பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. நான் பல முறை யோசித்தது உண்டு - அது இரங்குமா இல்லை கிறங்குமா என்று!
சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து தான் பிரிட்டனே மயங்கி போய் இருக்கிறது. அனைத்து பத்திரிகையிலும் இவரைப் பற்றி தான் செய்தி.
யார் என்கிறீர்களா? அவர் தான் பிரெஞ்சு அதிபர் மனைவி - கார்லா ப்ரூனி . நீங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காக கீழே படம் ஒன்று.
சற்று நாட்களுக்கு முன் நம் குடியரசு விழாவுக்கு பிரெஞ்சு அதிபருடன் இவரும் வருவதாக இருந்தது. அப்போது இவர் காதலி மட்டுமே. கைரோவில் கட்டிப் புரள்வது, பிரமிட் முன் பின்னிக் கொள்வது என்று அமர்களபட்டுக் கொண்டிருந்தது இவர்கள் காதல் வாழ்க்கை. நம்மவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம். .கேர்ள் பிரெண்டை வரவேற்பது பற்றி Protocol எந்த புத்தகத்திலும் இல்லையாம்.சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ப்ரூனி வரவே இல்லை.(ஹும்! நாம் குடுத்து வைத்தது அவ்வளவு தான் !)
சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் தன் மனைவியுடன் இரண்டு நாள் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டார். இவர்கள் வருவதற்கு சற்று முன்பிருந்தே பத்திரிகைகளில் 'ப்ரூனா’யணம் தான்!
ப்ரூனி பிறந்ததிலிருந்து பருவம் எய்தியது வரை, பள்ளிப் படிப்பிலிருந்து பள்ளியறை தோழர்கள் வரை என சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் பெரிது படுத்தி எழுத பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பணி புரிந்தனர் பத்திரிகை நிருபர்கள்.
அவரின் பழைய காதலர்கள் எண்ணிக்கை அதிகமா? மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் எண்ணிக்கை அதிகமா? என்று பட்டிமன்றம் வைக்க சாலமன் பாப்பையாவை கூப்பிடலாமாம். (ரிஷி மூலம் ,நதி மூலம் ,கார்லா ப்ரூனி மூலம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று ஐம்பதில் ஆசை வந்த பிரெஞ்சு அதிபர் கூறுகிறார்)
ப்ரூனி ஒரு மாடல் அழகி ஆக இருந்தவர். பதினைந்து வருடம் முன்பு மாடலிங் உலகில் பிறந்த மேனியாய் திகம்பர சாமியார் ரேஞ்சில் இவர் அருள் பாலித்துக் கொண்டிருந்த காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இவர்கள் வரும் சமயம் பார்த்து வெளியிட்டது ஏல நிறுவனம் ஒன்று. கேட்க வேண்டுமா; வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது. "எப்படி இருந்த இவர் இப்போ இப்படி ஆயிட்டார் " என்று அந்த படத்தை போடாத பத்திரிகைகளே இல்லை.
இவர் என்ன ஆடை அணிவார்? (முதலில் ஏதேனும் ஆடை அணிவாரா?), எங்கெல்லாம் செல்வார், ராணி முன் எவ்வாறு நடந்து கொள்வார் என ஒரே பரபரப்பாய் பத்திரிகைகள் பேசிக் கொண்டன.
நடந்தது என்ன தெரியுமா? ப்ரூனி வந்து இறங்கியது தான் தாமதம்.
தோள் கண்டார் தோளே கண்டார் - அவர்
தொப்பி கண்டார் தொப்பியே கண்டார்!!
(பிரெஞ்சு அதிபரை எவர் கண்டார்? ஒருவரும் இல்லை.)
அவர் நடை அழகை சொல்வதா, உடை அழகை சொல்வதா? உச்சந்தலை தொப்பியை சொல்லவா (அந்த தொப்பி இப்போது பிரபலம். கீழே படத்தில் பார்க்கவும்), உள்ளங்கால் செருப்பை சொல்லவா ? என மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து தள்ளின இந்த பத்திரிகைகள்!
நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும் இன்னும் இளவரசராகவே இருக்கும் பிரின்ஸ் சார்ல்ஸ் அம்மணி விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே ஓடிப் போய் கையை பிடித்து முத்தமிட்டு விட்டார். இவராவது பரவாயில்லை. முதல் மந்திரி கார்டன் பிரவுன் வரும் போதே வாயை முத்தமிடுவது போல் போல் குவித்துக் கொண்டு வந்தார். நடுவில் பிரெஞ்சு அதிபர் வந்து விட - நல்ல வேளை - அவர் சற்று குள்ளமாய் இருப்பதால் களேபரம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என நினைக்கிறேன்.
பாராளுமன்றத்தில் கூட பிரெஞ்சு அதிபர் பேச்சை விட ப்ரூனியின் காலழகை காண்பதில் தான் அனைவருக்கும் கவனமாம்! என்ன சொல்வது போங்கள்!
தமிழ் பேசும் நல்லுலக நண்பர்களுக்காக நான் பொருக்கி எடுத்த புகைப்படங்கள்:
இப்பொழுதெல்லாம் தேவதைகள் தம் சிறகு உதிர்த்து கிறிஸ்டியன் டீயர் (Christian Dior) காஸ்ட்யூமில் வந்திறங்குகின்றனவாம்!!
உருகி வழிவது மெழுகுவர்த்தி மட்டும் அல்ல!
கார்லா ப்ரூனி அருகில் நிற்கும் பாட்டி யார் ? யாரோ இங்கிலாந்து ராணியாம்: (தலைப்பு கொடுத்தது இங்கிலாந்து பத்திரிகைகள்!)
தாத்தா பிலிப் (ராணியின் கணவர்) ராணியை கழற்றி விட்டு ப்ரூனி அருகில் அமர்ந்து விட்டார். ஆசை யாரை விட்டது!
இனியவை நாற்பது: அம்மணியின் வயதை சொல்கிறேன்:
பிரெஞ்சு அதிபருக்கு அரசியலில் ஏன் நாட்டமில்லை என்பது இப்போது புரிகிறது! 
கடைசியாய் ஒரு கவர்ச்சிப் படம் - கடற்கன்னிகளில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு? 
இதை கணினியில் தட்டிக் கொண்டு இருக்கும் போதே "hibernate" மோடில் இருந்து விழித்துக் கொண்டது மனசாட்சி. ஐடியல் உலகை விடுத்து பிராக்டிகலாக விஷயத்தை அணுகத் தெரியாது அதற்கு. அதனால் தான் அதை "hibernate" மோடில் அதிகம் வைத்து விடுகிறேன்!
பிரிட்டன் பத்திரிகைகளுக்குத் தான் பித்து என்றால் உனக்கு எங்கு போயிற்று புத்தி ? எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறதே! திபெத்திய போராட்டமும் சீன அடக்குமுறையும் , இராக்கிய தீவிரவாதமும் திணறும் அமெரிக்க படைகளும்...
போர் வெறும் 'போர்' ஐயா! (நான் மனதை ஐயா என்று விளிப்பது தான் வழக்கம். பா.ம.க. என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்). இஸ்ரேல் - பாலஸ்தீனம் பாரும் ; அங்கு பலருக்கு குண்டு வைப்பது தான் குலத் தொழிலாம். இலங்கை - விடுதலைப் புலிகள் பாரும் . நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பிராண்டிக் கொண்டு இருக்கிறார்கள்; தினத்தந்தியில் வரும் கன்னித் தீவு கதை தான் எல்லாம் - மனிதன் அடித்துக் கொள்வதற்கு முடிவுண்டா ?
சரி ! பெண்ணைப் பற்றியே எழுது - ஆனால் இந்திரா நூயியை பற்றியோ மீரா நாயரைப் பற்றியோ லீனா மணிமேகலையை பற்றியோ எழுதலாம் இல்லையா? இவர்கள் அல்லவா சாதனைப் பெண்கள்?
எழுதலாம்; அதற்காக அழகானவர்கள் எழுத லாயக்கில்லாதவர்கள் என்று இல்லையே! அழகு ஒன்றே போதுமே! ஆஸ்கர் ஒயிலடின் “picture of Dorian gray- வில் வரும் லார்ட் ஹென்றி சொல்வார் – “Beauty is a form of genius--is higher, indeed, than genius, as it needs no explanation... மேலும் இந்த அம்மணி vogue, elle பத்திரிகைகள் நடுவே தாஸ்தாவெஸ்கி புத்தகம் வைத்து படிப்பாராம். நீர் படித்து இருக்கிறீரா?
டால்ஸ்டாயின் அன்னா கரீனினா படித்தில்லயோ? இத்தனை காதலர்கள்?
அவர் சொந்த வாழ்க்கையை விடுமையா! இந்த அம்மணி பெரிய பாடகர். இரண்டு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று இருக்கின்றன இவர் ஆல்பங்கள். இதைக் கேட்டுப் பாரும். புரியும். எவ்வளவு அருமையாக இருக்கிறது;
வெறும் காத்து தான் வருது! கவர்ச்சிப் படம் பார்க்க விடும் கட்டுக்கதை இதெல்லாம். உனக்கே தெரியும்!
இந்த உலகில் இரண்டு வகையான மனம் உண்டு. ஆதரித்து பேசி நம்பிக்கை ஊட்டும் மனம். எதிர்த்து பேசி குழப்பி விடும் மனம். அதில் நீர் எந்த வகை என்று நீரே முடிவு செய்துக் கொள்ளும்!
குழப்பம் என்பது தான் சிந்தனையின் அறிகுறி; மற்றொன்றையும் நினைவு கொள்; பெண் புத்தி பின் புத்தி - எப்பொழுதும் பெண்ணையே நினைக்கும் புத்தி மற்றதில் பின் தங்கி விடும். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கிறது! ரோஜாவில் தானே முள் இருக்கிறது !
உளுத்து போன உபதேசம் ஐயா அதெல்லாம் ! "முள்ளிலும் ரோஜா மலர்கிறதே" இது தான் புது மொழி. கூனி அழகாகவா இருந்தாள்? அவளிடம் கூடத் தான் ஆபத்து இருந்தது! இது அழகியல் ஆராய்ச்சி ஐயா! சொல்லிய ஆசார வித்து எட்டில் இதைப் பட்டியலிட மறந்திருப்பார்கள்! அழகை ரசிப்பதில் குற்றமில்லை!
உலகத்தில் இருக்கிற எல்லா ஜொள்ளர்களும் தவறாமல் சொல்லும் சப்பைக் கட்டு! சபல புத்திக்கு மறு பெயர் !!
இடுப்பளவிலிருந்து கட்டை விரல் நீளம் வரை சொல்லும் சாமுத்ரிகா லட்சணம் எழுதியவர்களும் சபல புத்திக்காரர்களா? இதெல்லாம் ஆபத்தில்லாத ரசனைகள்!!
ஆரம்பத்தில் எல்லாம் ஆபத்தில்லாமல் தான் ....
போதும் ஐயா !! நம் சம்பாஷணையில் சுவாரசியமில்லை; இந்த பதிவில் பார்க்கத் தகுந்தது கார்லா ப்ரூனி படங்களே என்று நண்பன் தீர்ப்பெழுதி விட்டான் ; ஆக நீர் உறங்கச் செல்லும்!!
மனசாட்சியை 'hibernate' மோடில் தட்டி விட்டேன்.
இந்த மனசாட்சியுடன் ஒரே தொல்லை.
சரி அது கிடக்கிறது விடுங்கள் - யாரோ ஜெஸ்ஸிக்கா ஆல்பாவாம்; கொள்ளை அழகாம்! தெரியுமா உங்களுக்கு?
Monday, March 31, 2008
அழகு படுத்தும் பாடு !
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
9:37 PM
2
comments
Thursday, March 13, 2008
ஏனிந்த அசட்டுத்தனம்?
நம் ஊர் போலீஸ்கார மாமாவின் தொப்பை போல் அமெரிக்க வரைபடத்தில் மேற்கே சற்று உப்பிக் கிடக்கும் இடம் கலிபோர்னியா. இந்த தொப்பையில் தொப்புள் போல் இருப்பது அழகிய சான் பிரான்சிஸ்கோ நகரம். (தொப்பைக்கு மட்டும் தான் போலீஸ்கார மாமா. தொப்புளுக்கு சிம்ரனை நினைத்துக் கொள்ளுங்கள்!).
இந்த நகரத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது கோல்டன் கேட் தொங்கு பாலம். பின்னுள்ள மலைகளுக்கு இது ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல எனக்கு தோன்றும். என் அலுவலகத்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் இந்த சிவப்பு வண்ண பாலம் (இந்த கலருக்கு "international orange" என்று பெயர்) சற்று தொலைவில் தெரியும். மதியம் சாப்பிட்டு விட்டு மந்தமாக இருக்கும் நேரங்களில் இப்படி காலாற நடந்து சுற்றி வேடிக்கை பார்த்து விட்டு வருவோம். கூட வரும் நண்பர்கள் வாயில் 'ஹோமம்' வளர்த்துக் கொண்டு வருவார்கள்.
சரி, இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த கோல்டன் கேட் பாலத்திலிருந்து பசிபிக் பெருங்கடலில் யாரவது ஒருத்தர் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.
அமாவாசை, பௌர்ணமி என்று வந்து விட்டால் இங்கு யாருக்காவது பித்தம் தலைக்கு ஏறி விடுகிறதோ என்னமோ! இது தவறாமல் நடப்பதால் இங்குள்ள சுறாமீன்கள் கூட "இன்று மனித உணவு" என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு் காத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
காசியில் சென்று உயிர் விட வேண்டும் என்று நம்மூர் தாத்தா பாட்டிகள் நினைப்பது போல இது ஏதாவது புண்ணிய ஸ்தலமா தெரியவில்லை. அடுத்த முறை யாரவது குதிக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன். (என்னை முதலில் தள்ளி விட்டு விடுவார் என்று உள்ளுணர்வு சொல்கிறது.)
தண்டவாளத்தில் தலை வைத்தால் ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இங்கு அப்படி இல்லை. எகிறி குதித்த நான்கைந்து வினாடிகளில் மோட்சம் உறுதி. அந்த உயரத்தில் இருந்து எழுப்பதைந்து கிலோமீட்டர் வேகத்தில் சென்று மோதும் போது அது கடலாக இருந்தால் என்ன, கரையாக இருந்தால் என்ன - முடிவு ஒன்று தான். இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இது கூட காரணமாக இருக்கலாம்.
நம்மூரில் ' வாத்தியார் அடித்ததால் பன்னிரண்டு வயது பையன் தூக்கு மாட்டிக் கொண்டான்' என்று செய்தி படிக்கும் போது எனக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. எனக்கு அந்த வயதில் ஒழுங்காக முடிச்சு கூட போட தெரியாது. (இப்போது கூட தெரியாது. எப்பொழுதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் என்றால், அந்த தாம்புக் கயிறு முடிச்சு கூட என் அம்மா தான் போட்டு தருவாள். அவ்வளவு அசமஞ்சம் நான்! இந்த லட்சணத்தில் நான் 'boy scout-ஆக வேறு இருந்திருக்கிறேன்.)
சின்ன வயதில் இருந்து கூட்டாஞ் சோறு, கோலி சோடா, கடலை மிட்டாய் என்று விதம் விதமாய் தீனி போட்டு வளர்த்த உடம்பு; கஷ்டப்பட்டு கணக்கு, வரலாறு, சமூக அறிவியல் என்று வருடா வருடம் படித்து வளர்த்த மூளை. எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்து கொண்டு விடுகிறார்கள். என்ன அபத்தம்! இதை எல்லாம் நினைத்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அவர்கள் அசாத்திய - ஆனால் - அசட்டு துணிச்சல்காரர்களோ என்று தோன்றுகிறது. தற்கொலைக்கு "துணிந்தான்" என்று தானே சொல்கிறோம். இந்த துணிவை எது கொடுக்கிறது? அப்படி மக்களை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுவது தான் என்ன? யாரும் கொலை செய்வதைப் போல் பிளான் போட்டு இதை செய்வதில்லையே? சட்டென்று மூளை மக்கர் கிக்கர் செய்து விடுகிறதா?
ஜப்பானில் அணுகுண்டு போட்ட போது அந்த கதிரியக்க வீச்சில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கண்ணிழந்து, கை இழந்து - உயிரைத் தவிர வேறு என்னவெல்லாம் இழக்க முடியுமோ அவை எல்லாம் இழந்து - வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் இருந்த நிலையில் சொன்னார்கள். "Our fear is not of dying; but of living". அப்படிப்பட்ட சோகமா வந்து விட்டது இவர்களுக்கெல்லாம்?
கடன் தொல்லையால் சில ; காதல் தோல்வியால் சில; காரணமே இல்லாமல் சில. அதீத மன உழற்சிக்கு ஆட்பட்டு அந்த impulse-ல் எடுக்கப்படும் முடிவுகள் தானே இதில் பல. (வறுமையால் பூச்சி மருந்து தின்று இறந்து போகும் ஏழை விவசாயிகளைப் பற்றி ஒரு தனி பதிவு தான் போட வேண்டும்.)
இந்த தோல்விகளையும், பின்னடைவுகளையும் எதிர் கொள்ளும் மனமும் அறிவும் இல்லாமல் போவது ஏன்? உடலை பேணுவது போல் மனதை பேணுவதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதெல்லாம் தான் சான்று.
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
8:37 PM
2
comments
Wednesday, March 12, 2008
ஒரு சதுரங்கச் சக்கரவர்த்தியும் ஒரு சமூக சேவகரும்:
சதுரங்கச் சக்கரவர்த்தி - பாபி பிஷர்
சமூக சேவகர் - பாபா ஆம்தே.
இருவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தாங்கள் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இறப்பால் இணைக்கப்பட்ட இருதரப்பட்ட மனிதர்கள். இந்த வருடத்தின் ஜனவரி மாதம் பிஷரையும் பிப்ரவரி பாபாவையும் கொண்டு சென்று விட்டன.
இவர்களுக்கு என் அஞ்சலி.
பாபி பிஷர்:
சதுரங்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஏக போக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த சோவியத் வீரர்களை தனி மனிதனாக வென்று காட்டியவர் பிஷர். பிஷரை பற்றி அறிய இந்த மூன்று வரிகள் போதும்.
"Don't even mention losing to me. I can't stand to think of it." -- Bobby Fischer
Being a friend of Fischer obviously is no undivided pleasure, though being Fischer seems sadder." -- Hans Ree
My God, it is a miracle! Bobby is so kind, so friendly. He is normal!" -- Boris Spassky (on their first meeting before the '92 rematch)
சதுரங்கத்தில் அதிகம் நாட்டம் கொண்டு காஸ்பரோவையும், ஆனந்தையும், க்ராம்நிக்கையும் பற்றி நான் பேசிக் கொண்டு இருக்கும் போது என் அம்மா பாபி பிஷரையும் , ஸ்பாஸ்கியையும், பெட்ரோஷியானையும் பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்படி தான் எனக்கு பிஷர் முதலில் அறிமுகம். பிறகு ஒரு புத்தகத்தில் எவ்வாறு பதிமூன்று வயது பிஷர் , பைர்னை தோற்கடித்தார் என்று போட்டு இருந்தார்கள். அசந்து விட்டேன். தன் ராணியை தியாகம் செய்து எதிராளிக்கு தண்ணி காட்டி விட்டார். இதை "Game of the century" என்றே சொல்லி விட்டார்கள். நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு க்ளிக்கிப் பார்க்கவும்.
1972 - "match of the century" என்று கருதப்பட்ட போரிஸ் ஸ்பாஸ்கி உடனான உலக சாம்பியன் ஷிப். பிஷர் ஒரு விதத்தில் ஏகலவ்யன் போல் சுயமாக விளையாடி முன்னுக்கு வந்த ஒரு அமெரிக்க ஜீனியஸ். ஸ்பாஸ்கி சோவியத் சாம்பியன். போட்வின்னிக், கோர்ச்னோய், பெட்ரோஷியன், டால் என்ற ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான். சோவியத் அரசாங்கமே அவர் பின்னால்.
பனிப்போர் உச்சமாக இருந்த நேரம் அது. சோவியத் இதை ஒரு மானப் பிரச்சனையாகவே பார்த்தது. இந்த போட்டிக்கு முன்னாலும், அது நடக்கும் போதும் நிகழ்ந்த விஷயங்களை பார்த்தால் உளவுப் படங்களும், கதைகளும் தோற்று விடும். அப்படிப்பட்ட சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்தன. உதாரணத்துக்கு பாருங்கள் - பிஷர் தன் காயை நகர்த்திவிட்டு எழுந்து சென்று விடுவார். மீண்டும் தன் முறை வரும் போது தான் நாற்காலியில் வந்தமர்வார். அவர் எழுந்து செல்லும் போது நாற்காலிக்கடியில் எதோ ஒரு பட்டனை அமுக்கி விட்டு போய் விடுகிறார். அதன் அடியில் இருந்து எதோ கதிரியக்கம் வந்து ஸ்பாஸ்கி மூளையை தாக்கி அவரை யோசிக்க விடாமல் செய்கிறது என்று சோவியத் யூனியன் குற்றச்சாட்டு வைத்தது. விளையாடும் அறையை பரிசோதித்து கே.ஜி.பி.. ஒரு செத்த ஈயைத் தவிர வேறு எதுவும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிஷர் வென்று சாம்பியன் ஆனார்.
இதைப் பற்றி ஒரு அருமையான டாகுமெண்டரி யு ட்யுபில் இருக்கிறது - இங்கு க்ளிக்கிப் பாருங்கள்.
உலக அளவில் இது தான் அவர் கடைசியாய் விளையாடிய ஆட்டம். அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சோகம். தான் பயணம் செய்யும் விமானத்தில் கே.ஜி.பி. குண்டு வைத்து விடுமோ, சோற்றில் விஷம் கலக்குமோ என்றெல்லாம் பல வகையில் பயந்து மன உளைச்சல்களுக்கு ஆளாகி பல நாடுகளில் வசித்து பின்னர் கடைசியாக அவருக்கு முடி சூட்டிய நாடான ஐஸ்லாண்டில் தன் கடைசி காலத்தை கழித்தார்.
செஸ் விளையாட்டில் இவர் காட்டிய புதுமைகளும், செய்த புரட்சிகளும் ஏராளம். சதுரங்க சரித்திரத்தில் இந்த சக்கரவர்த்திக்கு என்றும் தனி இடம் உண்டு.
பாபா ஆம்தே:
ஏஞ்சலினா ஏன் இளைத்து விட்டார், பிரிட்னிக்கு ஏன் பித்து பிடித்து விட்டது என்ற செய்திகள் எல்லாம் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்த போது நடுவில் ஒரு இந்தியரை பற்றி செய்தி ஒன்று கண்ணில் பட்டது.
அமெரிக்க பத்திரிகையில் யார் இந்த இந்தியர் என்று படித்த போது தான் தெரிந்தது எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று. இவரைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போனதே என்று குற்ற உணர்ச்சி வேறு தொற்றிக் கொண்டது. (மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசங்களை வெள்ளித் திரையில் பார்த்து பழகியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் அதிகம் சுவாரஸ்யமாய் தெரிவதில்லையோ என்னமோ? )
குஷ்ட ரோகிகளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கும், ஒதுக்கும் சமுதாயத்தில் அவர்களுக்காக ஆனந்த வனம் கட்டியவர். கதராடை அணிந்து காந்தியக் கொள்கைப் படி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் தான் பாபா ஆம்தே.
நாற்பதுகளின் இறுதியில் ஒரு நாள் - மழையில் நடந்து போய்க் கொண்டிருந்த பாபா ரோட்டோரமாய் ஒரு மனிதன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். அந்த மனிதனுக்கு கையில் விரல்கள் இல்லை. புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை தின்றுக் கொண்டிருந்தன. (படிக்கும் போதே ஒரு அதிர்ச்சியாக இல்லை?!). முதலில் பயந்து ஓடியவர் மீண்டும் அந்த துளசிராமிடம் திரும்பி வந்தார். அவனுக்கு உணவும்,மழையில் நனையாமல் இருக்க ஒரு மூங்கில் பந்தலும் அமைத்துக் கொடுத்தார். அவனை அவர் இறுதி வரை மறக்கவில்லை. அன்று ஆரம்பித்தது தான் இவரின் வாழ்நாள் பயணம்.
ஜூன் 1951 - மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், ஒரு நொண்டி மாடு, ஒரு நாய், பதினான்கு ரூபாய் மற்றும் சில நோயாளிகள் - இவர்களை வைத்துக் கொண்டு தேளும் பாம்பும் நிறைந்த ஒரு கரடு முரடான நிலத்தை பச்சை பசுமையான ஆனந்தவனமாக மாற்றிக் காட்டி இருக்கிறார் இந்த பாபா - வித்தையால் அல்ல; வியர்வையால் !! பாவத்தின் சம்பளம் தான் குஷ்டம் என்று மக்கள் கருதி வரும் காலத்தில் அவர்களும் சுய மரியாதையுடன் வாழ வகை செய்திருக்கிறார்.
கேட் வின்ஸ்லெட்,கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், நிகோல் கிட்மன் என்று என் கனவுக் கன்னிகள் பட்டியல் நீள்கிறது. (ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட்டுக்கு தனியாகவும், கோலிவுட்டுக்கு தனியாகவும் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன்)அது போல இவரும் க்ரீடா கார்போ, நார்மா ஷியரெர் என்று வைத்திருந்தாராம். ஆனால் ஒரு துளசிராம் அவரை மாற்றி விட்டான்.
சொத்து, சுகம் துறந்து (தன் அப்பா பெரிய ஜமீந்தாராக இருந்தும் அவரிடம் இருந்து ஒரு சல்லிக் காசு பெறவில்லை), வேலை துறந்து,(காசு கொழிக்கும் வக்கீல் வேலை)கெளரவம் பார்க்காமல் (தலை மீது மனிதக் கழிவுகளை சுமந்து சென்று இருக்கிறார்)மற்றவர்களின் சேவைக்காக தன் வாழக்கையை அர்ப்பணித்து இருக்கிறார்.
இந்த மகானுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
நாம் ஒவ்வொருவரும் இவர் செய்தவற்றில் கால்வாசி செய்தால் கூட இந்த உலகமே ஆனந்தவனமாக ஆகி விடாது?
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
12:29 AM
2
comments
Friday, January 25, 2008
ஹாரி பாட்டரும் வாண்டு மாமாவும்
எனக்கு வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு மணி நேரம் ரயில் பிரயாணம் செய்தாக வேண்டும். அது எனக்கு பிடித்தமானதும் கூட. ஏறி அமர்ந்ததும் தூக்கம் கண்களை தொற்றிக் கொள்ளும். அந்த நித்ரானுபவம் இருக்கிறதே...ஆஹா!!
ஆனால் சுற்றி அமர்ந்து வரும் சக பிரயாணிகள் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருப்பார்கள். அப்படி விழுந்து விழுந்து என்ன தான் படிக்கிறார்கள் என்று பார்த்தால் அதிகம் தென்பட்டது இந்த ஹாரி பாட்டர் புத்தகம் தான். அதை எழுதிய அம்மணி கஞ்சிக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது இங்கிலாந்து ராணியை விட அதிகம் சொத்து வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
நானும் அந்த படம் எல்லாம் பார்த்தேன். சுமார் ரகம் தான். (புத்தகம் தான் அருமை என்கிறார்கள் பாட்டர் விசிறிகள்). நான் சிறிய வயதில் படித்து வளர்ந்ததெல்லாம் வாண்டு மாமா, பூவண்ணன், அகிலன் போன்றோர் புத்தகங்கள் தான். அதிலும் வாண்டு மாமாவை மிஞ்ச ஆள் கிடையாது.
திருவையாற்றில் தாத்தா வீட்டில் ஒரு பெரிய மர அலமாரி நிறைய புத்தகங்கள் இருக்கும். கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மற்றும் இன்ன பிற தடி தடியான வரலாற்று புதினங்களிடையே நம் வாண்டு மாமாவும் இருப்பார். மூன்று மந்திரவாதிகள், கரடி கோட்டை போன்ற படக்கதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை. எப்பொழுது போனாலும் அதை படித்து முடித்து விட்டு தான் மற்ற புத்தகங்கள் எல்லாம். அவை அளித்த மகிழ்ச்சி பொன்னியின் செல்வனோ, யவன ராணியோ கொடுத்ததா என்பது சந்தேகமே! வாண்டு மாமாவிற்கு எப்படி சிறுவர்களின் நாடி பிடித்து எழுத தெரிந்தது என்று வியந்தது உண்டு.
மூன்று மந்திரவாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டையன், குட்டையன், நெட்டையன் என்று மூன்று பேர். கட்டையன் கண்ணை திறந்தாலே பார்ப்பதெல்லாம் எரித்து விடுவான். குட்டையன் வாயால் ஊதியே ஒரு புயல் காற்று உருவாக்கி விடுவான். நெட்டையன் ஒரு அடி எடுத்து வைத்தாலே சென்னையிலிருந்து செங்கல்பட்டு போய் விடுவான். இந்த மூன்று பேரை வைத்துக் கொண்டு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருக்கும் அழகான இளவரசியை மீட்க கிளம்பும் இளவரசன் கதை தான் மூன்று மந்திரவாதிகள். இதை படங்களுடன் யோசித்து பாருங்கள். யாருக்கு தான் பிடிக்காது?
இப்பொழுதும் கூட இந்த மாதிரி "Damsel in distress" ஐ காப்பாத்தும் "Knight in the shining armor" கதைகள் எல்லாம் சட்டென்று பிடித்து விடுகிறது. நம்மை இளவரசர் ரோலில் பொருத்திக் கொண்டு நாமே இளவரசியை காப்பாத்துவது போன்ற கற்பனைக் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் ஓடுவதால் தானோ என்னமோ! பின்னாளில் நண்பன் ஒருவன் "tales of the amber sea" என்று எஸ்டோனியா, லிதுவேனியா, மற்றும் லேட்வியா நாடுகளில் புழங்கிய fairy tales தொகுப்பிலிருந்து ஒரு கதை சொன்னான். மூன்று மந்திரவாதிகள் கதை வாண்டு மாமா இங்கிருந்து சுட்டு கொஞ்சம் மசாலா சேர்த்திருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தேகம்.
ஆரணி பொது நூலகத்தில் காசி என்ற ஒரு தாத்தா தான் நூலகர். அவருக்கு அடிக்கடி பீடி பிடித்தாக வேண்டும். அப்போதெல்லாம் "தம்பி, கொஞ்சம் பாத்துக்க" என்று என்னிடம் சொல்லி விட்டு லுங்கியை மடித்துக் கொண்டு டீக்கடை போய் விடுவார். அப்போது கிடைக்கும் தற்காலிக நூலகர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, வரும் புத்தகங்களில் வாண்டு மாமா புத்தகங்களை எல்லாம் ஆங்கில புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்து விடுவேன். (அந்த ஊரில் ஆங்கில புத்தகப் பக்கம் ஓரிருவர் தான் போவார்கள்). அப்படி எல்லாம் செய்து படித்த புத்தகங்கள் தான் புலி வளர்த்த பிள்ளையும், கண்ணாடி மனிதனும் , பலே பாலுவும் பறக்கும் டிராயரும், பலே பாலுவும் பாட்டில் பூதமும் போன்றவை.
பூந்தளிர்,ரத்னபாலா போன்ற புத்தகங்களில் வரும் அவர் தொடர் கதைகளும், படக்கதைகளும் அத்தனை தரம் வாய்ந்தவை. விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்து உருமாறும் விதியண்ணல் இன்றும் வியக்க வைப்பார் (இன்னும் நினைவு இருக்கிறது - அமைதியாய் ஒருவனை கொன்று விட்டு ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் - "இதுக்கு தான் நோக்காடு இல்லாத சாக்காடுனு பேர்).
இப்பொழுது வரும் சிறுவர் இலக்கியம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் வாண்டு மாமா போல் இன்னொருவர் வருவது கடினமே. எத்தனை எனிட் ப்ளைடன்களும், ஹார்டி பாய்சும்,நான்சி கிரேசும் , ஹாரி பாட்டர்களும் வந்தாலும் வாண்டு மாமா காட்டிய விந்தை உலகங்களுக்கு ஈடாகுமா?
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
5:03 PM
5
comments
Friday, December 28, 2007
இடைவெளி
மற்றவர் படிக்கும்படி எழுதுவது ஒரு கலை.அவ்வாறு படிக்க விழைபவரை உறங்க வைப்பது இன்னொரு கலை. முதற் கலையில் தேர்ச்சி பெறாவிடினும், இரண்டாம் கலையை முயன்றுவிடுவது என்று முடிவெடுத்தேன்.
அதற்கு கட்டுரையை விட சிறந்த கருவி வேறேது? படிப்பவரை கண்ணயர வைப்பது கட்டுரையின் தலையாய பண்பு அல்லவா? ஒரு கட்டுரையாளனின் வெற்றி வாசகன் எத்தனை விரைவில் 'கண்ணை கட்டுகிறது' என்று சொல்கிறான் என்பதில் உள்ளது.
போன பதிப்பிற்கு பிறகு இத்தனை பெரிய இடைவெளி விழுந்து விட்டதால் இந்த இடைவெளி பற்றியே ஒரு கட்டுரை எழுதிவிடுவோம் என்று துணிந்தேன். இதோ அந்த கட்டுரை.
இடைவெளி தான் மனிதனுக்கு எத்தனை அத்தியாவசியமாகப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையைப் பற்றி இவ்வாறு சொன்னதாக கேள்வி - ஏற்ற இறக்க ஒலியில் சரியான இடங்களில் இடைவெளி விடுவது தான் இசை. ("sound punctuated with pauses at appropriate places).
நாம் மற்றவருடன் பழகும் போதும் அவரவருக்கு ஏற்றபடி தகுந்த இடைவெளி விட்டு தான் பழகுகிறோம் இல்லையா? இன்று கட்டி புரண்டு நாளை கல் எறிவதை விட என்றும் எட்ட நின்று சிரித்து பேசுவது சாலச் சிறந்தது அல்லவா?
இணை பிரியா காதலர்கள் இடையேயும் இடைவெளி தேவையாம். இந்த தற்கால பிரிவு அவர்களிடையே பாசத்தை (தாபத்தையும் கூட!) அதிகப்படுத்துவதாக காதல் வல்லுனர்கள் சொல்லுகின்றனர். அனால் இந்த இடைவெளியும் அளவோடு இருக்க வேண்டும். அதிக இடைவெளியினால் காதலிக்கு பசலை நோய் வந்து உடல் மெலிந்து வளையல் ஒட்டியாணம் ஆன கதை எல்லாம் ஒரு சங்க கால பாடல் சொல்கிறது.(ஆனால் இந்த காலத்தில் அவ்வாறு எல்லாம் யாரும் காத்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.)
வள்ளுவர் கூட பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், பசப்பறுபருவரல் என்று பல அதிகாரங்கள் இயற்றி இருக்கிறார். காமத்துப்பால் - கற்பியல் முழுவதும் இது தான் - பிரிந்த காதலனை எண்ணிப் புலம்புதல்.
சில இடங்களில் இடைவெளி கூடாது என்கிறார். பின் வரும் குறளை கவனிக்க!
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
காற்றும் புக முடியாதபடி இடைவெளி இல்லாமல் இறுக்கித் தழுவுதல் இன்ப உறவுக்கு வழி வகுக்கும் என்கிறார்.
பின்னர் அவ்வாறு குளிர்ந்த காற்று புகுந்து விட்டதால் கண்கலங்கும் பேதை பற்றி உறுப்புநலன் அறிதல் அதிகாரத்தில் கூறுகிறார்.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
மூளைக்கும் மனதிற்கும் கொடுக்கப்படும் இந்த சிறு ஓய்வு எத்தனை விந்தைகளை செய்கிறது. பல கதைகள் கேட்டு இருக்கிறோம். எவ்வாறு கனவில் பலருக்கு அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் தோன்றுகின்றன என்று. தையல் இயந்திரம் கண்டு பிடித்தவருக்கு எவ்வாறு ஊசி முனையில் ஒரு ஓட்டை வைக்க வேண்டும் என்று தோன்றியது? அவரது கனவில் வேல் ஏந்திய ஆதிவாசிகள் அவரை சுற்றி நாட்டியம் ஆடுகிறார்கள் (அருமையான உணவு அகப்பட்டு விட்டது என்று தான்!). அப்போது அவர் வேலின் நுனியை கவனிக்க, அதில் ஒரு சிறு துவாரம் இருந்திருக்கிறது. பிறந்தது ஊசி!
கணித மேதை ராமானுஜம் கணக்கு போட்டது அத்தனையும் கனவில் தானாம். அத்தனை பார்முலாவும் நாமக்கல் என்ற தெய்வம் கனவில் சொன்னதாக அவர் கூறுகிறார். விழிப்பு நிலையில் மூளைக்கு அதிக வேலை குடுப்பவர்களுக்கு கனவு நிலையில் பதில்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மூளைக்கு குடுக்கும இந்த இடைவெளியில அது போய் ஆழ்மனத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறது போல.
நான் மூளைக்கு கொடுக்கும் அதிக பட்ச வேலையே கண்டக்டரிடம் பஸ் டிக்கெட் வாங்கியவுடன் நமக்கு மீதி சில்லறை எத்தனை தர வேண்டும் என்று போடும் கணக்கு தான். ஆகையால் எனக்கு வருவதெல்லாம் உருப்புடாத கன்றாவி கனவுகள் தான்! அதுவும் விழித்தவுடன் மறந்தும் விடுகிறது.
இடைவெளியின் அவசியம் உணர பேருந்து பிரயாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் பயப்படும் விஷயம் அது. சில ஓட்டுனர்கள் பிரயாணத்தின் நடுவே இடைவெளி விடுவதே இல்லை. அடித்து தள்ளிக் கொண்டு பறப்பதாக நினைப்பு. அத்தனை நேரமும் அடக்கி வைத்து அவஸ்தைபடுபவர்களுக்கு தானே தெரியும். அதனாலேயே பேருந்தில் பிரயாணம் என்றாலே தண்ணீர், இளநீர் எதுவும் குடிப்பது இல்லை.
இடைவெளியின் அத்தியாவசியத்தை இதை விடவும் உணர்த்த ஒன்று இருக்கிறது - சினிமா கொட்டகை. பல படங்கள் நமக்கு பாதியில் எழுந்து போக ஒரு வாய்ப்பு அளிக்கிறதே! அதை விடுங்கள், தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிம்ரனின் சிங்காரமே அவர் "இடைவெளி" தானே!
தமிழ் கவிஞர்களின் கற்பனை ஊற்று பெருக்கெடுத்து கரை புரண்ட ஓடுவதும் இங்கு தான்!
"பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை !!"
இடையும் இறைவனும் ஒன்று என்று சொல்லியாகி விட்டது! இதற்கு மேல் நாம் என்ன சொல்ல!
சற்று இடைவெளி விட்டு பார்ப்போமா?
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
8:28 PM
2
comments
Monday, September 17, 2007
குவாட்டர் மகிமை
போன பதிப்பில் போட்ட கவிதையை படித்து விட்டு நண்பன் சொன்னான். மச்சான் தப்பா நெனச்சுக்காத "ஒண்ணும் ஃப்ரெஷ் அப்ரோச் இல்ல"
வேற என்ன மச்சான் எழுத சொல்ற? சங்ககாலத்துலேர்ந்து பெண்ணை மானுக்கும்,மீனுக்கும்,நிலவுக்கும் மலருக்கும் தானே ஒப்பிடறாங்க!
நீ வித்தியாசமா யோசி மச்சான். நல்லா யோசிச்சு எழுது.
இப்போ மட்டும் என்ன தூக்கத்துலயா கிறுக்கறோம் என்று எண்ணிக் கொண்டேன்.
என் கைக்குள் அடங்கும் மௌஸ் குட்டியே!
எனக்கு வண்ணம் காட்டும் காதோட் ரே ட்யூபே! னு சொல்லவா?(அது கூட எல்.சி.டி ஸ்கிரீனுக்கு மாறிட்டேனே! )
வித்தியாசமாய் யோசிப்பது எப்படினு ஒரே யோசனையாய் இருந்தேன்.
"என்ன லே...ஒரு மணி நேரமா விட்டத்த் வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்க.பல்லி எப்படி மேட்டர் பண்ணுதுனு ஆராய்ச்சி பண்ணுறியா லே? எதனாச்சும் புளுக்க போட்டுரப் போவுது லே ஒன் வாய்ல!"
பாசக்கார பாண்டி அண்ணன். எப்பவும் என் கவலையைத் தான் அவரும் படுவார்.
ஆஸ்கர் ஓயில்ட் சொல்லி இருப்பாரே - My own business always bores me to death; I prefer other people's. பாண்டி அண்ணன் மாதிரி யாரையாவது பார்த்து விட்டுத் தான் அவர் எழுதி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
பாண்டி அண்ணன் உண்மையில் நல்லவர். ஓரளவு படித்தவர்.வெகுளியாய் பேசுகிறாரா கேலி செய்கிறாரா என்று எனக்கு பாதி நேரம் தெரியாது.
அண்ணே!கவிதைக்கு ஃப்ரெஷ் அப்ரோச் வேணும்ணே!
என்னது களுதைக்கா?
ஆமா. கழுதைக்கு தான் ப்ரேஷ் அப்ரோச் வேணும்னு சொல்வாங்களா? கவி - கவி - கவிதை!
சரி சரி ரொம்ப விக்காத லே ! கவிதையா? என்னா லே ஏதாவது பொண்ணு மடக்கணுமா?
அதெல்லாம் இல்லீங்கண்ணே! நாட்டுல நாலு பேரு எழுதறத பாத்து நமக்கும் ஆசை.
அவன் அவன் இப்போ இப்படி தான லே அலையறீங்க. அன்னிக்கு என்னடானா அந்த கிறுக்கு பய கோபி மாடு வாலை தூக்கறத பாத்துட்டு "கவிதை கவிதை னான்.."
நானும் நம்ப சோடாபுட்டி வாத்தி பொண்ணு கவிதா தான் வருதுனு நெனச்சு எங்கடானு கேட்டேன்.
"வில் வளைத்தான் ராமன் - பிறந்தது ராமாயணம்
வால் வளைத்தது மாடு - பிறந்தது கோமியம்"
அப்படீங்கறான்.என்னடா இதுனா அது தான் கவிதைனு சொல்றான்.
ஒனக்கும் அந்த மாதிரி கவிதை வேணும்னா சொல்லு. நம்ம கோவாலு கிட்ட சொல்லி மாட்டு கொட்டா கிட்ட கூட்டி போவச் சோல்றேன்.
எல்லாரும் மாடு சாணி போட்றத பத்தியே எழுதிட்டா "ப்ரேஷ் அப்ரோச்" எங்கண்ணே?
அப்போ குதர லாயம் கூட்டி போவ சொல்லவா?
அண்ணே வெளையாடாதீங்க.
இந்தா லே குவாட்டர் அடி! காதல் கவிதைனா குப்புறப்படு
சோக கவிதைக்கு மல்லாக்க படு லே...
ஆஹா! புது விஷயமா இருக்கே!
அண்ணே குவாட்டர் அடிச்சுட்டு படுத்தா தூக்கம் வந்துடாதாண்ணே?
எலே மொதல்ல வாந்தி வரும் லே. அதுனால ஒடம்புக்குள்ள இருக்கற கெட்டதெல்லாம்
வெளியில போயிடும். அப்புறம் அடி மனசுலேர்ந்து சுத்தமான கருத்தெல்லாம் கவிதையா வரும் லே!அப்புறம் தான் லே தூக்கம் எல்லாம்!
தன்னிலை மறந்த நிலையில் ஆழ்மன எண்ணங்கள் வருவது தான் இதுவா? இதை வித்யாசமாய் சொன்னால் அது மீமெய்மியல்(ஸர்ரியலிஸம்)இல்லயா? ஆஹா!மனசுலே எது ஆழம்,எது மேலனு தெரியாத ஆள் நான்!
அண்ணே! அப்போ நான் எப்படி அந்த கருத்தெல்லாம் எழுதறது? கை நடுங்கிச்சின்னா ஒத்த கொம்பு ரெட்ட கொம்பெல்லாம் கூட ஒழுங்கா போட முடியாதுண்ணே!
நான் எதுக்கு லே இருக்கேன்!பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் கூட எழுதறத்துக்கு ஆள் வெச்சுருக்காங்களாம்.எதுக்குன்னு நினைக்கற?
அண்ணே! நான் குவாட்டர் அடிக்கறத்துக்கு என் மூத்தரத்த குடிச்சுட்டு படுப்பேன்ணே.ரெண்டும் ஒரே வாசனை தான் அடிக்குது.
கவிதை வேணும்னா இது. இல்லை எனக்கு மூத்திரம் தான் வேணும்னா பாத்ரூம் போ. மூத்திரம் குடிச்சசவன் எல்லாம் மொராஜி தேசாய் ஆவ முடியாது.அதையும் தெரிஞ்சுக்கோ!
தண்ணி அடிச்சவன் எல்லாம் கண்ணதாசன் ஆயிட முடியுமாண்ணே?
எலெ..வர வர வாய் அதிகமா போச்சு லே ஒனக்கு. இருட்டு கட வாசல்ல பாதி வாழ்க்கை சுருட்டு குடிச்சசவன் லே நானு. எனக்கேவா லே?
அண்ணே! இது தாண்ணே...
சொல்லணும் ஆனா சொல்லக் கூடாது...புதுக்கவிதை!
ஆங்?
அண்ணே "திருநெல்வேலிகாரனுக்கே அல்வாவா அப்படீங்கறத சொல்லாமலே சொன்னீங்க இல்ல?
அல்வானு சொல்லாம அல்வா குடுக்கறது தான் புது கவிதையா?" என்ன லே கொழப்பற?
"சொல்லணும் ஆனா சொல்லக்கூடாது
புரியணும் ஆனா புரியக்கூடாது
இது தானே புதுக்கவிதை"
(எனக்குள்)ஆஹா புதுக்கவிதைக்கு நாம்ப சொல்ற இலக்கணமே அதற்கான இலக்கியமா இருக்கே!
எலே குவாட்டர் அடிக்காமயே இப்படி பேசறியே லே நீ? பாரதி பாரதிதாசன் எல்லாம்
சொல்ல வந்தத புரியற மாதிரி சொல்லிட்டு தான லே போனாங்க!
அண்ணே! காலம் மாறிப் போச்சு.அதுக்கேற்ப கருத்து, அத சொல்றதுக்கான வடிவம் எல்லாம்
மாறி கிட்டு வருது. அந்த காலத்துல சீத்தலை சாத்தனார் எழுதுன மாதிரி இப்பொவும் எழுத முடியாமா? நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா எல்லாம் மூட்ட கட்டியாச்சு. அறு சீர் கழி நெடிலடி ஆசிரியப்பா எல்லாம் பத்தாம் க்ளாஸ் பசங்க படிக்கற விஷயம். தேவை இல்லாம தளை தட்டி எழுதறத்துக்கு புது கவிதையா சொல்லிட்டு போயிடலாம்.
என்னமோ சொல்ற லெ..புது கவிதை கொஞ்சம் வெவகாரமான மேட்டர்னு தான் தோணுது.
புரியாம தான் இருக்கு.ஆனா லே ஒண்ணு தெளிவா புரிஞ்ச விஷயம் எல்லாத்துக்கும் குவாட்டர் வேணும் லே...கபிலர் கூட கள்ளு குடிச்சுட்டு தான் பாரி ஓரி பத்தி எல்லாம் பாடினாறாம் லே.
ஆஹா அப்படியா? புதுசா இருக்கே?
இதுல என்ன லே புதுசு இருக்கு? கம்பனே பரணர் கிட்ட பிசச வாங்கணும். ராமர் விட்ட அம்பு ஏழு மரத்த தான் குத்தி நின்னுச்சு.ஓரி விட்ட அம்பு காட்டுல ஓடர விலங்கெல்லாம் குத்தி வந்து நிக்குதுங்கற ரேஞ்சுக்கு சொல்றாரு...எப்படி?
அண்ணே! உயர்வு நவிற்சி அணியா கூட இருக்கும்ணே! தப்பா சொல்லாதீங்க. நான் கூட என்னோட காதலிய பாத்துட்டு சூரியன் சந்திரன் எல்லாம் சேவகம் செய்யறதா சொல்லி இருக்கேன்.
லே மக்கா.. சூரியன் சந்திரன் எல்லாம் கிறுக்கு பயலுங்க. எவன் காதலியப் பாத்தாலும் கிறு கிறுத்து போயிடுவானுங்க...
(எனக்குள்)ஆஹா!அப்போ நண்பன் சொன்னது உண்மையா?
எந்த மாக்கானாவது முல்லைக்கு தேர் குடுப்பானா லே.ரெண்டு கை தட்டி சேவகனை கூப்டு ரெண்டு கொம்பு நடுறா னா நட்டுட்டு போறான் அவன். பாரி ஊத்திக்கொடுத்தார் இல்லெ?
அண்ணே!தெரியாத விஷயம் எல்லாம் அடிச்சு பேசக் கூடாதுண்ணே!
எலே ..அத்த விடு... இப்போ இத நீ குடிக்கிறியா இல்லயா?
குடுங்கண்ணே!இவ்ளோ சொல்லிட்டீங்க!
(பாட்டில் வாங்கி)அண்ணே!கழுகு படம் எல்லாம் வேற போட்டிருக்குண்ணே"
குடிச்சா பருந்தா பறப்ப னு சொல்றாங்க பாரு லெ. பாட்டில்ல புதுக்கவிதை. இவனுங்களும் சொல்றானுங்க ஆனா சொல்லல..
ஆஹா!
மூக்கை பிடித்து ரெண்டு மிடறு விழுங்கினேன். கவிதைக்கான தியாகம்னு மனதை ஆறுதல் படுத்திக்கிட்டேன்.
அண்ணே!ஒரே ஒரு சந்தேகம். இந்த பெண் கவிஞர்களும் தண்ணி அடிப்பாங்களா?
அவங்களுக்கு எப்படி கவிதை வருது?
அவங்களுக்கு எல்லாம் தண்ணி அடிக்கற புருஷன் இருந்துருப்பான்.அவன பாத்த சோகத்துல அவங்களுக்கும் கவிதை வருதோ என்னமோ! எலே, வேண்டாத விஷயத்த எல்லாம் பெறாண்டாத லே."
அப்புறம் எனக்கு குப்புற படுத்தது தான் தெரியும்.
மறு நாள் காலையில் எழுந்தேன். பாண்டியும் அப்பொழுது தான் எழுந்திருந்திருப்பார் போல.பாத்ரூம் போவதருக்கு ஆயத்தமாக கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு இருந்தார்.
எலே..நேத்து கம்பன், கபிலன் னு பேசினத்துல ஒனக்கு ஒரு கவிதை வந்துருக்குல்லெ.
ராமர் அயோததினு ஏதோ சொல்லி இருக்க பாரு. புரியுது ஆனா புரியல...புது கவிதை னு தான் நெனைக்கறேன். ஆனா காதல் மேட்டரா தெரியல...போய் பல்லு வெளகிட்டு வரேன்...
பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாளில் ஆறு வரியில் எழுதி இருந்தார்...தலைப்பு வேறு அதற்கு!
பயிரை மேயும் வேலிகள்:
----------------------
ராம பாணம்
அயோத்தி மக்களையே தாக்கும் பொழுது
புத்த போதி மரங்கள்
கயாவில் அமைதி காத்தன
இந்த மெடூசாவின் தலைகள்
ஹெர்கூலிய முயற்சியையும் விஞ்சியவை!!
எனக்கும் புரியுது ஆனா புரியல. ஆஹா! எனக்கும் புதுக் கவிதை வந்துடுச்சா?
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
1:02 AM
4
comments
Thursday, August 9, 2007
கவிதை என்னைக் காதலித்ததில்லை!
கவிதையுடனான என்னுடைய உறவு சற்று நீண்டது தான். ஆனால் பலமானது அல்ல! தொட்ட குறை விட்ட குறையாகத் தான் பழகி வருகிறோம் நானும் கவிதையும்!
ஏழாம் க்ளாஸ்,எட்டாம் க்ளாஸ் படிக்கும் போது பாரதியின் பாடல்களை படித்து விட்டு நாமும் கவிதை எழுதினால் என்ன என்று தோன்றியது. அதற்கென்று ஒரு புத்தகம், ஜீவா என்ற புனைப்பெயர் வேறு! என் அருகில் யோகேஷ் என்று ஒரு நல்ல பையன். நான் என்ன எழுதித் தந்தாலும் வாங்கி படித்து 10/10 போட்டு V.good போட்டுத் தருவான். அதனால் அவனிடம் மட்டுமே குடுத்து வந்தேன். அவனுக்கும் பெருமையாய் இருந்ததோ என்னமோ,நாம் கவிதை எல்லாம் மதீப்பீடு செய்கிறோம் என்று!
அப்போது கவிதை என்றால் எனக்கு எதுகையோ அல்லது மோனையோ இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டாலே கவிதை தான்.
ஒரு நாள் அம்மாவிடன் எடுத்து கொண்டு போய் நீட்டினேன். குழாய் அடிச் சண்டை என்ற பெயரில்.
முண்டமாய் முட்டி நிற்கும் அண்டாக்கள்
முடமாய் வாய் பிளக்கும் குடங்கள்
கொண்டைகள் போடுகின்றன இங்கே சண்டைகள்!
என்னடா இது! முண்டம்,முடம்னு! ஏதாவது நல்லதா எழுதிண்டு வாடா என்றாள்.
சரி, நாட்டுக்கு நாமும் அறிவுரை சொல்வோமே என்று வேறு ஒன்று எழுதிக் கொண்டு போனேன். எல்லாவற்றிலும் நான்கு வரிகள் தான் ஞாபகம் இருக்கிறது.
படகான வாழ்க்கையிலே
பங்கம் ஏதும் நேராமல்
பக்குவமாய் நீ ஓட்டி
பல காலம் சிறந்திடுவாய்!
அட பரவாயில்லாயே! என்றாள்.
நமக்குத் தான் எதை எழுதினாலும் நாலு பேரிடம் குடுத்து பாராட்டு வாங்க வேண்டுமே. ஆனால் இது ஒரு வகையில் நல்லதும் கூட. சில பேர் கர்வ பங்கம் செய்து விடுவார்கள். குப்பையாய் எழுதிவிட்டு கும்மாளம் அடிக்காதே என்று!
எனக்கு அப்படி கர்வ பங்கம் செய்தவன் என் அக்கா பையன்.
என் கவிதை புத்தகத்தை படித்து விட்டு "என்னடா எழுதி இருக்க,எல்லாம் வேஸ்ட்" னு சொல்லிட்டான். அப்போது தான் எனக்கு அந்த யோகேஷ் எவ்வளவு நல்லவன் என்று புரிந்தது !
டேய்,ஒண்ணு கூட தேறாதா?
இதோ இது பரவா இல்லை என்றான்.
இன்னும் அந்த "கவிதையில்" எனக்கு ஞாபகம் இருக்கும் வரிகள்.
சிக்கலான விஷயத்துக்கு
சித்திரகுப்தன் போதவில்லை
எருமை மாடோ சோம்பேறி
எங்கேயுமே செல்வதில்லை
புரவி வாங்கி புவிக்கு
புத்துணர்வுடன் கிளம்பிய எமனின்
பருத்த உடலை சுமந்து குதிரை
பறந்து செல்ல முடியவில்லை
பிறகு அந்த குதிரை கீழே விழுந்து,எமனும் சேர்ந்து விழுந்து,அவன் மீசையில் எத்தனை மண் ஒட்டியது,கணிதப்புலிகளே கணக்கிடுங்கள் என்று வரும்.
அவன் "வேஸ்ட்" னு சொன்ன அத்தனை கவிதைகளும் மறந்து விட்டன - இன்னொன்றைத் தவிர.
அப்போது தான் எதுகை, மோனையைத் தாண்டி இயைபு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து ஒரு கவிதை எழுத வேண்டும் என்று ஆசை. டி.ஆர். பாணி வசனங்கள் மாதிரி.
இந்துக்களின் வேத நூல் மறை
இஸ்லாமியர் பார்ப்பது மூன்றாம் பிறை
இயேசுபிரானே கிறிஸ்தவர்களுக்கு இறை
இறை இல்லாதோர் இவற்றில் பார்ப்பதோ குறை
இவர்களின் கண்களை மறைப்பதோ திரை
இது விலகினால் குறை காண மாட்டார் - கடைசி வரை.
அதற்கு பிறகு நான் கவிதை என்ற பெயரில் எதுவும் எழுதவில்லை.
ஆரணியில் இருந்து சென்னை மாற்றலாகி வந்த நேரம். ஜீன்ஸ் பாண்ட், டி-ஷர்ட் கிளிகளுடன் கலந்துறவாட நுனி நாக்கு ஆங்கிலம் அத்தியாவசியம் என்று ஞானம் பிறந்த காலம். Kidnapped-இலும்,Lorna Doone-இலும் ஆரம்பித்து, Sidney Sheldon, Jeffrey archer என்று போய்விட்டது. தமிழ் கவிதைகளுடனான தொடர்பு பலவீனமான நிலைமையில் தான் அதற்கு அப்புறம். ஒரே ஒரு விதிவிலக்கு - ப்ளஸ் 2 தமிழ் பாட புத்தகத்தில் அப்துல் ரஹ்மான் எழுதிய வேர்வைத்(வியர்வைத்?)தாலி. என்ன ஒரு கவிதை!
இந்த ஆதிரைப் பருக்கைகள் விழுந்த பின்னர்
மழலை மண் வாயில் எல்லாம் தேவாரங்கள்.
நான்கு வருடங்கள் பின்பும் என்னை புத்தக விழாவில் அப்துல் ரஹ்மான் புத்தகத்தை வாங்க தூண்டிய வரிகள் அவை.
பத்து நாட்கள் முன்பு தான் தமிழ் வலையுலகை எட்டிப் பார்த்த கத்துக்குட்டி நான்.பல வலைப்பதிவுகளில் காதல் கதைகள்/கவிதைகள் படித்த தாக்கத்தில் ஏதாவது நமக்கும் வருமா என்று ஒரு முனைப்பாய் முக்கியதில் ஆறுதலாய் ஆறு வரிகள் வந்தன!
புதுக் கவிதை என்ற பெயரில் பிட்டு பிட்டு ஏழெட்டு பததிகளாய் வைத்து இருக்கிறேன் - பாருங்கள் ஏதாவது தேறுமா என்று!
பௌர்ணமி இரவில்:
--------------------------------------
கடற்கரை மணலில் கைவிரலால்
நீ கோலமிடும் அழகைக் கண்டு தான்
சிப்பிகள் தங்கள் முத்துப்பல் இழந்து
வாய் பிளந்து நிற்கின்றனவோ?
வளை பறிக்கும் நண்டுகள்
நீ கால் பதித்த இடங்களில் எல்லாம்
பாத பூஜை செய்கின்றனவோ?
உன் பார்வையின் வீரியம்
தாங்காமல் தான்
முகம் சிவந்து அந்திச்சூரியனும்
கடலில் குதித்து விட்டானோ?
நீ கண் சிமிட்டும் அழகைக்
காணத் தான் மேற்கில்
வீனஸ் தேவதையும்
இமைக்க மறந்து பார்க்கிறாளோ?
உன் பத்து விரல்களிலும்
குட்டி நிலவுகளை கண்டு
விண்மீன்கள் எல்லாம் உன்
பணிப்பெண்களாக வர
விண்ணப்பம் இடுகின்றனவோ?
உன் கன்னக்கதுப்பில்
முத்தமிட்டுச் சென்ற விட்டில் பூச்சிகள்
பிறவிப்பயன் பெற்ற மகிழ்ச்சியில் தான்
உயிர் நீத்து விடுகிறனவோ?
நேற்று வரை பாதி முகம் காட்டி
பவனி வந்த குறைமதி ஒன்று
உன் முன் மண்டியிடத்தான்
இன்று முந்தி வந்து நிற்கிறதோ?
வழி காட்டும் திசை காட்டிகள்
உன் காந்த விழிகளில் ஈர்க்கப்பட்டு
இடம் மாறிக் காட்டுவதால்
கப்பல்கள் கடலில்
தடம் மாறி செல்கிறதாம்!
இத்தனை நேரம் உன் பாதம்
வருடி வந்த அலைகளும்
அத்துமீற ஆரம்பித்து விட்டனவே!
உன் கூந்தல் கோதி வந்த காற்று
உன் சுவாசமாகி உன்னுள்
நுழைந்தெழுந்ததும்
இப்படிக் கள்வெறி கொண்டு விட்டதே!
போதும் கண்ணே,
உன்னால் ஒரு புயற் சின்னம்
உருவாவதற்குள் கிளம்பி விடு!
Posted by
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )
at
10:31 PM
4
comments
