(எனக்குள்)ஆஹா புதுக்கவிதைக்கு நாம்ப சொல்ற இலக்கணமே அதற்கான இலக்கியமா இருக்கே!

எலே குவாட்டர் அடிக்காமயே இப்படி பேசறியே லே நீ? பாரதி பாரதிதாசன் எல்லாம்
சொல்ல வந்தத புரியற மாதிரி சொல்லிட்டு தான லே போனாங்க!

அண்ணே! காலம் மாறிப் போச்சு.அதுக்கேற்ப கருத்து, அத சொல்றதுக்கான வடிவம் எல்லாம்
மாறி கிட்டு வருது. அந்த காலத்துல சீத்தலை சாத்தனார் எழுதுன மாதிரி இப்பொவும் எழுத முடியாமா? நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா எல்லாம் மூட்ட கட்டியாச்சு. அறு சீர் கழி நெடிலடி ஆசிரியப்பா எல்லாம் பத்தாம் க்ளாஸ் பசங்க படிக்கற விஷயம். தேவை இல்லாம தளை தட்டி எழுதறத்துக்கு புது கவிதையா சொல்லிட்டு போயிடலாம்.

என்னமோ சொல்ற லெ..புது கவிதை கொஞ்சம் வெவகாரமான மேட்டர்னு தான் தோணுது.
புரியாம தான் இருக்கு.ஆனா லே ஒண்ணு தெளிவா புரிஞ்ச விஷயம் எல்லாத்துக்கும் குவாட்டர் வேணும் லே...கபிலர் கூட கள்ளு குடிச்சுட்டு தான் பாரி ஓரி பத்தி எல்லாம் பாடினாறாம் லே.

ஆஹா அப்படியா? புதுசா இருக்கே?

இதுல என்ன லே புதுசு இருக்கு? கம்பனே பரணர் கிட்ட பிசச வாங்கணும். ராமர் விட்ட அம்பு ஏழு மரத்த தான் குத்தி நின்னுச்சு.ஓரி விட்ட அம்பு காட்டுல ஓடர விலங்கெல்லாம் குத்தி வந்து நிக்குதுங்கற ரேஞ்சுக்கு சொல்றாரு...எப்படி?

அண்ணே! உயர்வு நவிற்சி அணியா கூட இருக்கும்ணே! தப்பா சொல்லாதீங்க. நான் கூட என்னோட காதலிய பாத்துட்டு சூரியன் சந்திரன் எல்லாம் சேவகம் செய்யறதா சொல்லி இருக்கேன்.

லே மக்கா.. சூரியன் சந்திரன் எல்லாம் கிறுக்கு பயலுங்க. எவன் காதலியப் பாத்தாலும் கிறு கிறுத்து போயிடுவானுங்க...

(எனக்குள்)ஆஹா!அப்போ நண்பன் சொன்னது உண்மையா?

எந்த மாக்கானாவது முல்லைக்கு தேர் குடுப்பானா லே.ரெண்டு கை தட்டி சேவகனை கூப்டு ரெண்டு கொம்பு நடுறா னா நட்டுட்டு போறான் அவன். பாரி ஊத்திக்கொடுத்தார் இல்லெ?

அண்ணே!தெரியாத விஷயம் எல்லாம் அடிச்சு பேசக் கூடாதுண்ணே!

எலே ..அத்த விடு... இப்போ இத நீ குடிக்கிறியா இல்லயா?

குடுங்கண்ணே!இவ்ளோ சொல்லிட்டீங்க!

(பாட்டில் வாங்கி)அண்ணே!கழுகு படம் எல்லாம் வேற போட்டிருக்குண்ணே"

குடிச்சா பருந்தா பறப்ப னு சொல்றாங்க பாரு லெ. பாட்டில்ல புதுக்கவிதை. இவனுங்களும் சொல்றானுங்க ஆனா சொல்லல..

ஆஹா!

மூக்கை பிடித்து ரெண்டு மிடறு விழுங்கினேன். கவிதைக்கான தியாகம்னு மனதை ஆறுதல் படுத்திக்கிட்டேன்.

அண்ணே!ஒரே ஒரு சந்தேகம். இந்த பெண் கவிஞர்களும் தண்ணி அடிப்பாங்களா?
அவங்களுக்கு எப்படி கவிதை வருது?

அவங்களுக்கு எல்லாம் தண்ணி அடிக்கற புருஷன் இருந்துருப்பான்.அவன பாத்த சோகத்துல அவங்களுக்கும் கவிதை வருதோ என்னமோ! எலே, வேண்டாத விஷயத்த எல்லாம் பெறாண்டாத லே."

அப்புறம் எனக்கு குப்புற படுத்தது தான் தெரியும்.

மறு நாள் காலையில் எழுந்தேன். பாண்டியும் அப்பொழுது தான் எழுந்திருந்திருப்பார் போல.பாத்‌ரூம் போவதருக்கு ஆயத்தமாக கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு இருந்தார்.

எலே..நேத்து கம்பன், கபிலன் னு பேசினத்துல ஒனக்கு ஒரு கவிதை வந்துருக்குல்லெ.
ராமர் அயோததினு ஏதோ சொல்லி இருக்க பாரு. புரியுது ஆனா புரியல...புது கவிதை னு தான் நெனைக்கறேன். ஆனா காதல் மேட்டரா தெரியல...போய் பல்லு வெளகிட்டு வரேன்...

பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாளில் ஆறு வரியில் எழுதி இருந்தார்...தலைப்பு வேறு அதற்கு!

பயிரை மேயும் வேலிகள்:
----------------------
ராம பாணம்
அயோத்தி மக்களையே தாக்கும் பொழுது
புத்த போதி மரங்கள்
கயாவில் அமைதி காத்தன
இந்த மெடூசாவின் தலைகள்
ஹெர்கூலிய முயற்சியையும் விஞ்சியவை!!

எனக்கும் புரியுது ஆனா புரியல. ஆஹா! எனக்கும் புதுக் கவிதை வந்துடுச்சா?