மற்றவர் படிக்கும்படி எழுதுவது ஒரு கலை.அவ்வாறு படிக்க விழைபவரை உறங்க வைப்பது இன்னொரு கலை. முதற் கலையில் தேர்ச்சி பெறாவிடினும், இரண்டாம் கலையை முயன்றுவிடுவது என்று முடிவெடுத்தேன். 
அதற்கு கட்டுரையை விட சிறந்த கருவி வேறேது? படிப்பவரை கண்ணயர வைப்பது கட்டுரையின் தலையாய பண்பு அல்லவா? ஒரு கட்டுரையாளனின் வெற்றி வாசகன் எத்தனை விரைவில் 'கண்ணை கட்டுகிறது' என்று சொல்கிறான் என்பதில் உள்ளது.
போன பதிப்பிற்கு பிறகு இத்தனை பெரிய இடைவெளி விழுந்து விட்டதால் இந்த இடைவெளி பற்றியே ஒரு கட்டுரை எழுதிவிடுவோம் என்று துணிந்தேன். இதோ அந்த கட்டுரை. 
   இடைவெளி தான் மனிதனுக்கு எத்தனை அத்தியாவசியமாகப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையைப் பற்றி இவ்வாறு சொன்னதாக கேள்வி - ஏற்ற இறக்க ஒலியில் சரியான  இடங்களில்  இடைவெளி விடுவது  தான் இசை. ("sound punctuated with pauses at appropriate places). 
   நாம் மற்றவருடன் பழகும் போதும் அவரவருக்கு  ஏற்றபடி தகுந்த  இடைவெளி விட்டு தான் பழகுகிறோம் இல்லையா? இன்று கட்டி புரண்டு நாளை கல் எறிவதை விட என்றும் எட்ட நின்று சிரித்து பேசுவது சாலச் சிறந்தது அல்லவா?
    இணை பிரியா காதலர்கள் இடையேயும் இடைவெளி தேவையாம். இந்த தற்கால பிரிவு அவர்களிடையே பாசத்தை (தாபத்தையும் கூட!) அதிகப்படுத்துவதாக காதல் வல்லுனர்கள் சொல்லுகின்றனர். அனால்  இந்த இடைவெளியும் அளவோடு இருக்க வேண்டும். அதிக இடைவெளியினால் காதலிக்கு பசலை நோய் வந்து உடல் மெலிந்து  வளையல் ஒட்டியாணம் ஆன கதை எல்லாம் ஒரு சங்க கால பாடல் சொல்கிறது.(ஆனால் இந்த காலத்தில் அவ்வாறு எல்லாம் யாரும் காத்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.) 
வள்ளுவர் கூட பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், பசப்பறுபருவரல் என்று  பல அதிகாரங்கள் இயற்றி இருக்கிறார். காமத்துப்பால் - கற்பியல் முழுவதும் இது தான் - பிரிந்த காதலனை எண்ணிப் புலம்புதல்.
சில இடங்களில் இடைவெளி கூடாது என்கிறார். பின் வரும் குறளை கவனிக்க!
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
காற்றும் புக முடியாதபடி இடைவெளி இல்லாமல் இறுக்கித் தழுவுதல் இன்ப உறவுக்கு வழி வகுக்கும் என்கிறார். 
பின்னர் அவ்வாறு குளிர்ந்த காற்று புகுந்து விட்டதால் கண்கலங்கும் பேதை பற்றி உறுப்புநலன் அறிதல் அதிகாரத்தில் கூறுகிறார்.   
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
     மூளைக்கும்  மனதிற்கும்  கொடுக்கப்படும்  இந்த சிறு  ஓய்வு  எத்தனை  விந்தைகளை  செய்கிறது. பல  கதைகள் கேட்டு இருக்கிறோம். எவ்வாறு கனவில்  பலருக்கு  அதிசயமான  கண்டுபிடிப்புகள் எல்லாம் தோன்றுகின்றன என்று. தையல்  இயந்திரம்  கண்டு பிடித்தவருக்கு  எவ்வாறு ஊசி முனையில்  ஒரு ஓட்டை வைக்க வேண்டும் என்று  தோன்றியது? அவரது  கனவில்  வேல் ஏந்திய ஆதிவாசிகள் அவரை சுற்றி நாட்டியம் ஆடுகிறார்கள் (அருமையான  உணவு  அகப்பட்டு  விட்டது  என்று தான்!). அப்போது  அவர்  வேலின்  நுனியை கவனிக்க, அதில்  ஒரு சிறு துவாரம் இருந்திருக்கிறது. பிறந்தது ஊசி! 
   கணித மேதை ராமானுஜம் கணக்கு போட்டது அத்தனையும் கனவில் தானாம். அத்தனை பார்முலாவும் நாமக்கல் என்ற தெய்வம் கனவில் சொன்னதாக அவர் கூறுகிறார். விழிப்பு நிலையில் மூளைக்கு அதிக வேலை குடுப்பவர்களுக்கு கனவு நிலையில் பதில்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மூளைக்கு  குடுக்கும இந்த இடைவெளியில அது போய் ஆழ்மனத்தை  எல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறது போல.
   நான் மூளைக்கு கொடுக்கும் அதிக பட்ச வேலையே கண்டக்டரிடம் பஸ் டிக்கெட் வாங்கியவுடன் நமக்கு மீதி சில்லறை எத்தனை தர வேண்டும் என்று போடும் கணக்கு தான். ஆகையால் எனக்கு வருவதெல்லாம் உருப்புடாத கன்றாவி கனவுகள் தான்! அதுவும் விழித்தவுடன் மறந்தும் விடுகிறது.
   இடைவெளியின் அவசியம் உணர பேருந்து பிரயாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் பயப்படும் விஷயம் அது. சில ஓட்டுனர்கள் பிரயாணத்தின் நடுவே இடைவெளி விடுவதே இல்லை. அடித்து தள்ளிக் கொண்டு பறப்பதாக நினைப்பு. அத்தனை நேரமும் அடக்கி வைத்து அவஸ்தைபடுபவர்களுக்கு தானே தெரியும். அதனாலேயே பேருந்தில் பிரயாணம் என்றாலே தண்ணீர், இளநீர் எதுவும் குடிப்பது இல்லை. 
  இடைவெளியின் அத்தியாவசியத்தை  இதை விடவும்  உணர்த்த  ஒன்று  இருக்கிறது  - சினிமா கொட்டகை. பல படங்கள் நமக்கு பாதியில் எழுந்து போக ஒரு வாய்ப்பு அளிக்கிறதே! அதை விடுங்கள், தமிழ்  சினிமாவில்  கொடி கட்டி பறந்த சிம்ரனின் சிங்காரமே அவர்  "இடைவெளி" தானே! 
தமிழ் கவிஞர்களின் கற்பனை  ஊற்று  பெருக்கெடுத்து கரை புரண்ட ஓடுவதும் இங்கு தான்!
"பெண்  இடையும்  இறைவனும்  ஒன்று தான்
 ரெண்டும்  இருந்தும்  தெரிவதே  இல்லை !!"
இடையும் இறைவனும் ஒன்று என்று சொல்லியாகி விட்டது! இதற்கு மேல் நாம் என்ன சொல்ல! 
சற்று இடைவெளி விட்டு பார்ப்போமா?
Friday, December 28, 2007
இடைவெளி
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
8:28 PM
2
comments
 
Subscribe to:
Comments (Atom)
 

