கவிதையுடனான என்னுடைய உறவு சற்று நீண்டது தான். ஆனால் பலமானது அல்ல! தொட்ட குறை விட்ட குறையாகத் தான் பழகி வருகிறோம் நானும் கவிதையும்!
ஏழாம் க்ளாஸ்,எட்டாம் க்ளாஸ் படிக்கும் போது பாரதியின் பாடல்களை படித்து விட்டு நாமும் கவிதை எழுதினால் என்ன என்று தோன்றியது. அதற்கென்று ஒரு புத்தகம், ஜீவா என்ற புனைப்பெயர் வேறு! என் அருகில் யோகேஷ் என்று ஒரு நல்ல பையன். நான் என்ன எழுதித் தந்தாலும் வாங்கி படித்து 10/10 போட்டு V.good போட்டுத் தருவான். அதனால் அவனிடம் மட்டுமே குடுத்து வந்தேன். அவனுக்கும் பெருமையாய் இருந்ததோ என்னமோ,நாம் கவிதை எல்லாம் மதீப்பீடு செய்கிறோம் என்று!
அப்போது கவிதை என்றால் எனக்கு எதுகையோ அல்லது மோனையோ இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டாலே கவிதை தான்.
ஒரு நாள் அம்மாவிடன் எடுத்து கொண்டு போய் நீட்டினேன். குழாய் அடிச் சண்டை என்ற பெயரில்.
முண்டமாய் முட்டி நிற்கும் அண்டாக்கள்
முடமாய் வாய் பிளக்கும் குடங்கள்
கொண்டைகள் போடுகின்றன இங்கே சண்டைகள்!
என்னடா இது! முண்டம்,முடம்னு! ஏதாவது நல்லதா எழுதிண்டு வாடா என்றாள்.
சரி, நாட்டுக்கு நாமும் அறிவுரை சொல்வோமே என்று வேறு ஒன்று எழுதிக் கொண்டு போனேன். எல்லாவற்றிலும் நான்கு வரிகள் தான் ஞாபகம் இருக்கிறது.
படகான வாழ்க்கையிலே
பங்கம் ஏதும் நேராமல்
பக்குவமாய் நீ ஓட்டி
பல காலம் சிறந்திடுவாய்!
அட பரவாயில்லாயே! என்றாள்.
நமக்குத் தான் எதை எழுதினாலும் நாலு பேரிடம் குடுத்து பாராட்டு வாங்க வேண்டுமே. ஆனால் இது ஒரு வகையில் நல்லதும் கூட. சில பேர் கர்வ பங்கம் செய்து விடுவார்கள். குப்பையாய் எழுதிவிட்டு கும்மாளம் அடிக்காதே என்று!
எனக்கு அப்படி கர்வ பங்கம் செய்தவன் என் அக்கா பையன்.
என் கவிதை புத்தகத்தை படித்து விட்டு "என்னடா எழுதி இருக்க,எல்லாம் வேஸ்ட்" னு சொல்லிட்டான். அப்போது தான் எனக்கு அந்த யோகேஷ் எவ்வளவு நல்லவன் என்று புரிந்தது !
டேய்,ஒண்ணு கூட தேறாதா?
இதோ இது பரவா இல்லை என்றான்.
இன்னும் அந்த "கவிதையில்" எனக்கு ஞாபகம் இருக்கும் வரிகள்.
சிக்கலான விஷயத்துக்கு
சித்திரகுப்தன் போதவில்லை
எருமை மாடோ சோம்பேறி
எங்கேயுமே செல்வதில்லை
புரவி வாங்கி புவிக்கு
புத்துணர்வுடன் கிளம்பிய எமனின்
பருத்த உடலை சுமந்து குதிரை
பறந்து செல்ல முடியவில்லை
பிறகு அந்த குதிரை கீழே விழுந்து,எமனும் சேர்ந்து விழுந்து,அவன் மீசையில் எத்தனை மண் ஒட்டியது,கணிதப்புலிகளே கணக்கிடுங்கள் என்று வரும்.
அவன் "வேஸ்ட்" னு சொன்ன அத்தனை கவிதைகளும் மறந்து விட்டன - இன்னொன்றைத் தவிர.
அப்போது தான் எதுகை, மோனையைத் தாண்டி இயைபு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து ஒரு கவிதை எழுத வேண்டும் என்று ஆசை. டி.ஆர். பாணி வசனங்கள் மாதிரி.
இந்துக்களின் வேத நூல் மறை
இஸ்லாமியர் பார்ப்பது மூன்றாம் பிறை
இயேசுபிரானே கிறிஸ்தவர்களுக்கு இறை
இறை இல்லாதோர் இவற்றில் பார்ப்பதோ குறை
இவர்களின் கண்களை மறைப்பதோ திரை
இது விலகினால் குறை காண மாட்டார் - கடைசி வரை.
அதற்கு பிறகு நான் கவிதை என்ற பெயரில் எதுவும் எழுதவில்லை.
ஆரணியில் இருந்து சென்னை மாற்றலாகி வந்த நேரம். ஜீன்ஸ் பாண்ட், டி-ஷர்ட் கிளிகளுடன் கலந்துறவாட நுனி நாக்கு ஆங்கிலம் அத்தியாவசியம் என்று ஞானம் பிறந்த காலம். Kidnapped-இலும்,Lorna Doone-இலும் ஆரம்பித்து, Sidney Sheldon, Jeffrey archer என்று போய்விட்டது. தமிழ் கவிதைகளுடனான தொடர்பு பலவீனமான நிலைமையில் தான் அதற்கு அப்புறம். ஒரே ஒரு விதிவிலக்கு - ப்ளஸ் 2 தமிழ் பாட புத்தகத்தில் அப்துல் ரஹ்மான் எழுதிய வேர்வைத்(வியர்வைத்?)தாலி. என்ன ஒரு கவிதை!
இந்த ஆதிரைப் பருக்கைகள் விழுந்த பின்னர்
மழலை மண் வாயில் எல்லாம் தேவாரங்கள்.
நான்கு வருடங்கள் பின்பும் என்னை புத்தக விழாவில் அப்துல் ரஹ்மான் புத்தகத்தை வாங்க தூண்டிய வரிகள் அவை.
பத்து நாட்கள் முன்பு தான் தமிழ் வலையுலகை எட்டிப் பார்த்த கத்துக்குட்டி நான்.பல வலைப்பதிவுகளில் காதல் கதைகள்/கவிதைகள் படித்த தாக்கத்தில் ஏதாவது நமக்கும் வருமா என்று ஒரு முனைப்பாய் முக்கியதில் ஆறுதலாய் ஆறு வரிகள் வந்தன!
புதுக் கவிதை என்ற பெயரில் பிட்டு பிட்டு ஏழெட்டு பததிகளாய் வைத்து இருக்கிறேன் - பாருங்கள் ஏதாவது தேறுமா என்று!
பௌர்ணமி இரவில்:
--------------------------------------
கடற்கரை மணலில் கைவிரலால்
நீ கோலமிடும் அழகைக் கண்டு தான்
சிப்பிகள் தங்கள் முத்துப்பல் இழந்து
வாய் பிளந்து நிற்கின்றனவோ?
வளை பறிக்கும் நண்டுகள்
நீ கால் பதித்த இடங்களில் எல்லாம்
பாத பூஜை செய்கின்றனவோ?
உன் பார்வையின் வீரியம்
தாங்காமல் தான்
முகம் சிவந்து அந்திச்சூரியனும்
கடலில் குதித்து விட்டானோ?
நீ கண் சிமிட்டும் அழகைக்
காணத் தான் மேற்கில்
வீனஸ் தேவதையும்
இமைக்க மறந்து பார்க்கிறாளோ?
உன் பத்து விரல்களிலும்
குட்டி நிலவுகளை கண்டு
விண்மீன்கள் எல்லாம் உன்
பணிப்பெண்களாக வர
விண்ணப்பம் இடுகின்றனவோ?
உன் கன்னக்கதுப்பில்
முத்தமிட்டுச் சென்ற விட்டில் பூச்சிகள்
பிறவிப்பயன் பெற்ற மகிழ்ச்சியில் தான்
உயிர் நீத்து விடுகிறனவோ?
நேற்று வரை பாதி முகம் காட்டி
பவனி வந்த குறைமதி ஒன்று
உன் முன் மண்டியிடத்தான்
இன்று முந்தி வந்து நிற்கிறதோ?
வழி காட்டும் திசை காட்டிகள்
உன் காந்த விழிகளில் ஈர்க்கப்பட்டு
இடம் மாறிக் காட்டுவதால்
கப்பல்கள் கடலில்
தடம் மாறி செல்கிறதாம்!
இத்தனை நேரம் உன் பாதம்
வருடி வந்த அலைகளும்
அத்துமீற ஆரம்பித்து விட்டனவே!
உன் கூந்தல் கோதி வந்த காற்று
உன் சுவாசமாகி உன்னுள்
நுழைந்தெழுந்ததும்
இப்படிக் கள்வெறி கொண்டு விட்டதே!
போதும் கண்ணே,
உன்னால் ஒரு புயற் சின்னம்
உருவாவதற்குள் கிளம்பி விடு!
Thursday, August 9, 2007
கவிதை என்னைக் காதலித்ததில்லை!
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
10:31 PM
4
comments
Monday, July 30, 2007
யாரிந்த வந்தியத்தேவன்? எதற்காக நீர்க்குமிழி?
என் உண்மையான பெயர் வந்தியத்தேவன் இல்லை. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களே அது போல் நாமும் வைத்துக் கொண்டால் தான் என்ன என்று கொண்ட புனைப்பெயர் அது. ஒரு வேளை அபத்தக் களஞ்சியமாய் உளறிக் கொட்டினால் நான் தான் அது என்று சுத்து வட்டாரத்தில் தெரியக் கூடாது என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். எழுத்தாளர்களின் இந்த தனக்கு தானே பெயரிட்டுக்கொள்ளும் பழக்கமும் பிடித்திருக்கிறது. நமக்கு தான் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தாலே எழுத்தாளன் ஆகி விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறதே!
பொன்னியின் செல்வனை படித்து விட்டு அந்த தாக்கத்தில் "வானதி பதிப்பகம்" என்று பெயரிட்டார்களாம். அது மாதிரி ஒன்றும் எனக்கு கல்கியின் வந்தியத்தேவன் மேல் அசாத்திய பிரியம் கிடையாது. ஆனால் பெயர் பிடித்திருக்கிறது.
ஒரு மனிதன் என்பவன் அவன் எண்ணங்களால் ஆனவன் என்பதால் என் குலம், கோத்திரம், ஊர், பெயர் எல்லாம் முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன்.
எனக்கு சாப்பாட்டிலும் குழம்பு தான் பிடிக்கும். வாழ்க்கையிலும் குழம்பத் தான் பிடிக்கிறது. முடிந்த முடிவு என்பது எதிலும் கிடையாது. சரியாகத் தெரியும் ஒன்று பின்னர் தப்பாக தோன்றுகிறது. அதனால் குழம்பி குழம்பி எப்பொழுது எந்த இடத்தில் சோர்ந்து விடுகிறோமோ அது தான் பாதி நேரம் முடிவாகி விடுகிறது என்று நினைக்கிறேன். இப்படி குழம்புவதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.
Inconsistency is the result of rationality - என்று நமக்கு சாதகமான பழமொழி ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு ஓட்டைப் பெருமை பட்டுக் கொள்ளலாம் இல்லையா?
நீர்க்குமிழி எதற்காக? படிக்கும் பார்க்கும் கேட்கும் விஷயங்களால் தோன்றி மறையும் எண்ணங்களை பதிவு செய்தால் தான் என்ன என்று தோன்றியது. (இதிலாவது ஒரு தெளிவு கிடைக்காதா என்ற நப்பாசை) அதனால் விளைந்தது தான் இந்த நீர்க்குமிழி.
கட்டுரையின் கருவை சீர்படுத்தி பேனாவின் மூலம் பிரசவிப்பதற்கு சற்று பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. (அதனால் தான் ஆங்கிலத்தில் Brain Child என்று கூறுகிறார்களோ?!) சில சமயம் குறை பிரசவம் ஆகி விடும் என்ற பயமும் இருக்கிறது. இத்தனைக்கும் எழுதப் போவது என்னமோ "காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்" வகையறாக்களைத் தான். முதலில் அதை உருப்படியாக சொல்ல முடிகிறதா என்று பார்க்க வேண்டும். இது எனக்காக எழுதும் ஒன்று என்றாலும், எதிலும் பாராட்டைத் தேடி அலையும் அசட்டு மனம் இதிலும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது.
நூலகத்தில் இருந்து நா. பார்த்தசாரதி புத்தகம் எடுத்து வந்தால் "அவன் வள வளனு எழுதுவான். அவனை ஏன்டா எடுத்துண்டு வந்த" என்று அம்மா கேட்பாள். அது போல ஆகி விட்டதோ என்ற பயத்துடனே இதை முடித்துக் கொள்கிறேன்.
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
1:05 AM
7
comments
